விஷ்ணு திகம்பர் பலூசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணு திகம்பர் பலூசுகர்
பிறப்பு(1872-08-18)18 ஆகத்து 1872
குருந்துவாட், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 ஆகத்து 1931(1931-08-21) (அகவை 59)
பணிஇந்துஸ்தானி இசைப் பாடகர்
பிள்ளைகள்தத்தாத்ரேயா விஷ்ணு பலூசுகர்

பண்டிட் விஷ்ணு திகம்பர் பலுஸ்கர் (Vishnu Digambar Paluskar) (1872 ஆகத்து 18  [1] - 1931 ஆகத்து 31 [1] ) இவர் ஓர் இந்துஸ்தானி இசைக்கலைஞராவார் . ரகுபதி ராகவா ராஜாராம் என்ற பஜனையின் அசல் பதிப்பை இவர் பாடியுள்ளார். மேலும், 1901 மே 5 அன்று காந்தர்வ மகாவித்யாலயா என்ற இசை நிறுவனத்தை நிறுவினார். இன்று கேட்கப்படுவது போல இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்பாடு செய்த பெருமையும் இவருக்கு உண்டு. இவரது அசல் குடும்பப்பெயர் காட்கில் என்பதாகும். [2] ஆனால் அவர்கள் பலூசு (சாங்லிக்கு அருகில்) கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் "பலூசுகர்" குடும்பம் என்று அறியப்பட்டனர்.

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

விஷ்ணு திகம்பர் பலூசுகர் பிரித்தானிய ஆட்சியின் போது தற்போதைய மகாராட்டிராவில் மும்பை மாகாணத்தின் தெற்குப் பிரிவின் கீழ் இருந்த ஒரு சிறிய நகரமான குருந்த்வாட்டின் மராத்தி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை திகம்பர் கோபால் பலூசுகர் ஒரு பஜனைப் பாடகராவார்.

இவர், ஆரம்பக் கல்விக்காக குருந்த்வாட்டில் உள்ள ஒரு உள்ளூர் பள்ளிக்குச் சென்றார். ஆனால் சிறு வயதிலேயே இவருக்கு சோகம் ஏற்பட்டது. தத்தா ஜெயந்தி என்ற இந்துத் திருவிழாவின் போது, ஒரு பட்டாசு வெடித்து இவரது இரு கண்களையும் சேதப்படுத்தியது. ஒரு சிறிய நகரமாக இருந்ததால், உடனடி சிகிச்சை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தனது கண்பார்வையை இழந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தனது பார்வையை மீண்டும் பெற்றார்.

சிறுவனின் திறமையை உணர்ந்த மிராஜ் மன்னர் பாலகிருஷ்ணபுவா இச்சல்கரஞ்சிகர் என்ற கற்றறிந்த இசைக்கலைஞரின் வழிகாட்டுதலின் கீழ் இவரை நிலை நிறுத்தினார். இவர் அவரிடம் 12 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 1896 ஆம் ஆண்டில் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையேயான உறவுகள் சிதைந்தன. [3]

இசைப் பயணம்[தொகு]

அதன் பிறகு இவர் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார். வட இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இசை மரபுகளைப் படித்தார். பரோடா மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் உள்ள பல அரச குடும்பங்களை பார்வையிட்டார். இசைக்கலைஞர்களின் ஆதரவுக்கு நன்கு அறியப்பட்டவர். ஆனால் இவர் சௌராட்டிராவில் ஒரு பொது இசைத்தன் மூலம் இந்திய இசையின் நீண்டகால பாரம்பரியத்தை உடைத்தார். அதுவரை அரண்மனைகள் அல்லது கோவில்களில் மட்டுமே இசை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இவர் மதுராவில் பேசப்படும் இந்தி மொழியின் விரஜ மொழி என்ற மொழியைப் படித்தார். இவர் பண்டிட் சந்தன் சௌபே என்பவரைச் சந்தித்து அவரிடமிருந்து துருபத் இசை வடிவத்தைக் கற்றுக்கொண்டார். 1901 ஆம் ஆண்டில், இவர் லாகூரை அடைந்தார். அங்கு இவர் ஒரு இசைப் பள்ளியை நிறுவ முடிவு செய்தார்.

காந்தர்வ மகாவித்யாலயா[தொகு]

1901 மே 5இல், இவர் காந்தர்வ மகாவித்யாலயா என்ற பள்ளியை நிறுவினா. இது சில வரலாற்று இந்திய இசையுடன் இந்திய பாரம்பரிய இசையில் முறையான பயிற்சி அளிக்கும் பள்ளியாகும். இது அனைவருக்குமான ஒரு திறந்த பள்ளியாகவும் அரச ஆதரவை விட, மக்கள் ஆதரவு மற்றும் நன்கொடைகளை பெற்று இயங்கிய முதல் பள்ளிகளில் ஒன்றாகும். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த பாரம்பரிய முறைக்கு இது ஒரு சவாலாக இருந்தது. பள்ளியின் ஆரம்ப கால மாணவர்கள் பலர் வட இந்தியாவில் மரியாதைக்குரிய இசைக்கலைஞர்கள் மற்றும் ஆசிரியர்களாக மாறினர். இது முன்னதாக அவமதிப்புடன் நடத்தப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு மரியாதை அளித்தது.

செப்டம்பர் 1908 இல், பள்ளியின் மற்றொரு கிளையை நிறுவ பலூசுகர் மும்பைக்குச் சென்றார். பணிச்சுமை அதிகரித்ததால், இவர் பள்ளியை இலாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றினார். அனைத்து மாணவர்களுக்கும் இடமளிக்க, இவர் கடன் வாங்கி, பள்ளி மற்றும் விடுதிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டினார். கடன்களை தீர்க்க, இவர் பல பொது இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ஆனால் 1924 இல் ஒரு கச்சேரி சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, இவரது கடனாளிகள் இவரது சொத்துக்களை இணைத்து பள்ளியை ஏலம் எடுத்தனர். [4]

மரணமும் மரபும்[தொகு]

1973 ஆம் ஆண்டு இந்தியாவின் அஞ்சல் முத்திரையில் பலூசுகர்

பலூசுகர் தனது 59 வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1931 ஆகத்து 21 அன்று இறந்தார். இன்று, பாலுஸ்கர் பாரம்பரிய இசைக்கலைஞர்களின் தொழிலுக்கு மரியாதை கொடுத்து, பாரம்பரிய கரானா அமைப்பிலிருந்து இந்துஸ்தானி இசையை மக்களிடம் கொண்டு சென்ற இசைக்கலைஞராகக் காணப்படுகிறார். இசை பால் பிரகாஷ் என்ற இசை குறித்த புத்தகத்தை மூன்று தொகுதிகளாகவும், இராகங்களில் 18 தொகுதிகளாகவும் எழுதியுள்ளார். இவரது சீடர்களான வினாயக்ராவ் பட்வர்தன், ஓம்கார்நாத் தாக்கூர், நாராயணராவ் வியாசு, பி. ஆர். தியோதர் ஆகியோர் புகழ்பெற்ற பாரம்பரிய இசைப்பாடகர்களாகவும் ஆசிரியர்களாகவும் ஆனார்கள். இவரது மகன் தத்தாத்ரேயா விஷ்ணு பலூசுகரும் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார்.

1973 சூலை 21 அன்று , இந்திய அரசின் அஞ்சல் மற்றும் தந்தித் துறை, ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டு பலூசுகருக்கு மரியாதை செலுத்தியது. [5] அதன் 2000 நூற்றாண்டின் இதழில், இந்தியா டுடே பத்திரிகை "இந்தியாவை வடிவமைத்த 100 பேர்" என்ற பட்டியலில் இவரையும் சேர்த்தது. [6] [1]

மேலும் காண்க[தொகு]

விஷ்ணு நாராயண் பட்கண்டே

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 GroveMusicOnline.
  2. "RMIM Archive Article "107"".
  3. Deva, B. Chaitanya. "An Introduction to Indian Music". Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பார்க்கப்பட்ட நாள் 10 May 2006.
  4. "Pt Vishnu Digambar Paluskar". MusicalNirvana.com. Archived from the original on 26 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 10 May 2006. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Visnu Digambar Paluskar (Musician)". IndianPost. பார்க்கப்பட்ட நாள் 10 May 2006.
  6. Kalidas, S. "Vishnu Bhatkhande and Vishnu Paluskar". India Today. Archived from the original on 14 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 10 May 2006.

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vishnu Digambar Paluskar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Wade, Bonnie C.; Kaur, Inderjit N.. "Paluskar, Vishnu Digambar". Grove Music Online (Oxford University Press). doi:10.1093/gmo/9781561592630.article.48868. 
  • Deva, B. Chaitanya (1981). An Introduction to Indian Music. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. 
  • Athavale, V.R. (1967). Pandit Vishnu Digambar Paluskar. National Book Trust.