மதுர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதூர் கோயில்

மதூர் சிறீ மதானந்தேசுவரர்-சித்திவிநாயகர் கோயில் (Madhur Sree Madanantheshwara-Siddhivinayaka Temple) என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோருக்கான கோயில் ஆகும். இருந்த கோயிலானது காசர்கோடு நகரில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில், மதுவாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மைத் தெய்வம் மதனாந்தீசுரர் எனப்படும் சிவன், அதாவது காமம், ஆசை ஆகியவற்றை கொன்ற கடவுள் என்பதாகும். கோயிலின் முதன்மை தெய்வமாக சிவன் இருந்தாலும் இங்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கபடுவது கருவறையின் தெற்கே நிறுவபட்டுள்ள பிள்ளையாருக்கே ஆகும். இந்த கோயிலின் அர்சகர்கள் சிவல்லி பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காசி விசுவநாதர், தர்மசாஸ்தா, சுப்பிரமணியர், துர்க்கை பரமேஸ்வரி, வீரபத்திரர், குலிகா ஆகியோர் இந்த கோயிலின் பரிவார தெய்வங்களாக உள்ளனர். முதன்மை கருவறைக்குள் பார்வதி தேவியும் உள்ளார்.

வரலாறு[தொகு]

மதூரில் அழகிய ஒரு இடம்

மதுர் கோயில் முதலில் மதானந்தேஸ்வரர் (சிவன்) கோயிலாக இருந்தது. உள்ளூர் துளு மொகர் சமூகத்தைச் சேர்ந்த மதரு என்ற மூதாட்டி சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். துவக்கத்தில், சிறுவன் ஒருவன் பிள்ளையார் படத்தை விளையாடுத்தனமாக கர்ப்பக்கிருகத்தின் (கருவறை) தெற்கு சுவரில் வரைந்தான். நாளுக்கு நாள் அது பெரியதாகவும் புடைப்பாகவும் மாறியது; அதனால் சிறுவன் கணபதியை "போடாஜ்ஜா" அல்லது "போடா கணேசா" என்று அழைத்தான். குடகு, துளு நாடு, மலபார் போன்றவற்றின்மீது படையெடுத்த திப்பு சுல்தான் அடூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் போன்ற கோயில்களை இடிக்க விரும்பியதாக கும்ப்ளே செமியின் புராணக்கதை கூறுகிறது. ஆனால் கோயில் கிணற்றில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, கருவறையைத் தாக்கி இடிக்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு மலபார் நோக்கி சென்றார். ஆனால் தனது வீரர்களையும் இஸ்லாமிய மதகுருக்களையும் திருப்திப்படுத்த அவர் அடையாளத் தாக்குதலாக வாளால் வெட்டினார். கோயிலைச் சுற்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த குறி இன்னும் காணப்படுகிறது. [1] கோயிலின் கட்டிடக்கலையானது யானையின் பின்புறத்தை ஒத்த 3 அடுக்கு கஜபிருஷ்ட வடிவில் உள்ளது. இங்கு இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் உள்ளன.

ஒரு பார்வை[தொகு]

இந்தக் கோயிலானது துளு நாட்டின் பாரம்பரிய ஆறு பிள்ளையார் கோயில்களில் ஒன்றாகும். மற்ற ஐந்து கோயில்கள் மங்களூர் (ஷரவு மகாகணபதி), அனேகுடே, ஹத்தியங்கடி, இடகுஞ்சி, கோகர்ணா ஆகிய இடங்களில் உள்ளன.

இங்கு நடக்கும் பல்வேறு விழாக்களின்போது பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரள்கின்றனர். தற்போது இந்த கோவிலானது அரசால் நிர்வகிக்கப்படுறது. கோடை விடுமுறையில் இளம் மாணவர்களுக்கு வேத வகுப்புகள் இந்த கோயிலால் நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை சமசுகிருதப் பாடங்களும் அடங்கும். கோயில் அதிகாரிகளால் இவர்களுக்கு தங்குமிட வசதியும், உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுகிறது.

வழிபாடும், பிரசாதங்களும்[தொகு]

மதூர் கோயில் அருகே பாயும் மதுவாகினி ஆறு

மதூரின் புகழ்பெற்ற பிரசாதமான "அப்பம்" மிகவும் சுவையான தயாரிப்பாகும். இது நாள்தோறும் தயாரிக்கப்படுகிறது. கோயிலுக்கு வருபவர்களுக்கு எல்லா நாட்களிலும் கோயில் விற்பனையகத்தில் கிடைக்கிறது. இங்கு நிகழ்த்தப்படும் சிறப்பு பூசைகளில், "சஹஸ்ரப்பா" (ஆயிரம் அப்பங்கள்) மிகவும் சிறப்பானது. இந்த பூசையின்போது ஆயிரம் அப்பங்கள் படைக்கபட்டு வழிபடப்படுகிறது. பின்னர் இவற்றை பக்தர்கள் பிரசாதமாக தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் கொண்டு மகிழ்ச்சியுடன் செல்கிறனர். இங்கு நடக்கும் மற்றொரு சிறப்பு பூசையானது மூடப்ப சேவை என்பதாகும், இந்த வழிபாட்டில் மகாகணபதியின் சிலையை அப்பங்களால் மூடுகின்றனர். பிள்ளையார் சதுர்த்தி மற்றும் மதூர் பேடி ஆகியவை கோயில் நெரிசல் மிகுந்திருக்கும் காலங்களாகும். இந்த கோயில் பொதுவாக அனைத்து முக்கிய பண்டிகைகளிலும் சிறப்பு பூசைகள் நடத்தப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "TOURISM IN KASARAGOD". Archived from the original on 14 April 2012. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுர்_கோயில்&oldid=3709640" இலிருந்து மீள்விக்கப்பட்டது