பாண்டுரங்க சதாசிவ காங்கோஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டுரங்க சதாசிவ காங்கோஜ்
பிறப்பு7 நவம்பர் 1883
வர்தா, மகாராட்டிரம்
இறப்பு22 January 1967
நாக்பூர், மகாராட்டிரம்
அமைப்பு(கள்)கதர் கட்சி, பெர்லின் குழு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
அரசியல் இயக்கம்இந்து-ஜெர்மானிய சதி, இந்தியப் பொதுவுடைமை

பாண்டுரங்க சதாசிவ காங்கோஜ் (1884 நவம்பர் 7 - 1967 சனவரி 22) இவர் ஓர் இந்திய புரட்சியாளரும், அறிஞரும், விவசாய விஞ்ஞானியும், வரலாற்றாசிரியருமாவார். இவர் கதர் கட்சியின் நிறுவன பிதாக்களில் ஒருவராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1884 நவம்பரில் பிறந்தார் மராத்தி தேசஸ்த் பிராமணர் குடும்பத்தில் வர்தாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு விண்ணப்பம் எழுதும் பணியைச் செய்து வந்தார். [1] [2] இவர் தனது குழந்தைப் பருவத்தை வர்தாவில் கழித்தார். அங்கு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர், உயர்கல்விக்காக நாக்பூருக்குச் சென்றார். அந்த நேரத்தில் இவர் பால கங்காதர் திலகரின் தேசியவாத படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். 1900களின் முதல் தசாப்தத்தில், இவர் ஒரு பயணத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினாரர். இறுதியில் இவர் அமெரிக்காவில் குடியேறினார். அங்கே இவர் வாசிங்டன் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, (இப்போது வாசிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது). 1913 இல் பட்டம் பெற்றார்.

இந்திய சுதந்திர நடவடிக்கைகள்[தொகு]

இவரது வெளிநாட்டு ஆரம்பகால தேசியவாதப் பணியாக 1908 ஆம் ஆண்டு முதல், பண்டிட் கன்சி ராமுடன் சேர்ந்து ஒரிகானின் போர்ட்லேண்டில் இந்திய சுதந்திரக் கழகத்தை நிறுவினார். இவரது படைப்புகள் இவரை தாரக் நாத் தாசு உட்பட அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த மற்ற இந்திய தேசியவாதிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தின. முதலாம் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில், பசிபிக் கடற்கரை இந்துஸ்தான் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், பின்னர் கதர் கட்சியை நிறுவினார். இவர் அப்போது கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.இவர் 1911 இல் லாலா ஹர் தயாலை சந்தித்தார். இவர் ஒரு கட்டத்தில் மேற்கு கடற்கரை இராணுவக் கழகத்தில் சேர்ந்தார்.

முதலாம் உலகப் போரின் செயல்பாடுகள்[தொகு]

முதலாம் உலகப் போரின் மூலம், இவர் கலகத்திற்கான திட்டங்களில் ஈடுபட்டபோது இந்து-ஜெர்மன் சதித்திட்டத்தில் ஈடுபட்டார். இவர் போரின்போது ஐரோப்பாவிற்கு சென்றார். பின்னர் பெர்லின் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் மெசொப்பொத்தேமியாவுக்குச் சென்றார். 1915 கோடையில், இவர் இந்திய பயணப் படையினரிடையே இரகசியமாகப் பணியாற்றினார். கலகத்தைத் தூண்டியும், தேசியவாத இலக்கியங்களை பரப்பும் பணியிலும் ஈடுபட்டார். போரின் போது, இவர் துருக்கி, பெர்சியா வழியாக பலூசிஸ்தான் வரை வெவ்வேறு முஸ்லிம் போர்வையில் சென்று, கதரியாக்கப் பிரச்சாரத்தை வழியில் பரப்பினார். இவர் ஈரான்-பலூசிஸ்தான் எல்லையில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் மகேந்திர பிரதாப்பின் இந்தோ-ஜெர்மன் பயணம் ஆப்கானித்தான் அமீர் அபிபுல்லா கானை பிரிட்டிசு இந்தியாவுக்கு எதிராக அணிதிரட்ட முயன்றது. போரின் முடிவில், பெர்லின் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களைப் போலவே இவரும் பொதுவுடைமையை நோக்கி திரும்பத் தொடங்கினார். வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, எம்.பி.டி ஆச்சார்யா, எம்.என். ராய், அப்துர் ரப் பார்க் உள்ளிட்ட ஆரம்பகால இந்திய பொதுவுடைமைவாதிகளுடன் இவர் சோவியத் ஒன்றியத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. இவர் லெனினை மாஸ்கோவில் 1921இல் சந்தித்தார். அந்த நேரத்தில் இவரது தேசியவாத பணிக்காக, இவர் மிகவும் ஆபத்தான தனிநபராக இந்தியா திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டது.

கல்வி வாழ்க்கை[தொகு]

1920 களில் இவர் மெக்சிக்கோவுக்குச் சென்றார், அங்கு இவர் மெக்சிகோவின் தேசிய வேளாண் பள்ளியில் தாவரவியல் மற்றும் பயிர் இனப்பெருக்கம் பேராசிரியராக இருந்தார். 1936 ஆம் ஆண்டில், மெக்சிகோவில் பெல்ஜியப் பெண்ணான ஜீன் அலெக்சாண்ட்ரின் சிண்டிக் என்பவரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இவர் மெக்சிகன் சோள இனப்பெருக்கத் திட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் மெக்சிகன் அரசாங்கத்தின் வேளாண்மைத் துறையின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்தியா திரும்புதல்[தொகு]

இவரும், இவரது குடும்பமும் 1947க்குப் பிறகு இந்தியா திரும்பினர். விசாவிற்கான இவரது விண்ணப்பம் ஆரம்பத்தில் பிரிட்டிசு இந்திய அரசாங்கத்தின் தடை காரணமாக இந்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது. இவர் நாக்பூரில் குடியேறி பின்னர் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 22 சனவரி 1967 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen 1973.
  2. Gajānana Viśvanātha Ketakara (1966). Raṇajhuũnjhāra Dô : Pã. Kāḷa Prakāśana. பக். 1. https://books.google.com/books?id=uJFTAAAAYAAJ. "पांडुरंग सदाशिव खानखोजे हे देशस्थ ऋग्वेदी ब्राह्मण कुळातले आहेत." 

வெளி இணைப்புகள்[தொகு]