கு. சிவமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. சிவமணி
பிறப்புகு. சிவமணி
(1932-08-01)1 ஆகத்து 1932
தஞ்சாவூர், தமிழ்நாடு
இறப்பு12 ஆகத்து 2022(2022-08-12) (அகவை 90)
புதுச்சேரி
இறப்பிற்கான
காரணம்
வயது மூப்பு
பணிதமிழ் பேராசிரியர், அகராதி தொகுப்பாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்
பெற்றோர்சிவகுப்புசாமி, பருவதத்தம்மை

கு. சிவமணி (1 ஆகத்து 1932 – 12 ஆகத்து 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் பேராசிரியர், அகராதி தொகுப்பாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.

பிறப்பும், கல்வியும்[தொகு]

இவர் தஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மை இணையருக்கு மகனாக 01.08.1932 இல் பிறந்தார். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

தொழில் வாழ்கை[தொகு]

இவர் தன் 24வது வயதிலேயே கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் முதல்வராக பொறுப்பு வகித்தார். பின்னர் பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அப்போது கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிலிருந்து விலகினார். அச்சமயத்தில் தமிழகத்தின் இரண்டாவது சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக இருந்தார் நீதியரசர் மகாராஜன். அவரை சிவமணி சந்தித்தபோது தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளர் பணியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு தயங்கிய கு. சிவமணியை வற்புறுத்தி அப்பொறுப்பை ஏற்கவைத்தார். அப்பணியின்போது 60 சட்டங்களை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். மேலும் 500க்கும் மேற்பட்ட சட்டங்களை மொழிபெயர்க்கும் பணியில் பிறருடன் ஈடுபட்டார். 1990இல் தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புதுவையில் அயல் பணியில் இருந்த கு. சிவமணிக்கு புதுச்சேரி அரசு இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி அவரிடம் இருந்த குறிப்புகளைக் கொண்டு சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் உருவாக்கினார்.[1] மேலும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியராக விளங்கினார்.

விருதுகள்[தொகு]

  • கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்வேள் விருது
  • தமிழக அரசின் தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் தேவநேயப் பாவாணர் விருது (ஒரு லட்ச ரூபாய் பண முடிப்புடன்)[2]

படைப்புகள்[தொகு]

'இலக்கியம்

  • பாரதியின் குயில்பாட்டு (1968);
  • பாரதியின் குயில் நுண்ணாய்வு (2008)
  • திருவள்ளுவர் கருத்துரை (அதிகார அடைவு உரை-புதிய அணுகுமுறை) (1970)
  • தமிழ்மொழி
  • தமிழ் இலக்கியம்
இலக்கணம்
  • தமிழ் இலக்கண அகராதி
  • நன்னூல் தெளிவுரை
வரலாறு
  • தமிழர் கல்வி வரலாறு
அகராதி
திறனாய்வு
  • The Age of Tolkappiyam: Dimensitions of Tolkappiyam
மொழிபெயர்ப்புகள்
  • The Summom Bonum of Tirukkural
  • இந்திய அரசமைப்பு ( அதிகாரமுறைத் தமிழாக்கம், இந்திய அரசுக்காக)
புதினம்
  • அன்புவலை (1960)
  • வேள்வி
கவிதைகள்
  • பாட்டரங்கம்
  • கவிதைச் சோலை
  • காதல் மலர்கள்
  • சிறுவர் பூங்கா
  • தமிழிசை மலர்கள்
  • கடற்கன்னி
  • இறைவா வா
நாடகங்கள்
  • கலிங்கத்துப்பரணி,
  • தமிழ்நந்தி (வரலாற்று நாடகங்கள்),
  • ஆசை நிழல் (வரலாற்று நாடகம்),
  • சங்க இலக்கிய ஓரங்க நாடகங்கள்
கட்டுரை
  • காற்று அலைகளிலே (வானொலி உரைகள்)

மறைவு[தொகு]

கு. சிவமணி 2022 ஆகத்து 12 அன்று மாலை புதுச்சேரியில் தனது 90 அகவையில் காலமானார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. சட்டம் - ஆட்சியச் சொற்களஞ்சியம்: 20 ஆண்டு கால உழைப்பு; 10 ஆண்டு காத்திருப்பு!- கு.சிவமணி பேட்டி, செல்வ புவியரசன், இந்து தமிழ் 2021 பெப்ரவரி 28
  2. ஆய்வறிஞர் கு. சிவமணிக்கு தேவநேயப் பாவாணர் விருது புதுச்சேரி தமிழ் அமைப்பினர் வாழ்த்து, செய்தி இந்து தமிழ் 2021 சனவரி 20
  3. "சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சிவமணி&oldid=3493514" இலிருந்து மீள்விக்கப்பட்டது