ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
நாடுIndia
பிரதமர்நரேந்திர மோதி
துவங்கியது23 செப்டம்பர் 2018; 5 ஆண்டுகள் முன்னர் (2018-09-23)
தற்போதைய நிலைActive
இணையத்தளம்https://www.pmjay.gov.in/

ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (AB PM-JAY) [1] என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கை யின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும்.[2] இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் மக்கள்தொகை ஆனது ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மொத்தக் கூட்டு மக்கள்தொகையினை விட அதிகம். [1] இத்திட்டம் செப்டப்ம்பர் 2018 இல், இந்தியா அரசின் ஆரோக்ய மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் இன் உறுதுணையுடன் ஆரம்பிக்கப் பட்டது.

வரலாறு[தொகு]

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHPS) என்ற ஒரு திட்டம் பின்வரும் திட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது; தேசிய ஸ்வஸ்த்ய பீமா திட்டம், மூத்தக் குடிமக்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (SCHIS), மத்திய அரசு ஆரோக்கியத் திட்டம் (CGHS), மாநில அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்(ESIS) மற்றும் இவற்றைப் போன்ற திட்டங்கள்.

2017-ஆம் ஆண்டின் தேசிய ஆரோக்கியக் கொள்கை, ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மையங்களை, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்புக்கான அடித்தளமாக, தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தது. ஆயுஸ்மான் பாரத் திட்டம் அப்பார்வையை நடைமுறைப் படுத்துவதை இலக்காகக் கொண்டது.[3]

மத்திய அரசு ஆரோக்கியத் திட்டம் (CGHS) 1954-ஆம் ஆண்டு இந்தியாவின் ஆரோக்கிய மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் துவக்கப்பட்டது. அதன் நோக்கம், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நகரங்களின் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு முழுமையான மருத்துவ வசதி செய்து தருவதாகும். இத்திட்டம் தற்போது புபனேஸ்வர், போபால், சண்டிகர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைமுறையில் உள்ளது. சிறிய மருத்துவ நிலையங்கள் (dispensary or clinic) இத்திட்டதின் முதுகெலும்பாக உள்ளன. அவ்வப்போது சிறப்பு மருத்துவர்களாலும் மருதுவ அதிகாரிகளாலும் வேண்டிய உத்தரவுகள் வழிகாட்டுதல்கள் இந்த மருத்துவ நிலையங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அலோபதி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளோடு, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யோகா, யுனானி மற்றும் இயற்கை மருத்துவம் (Naturopathy) ஆகியவற்றின் மூலமும் மருத்துவச் சேவைகள் CGHS மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.[4]

ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 6 கோடி இந்திய மக்கள் மருத்துவச் செலவைத் தங்கள் சொந்த நிதியிலிருந்து செலவழிப்பதால் வறுமையில் தள்ளப்பட்டு வருகின்றனர். [2] 23 செப்டம்பர் 2018 இல் ஜார்கண்ட் மாநிலத்தின் ரான்ச்சி நகரில் ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (AB PM-JAY) துவக்கிவைக்கப்பட்டது. [3]. இத்திட்டம் வறுமையும் பலவீனமும் கொண்டுள்ள 50 கோடி இந்திய மக்களை மேற்சொன்ன நிலையிலிருந்து மீட்பதை தன் கனவாகக் கொண்டது.

முக்கிய அம்சங்கள்[தொகு]

  • இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 10.74 கோடி குடும்பங்கள் அல்லது தோராயமாக 50 கோடி இந்தியர்களுக்கு காப்பீடு அளிக்கிறது.[4]
  • இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் கட்டணமில்லாத(cashless) மற்றும் படிவங்கள் ஏதும் இல்லாத (paperless ) சிகிச்சையை மருத்துவமனைகளில் தருகிறது.[5]
  • 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார வகுப்புவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (SECC 2011) இன் படி, குறிப்பிட்ட தொழில் செய்வோர், அடிப்படை வசதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் பயணர்களுக்கான மின்னணு-அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
  • குடும்பத்திலுள்ளோர் எண்ணிக்கை, வயது பாலினம் ஆகிய எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனைவரும் இத்திட்டதில் சேர தகுதியுடையவர்கள்.
  • ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்வதற்கு முன்னரே இருக்கும் நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.
  • மருத்துவமனையில் உள் நோயாளியாக 3 நாட்கள் வரையும் அதைத் தொடர்ந்து வெளியிலிருந்து 15 நாட்கள் வரையும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்து மருத்துவச் செலவுகளையும் இத்திட்டம் ஏற்கிறது.
  • இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து இத்திட்டத்தில் இணைந்துள்ள நாட்டின் எந்த மாநிலத்திலுமுள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாறிச் சென்று சிகிச்சையைத் தொடரவும் இத்திட்டதில் அனுமதியுள்ளது.[6]
  • கொரோனா தீநுண்மி நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையும் இத்திட்டதின் மூலம் அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.[7]

திட்டத்தின் பரவல்[தொகு]

25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் PM-JAY திட்டத்தை ஏற்று செய்லபடுத்துகின்றன. ஒடிஷா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் மட்டும் இத்திட்டத்தைச் செயற்படுத்தவில்லை.[5] மே 2020 வரை, 12 கோடி பேருக்கு மின்னணு பயணர் அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு 1 கோடி பேர் சிகிச்சையும் பெற்றுள்ளனர்.[8] [6] இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 22,000 ஆக உள்ளது.[9] [7]

பிரச்சனைகள்[தொகு]

போலி ரசீதுகள் மூலம் மருத்துவமனைகள் அரசிடம் பணம் பெற முனைந்தது இத்திட்டம் சந்தித்த ஒரு பிரச்சனை. இதற்கு தக்க நடவடிக்கையாக 171 மருத்துவமனைகளை இத்திட்டத்தில் இருந்து நீக்கியது தேசிய மருத்துவ முகமை(National Health Authority). மேலும் 390 மருத்துவமனைகளுக்கு அடையாள எச்சரிக்கை நோட்டீஸ் (show cause notice) அனுப்பப்பட்டது.[8]

ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை சில நெறியற்ற தனியார் மருத்துவமனைகள் போலி ரசீதுகளை உருவாக்கித் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்தன. மருத்துவமனையிலிருந்து பல காலத்திற்கு முன்னரே விடுவிக்கப்பட்ட நோயாளிகளின் பெயரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லாத மறுத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை அளித்ததாகவும் மருத்துவமனைகள் காட்டி காப்பீட்டுத் தொகையை கோரியிருந்தன. .[9] உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டும் குறைந்தது 697 போலி சிகிச்சைகள் கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளுக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. .[10]

இருந்த போதிலும் முன்பிருந்த RSBY (தேசிய ஸ்வஸ்த்ய பீமா திட்டம்) செயல்பட்ட காலத்துடன் ஒப்பிடும் போது, அப்போதிருந்த பலவீனமான கண்காணிப்பு முறைகளைவிட ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் தகவல் தொழி நுட்ப கட்டமைப்பின் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களும் சிறப்பாகக் கண்காணிக்கப்பட்டு சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகின்றன. பல மருத்துவமனைகள் தடைசெய்யப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏமாற்றங்கள் செய்வதை கட்டுப்படுத்தும் விதமான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்வதால் இத்திட்டம் பக்குவம் அடையும்.[சான்று தேவை]

அதிகத் தொகைகளை காப்பீடாகக் கோரி வந்த விண்ணப்பங்களின் முதற்கட்ட ஆய்வானது அவற்றுள் பெரும்பாலானவை சிறு எண்ணிக்கையிலான மாவட்டங்களில் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இருந்தே வந்துள்ளன எனக் காட்டுகின்றன. அதிக கோரிக்கைகள் ஆண்களுக்கு சிகிச்சை அளித்தமைக்காகவே வந்தததால் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பாரபட்சம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

போலி பரிவர்த்தனைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும் நெறியற்ற தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி லாபமடையும் ஆபத்து சந்தேகமின்றி உள்ளது. .[11]

உசாத்துணை[தொகு]

  1. "आयुष्मान भारत राष्ट्रीय स्वास्थ्य संरक्षण (नेशनल हेल्थ प्रोटेक्शन) योजना - Ayushman bharat" (in en-US). Infnd. 2015-06-17. http://infnd.com/ayushman-bharat-yojana-in-hindi/. 
  2. "About Pradhan Mantri Jan Arogya Yojana (PM-JAY) | Ayushman Bharat I National Health Authority | GoI". pmjay.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  3. "Can PM Modi's Ayushman Bharat help healthcare startups scale?", தி எகனாமிக் டைம்ஸ், 25 February 2019
  4. Portal of India
  5. "10 days into launch, Ayushman Bharat caters to 23,387 claims worth Rs 38 crore", Business Today, 3 October 2018
  6. World, Republic. "Ayushman Bharat scheme crosses 1 crore beneficiaries; proud PM Modi speaks to the croreth". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.
  7. "Ayushman Bharat: Fresh push by National Health Agency to get hospitals on board". Indian Express. 26 November 2018. https://indianexpress.com/article/delhi/ayushman-bharat-fresh-push-by-national-health-agency-to-get-hospitals-on-board-5464090/. பார்த்த நாள்: 6 December 2018. 
  8. World, Republic. "171 hospitals de-empanelled, Rs 4.6 Cr penalty levied for committing fraud in PMJAY". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2020-06-11.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Ayushman Bharat: Hospitals use Bizarre Ways to Siphon Off Public Funds". Times of India. 15 August 2019. https://timesofindia.indiatimes.com/india/under-ayushman-bharat-how-hospitals-use-bizarre-ways-to-siphon-off-public-funds/articleshow/70654696.cms. பார்த்த நாள்: 18 August 2019. 
  10. "Hospitals Penalised for Irregularities in Ayushman Bharat Scheme". Hindu Business Line. 25 June 2019. https://www.thehindubusinessline.com/news/national/uttarakhand-hospitals-to-be-penalised-over-rs-1-cr-for-irregularities-in-ayushman-bharat-scheme/article28133763.ece. பார்த்த நாள்: 18 August 2019. 
  11. "Ayushman Bharat – PMJAY at one: A step closer to universal health coverage". ORF. 24 September 2019. https://www.orfonline.org/research/ayushman-bharat-pmjay-at-one-a-step-closer-to-universal-health-coverage-55807/.