பைதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைதர் தலைமையிலான மங்கோலியர்கள் விரோக்லாவ் நகரத்தைப் பயங்கரவாதத்திற்கு உட்படுத்துவதற்காக இரண்டாம் ஹென்றியின் தலையைக் காட்டுகின்றனர்

பைதர் சகதை கானின் ஆறாவது மகனாவார். 1235-1241 ஆம் காலகட்டத்தில் இவர் ஐரோப்பியப் படையெடுப்பில் தனது அண்ணன் மகன் புரியுடன் பங்கெடுத்துக் கொண்டார். இந்தப் படையெடுப்பு மங்கோலியாவில் "மூத்த சிறுவர்களின் படையெடுப்பு" என்று அறியப்பட்டது. போலந்தின் மீது படையெடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட மங்கோலிய இராணுவத்தை கதனுடன் இணைந்து இவர் தலைமை தாங்கினார். இவர்களுடன் ஓர்டா கானும் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பைதர் பல போலந்துக்காரர்கள், உருசியர்கள், செருமானியர்கள் மற்றும் மோராவியர்களைத் தோற்கடித்தார். 13 பெப்ரவரி 1241 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் உறைந்திருந்த விச்துலா ஆற்றைக் கடந்தனர். சன்டேமியர்ஸ் பட்டணம் கைப்பற்றப்பட்டுச் சூறையாடப்பட்டது. மேற்கு திசையில் 18 மார்ச் அன்று ஓர்டா மற்றும் பைதர் சிமியேல்னிக் யுத்தத்தில் டியூக் ஐந்தாம் போலேஸ்லாவ் (போர்க்களத்தில் இவர் இல்லை) தலைமையிலான போலந்து இராணுவத்தைச் சந்தித்தனர். போலந்துக்காரர்கள் கடும் தோல்வியைச் சந்தித்தனர். போலேஸ்லாவ் தனது துருப்புகளின் ஒரு பகுதியுடன் மோராவியாவிற்குத் தப்பினார். 22 மார்ச் அன்று மங்கோலியர்கள் கிராக்கோவ் முன் நின்றனர். அப்போது அந்நகரத்தின் பல குடிமக்கள் ஏற்கனவே தப்பித்து இருந்தனர். குருத்து ஞாயிறு அன்று மங்கோலியர்கள் பட்டணத்திற்குத் தீ வைத்தனர். எஞ்சியிருந்த மக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கைதிகளாகப் பிடித்தனர். மேலும் மேற்கு நோக்கி முன்னேறிய ஓர்டா மற்றும் பைதர் ஒபோல் என்ற இடத்திற்கு கிழக்கில் இருந்த பகுதியை அடைந்தனர். அங்கு டியூக் குண்டு மியேஸ்கோவின் இராணுவத்தைப் பின்வாங்க வைத்தனர். ரசிபோர்சு என்ற இடத்திற்கு அருகில் ஓடர் ஆற்றை மங்கோலியர்கள் கடந்தனர். ரசிபோர்சுவை விட்டு வெளியேறிய அதன் குடிமக்கள் தாங்கள் செல்லும்போது பட்டணத்திற்குத் தீ வைத்து விட்டுச் சென்றனர். விராத்ஸ்சாஃப் மங்கோலியர்களின் கைகளில் வீழ்ந்தது. எனினும் அங்கு இருந்த கோட்டை சரணடையவில்லை. கோட்டைக்கு எதிரான முதல் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. எனினும் முற்றுகைக்காக மங்கோலியர்கள் எந்த நேரத்தையும் வீணடிக்கவில்லை. கோட்டையை விட்டு விட்டு மேலும் மேற்கு நோக்கி முன்னேறினர்.

போலந்துக்காரர்கள், செக் நாட்டவர் மற்றும் தேவாலய புனித வீரர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த படையை லெக்னிகாவில் தோற்கடித்த பிறகு, ஓபோல் மற்றும் கிலோட்ஸ்கோவுக்கு இடையில் இருந்த ஓட்முசோவ் என்ற இடத்தின் அண்டைப் பகுதிகளில் பைதர் இரண்டு வாரங்களுக்கு முகாமிட்டார். 1241 ஆம் ஆண்டு மே மாதத்தின் ஆரம்பத்தில் மங்கோலியர்கள் மோராவியாவிற்குள் நுழைந்தனர். அங்கேரியில் இருந்த படு கானின் முதன்மை இராணுவத்துடன் இணைய அவர்கள் பிர்னோ வழியாகப் பயணித்தனர்.[1] பொகேமியா தொல்லைப் படுத்தப்படாமல் இருந்தபோதிலும், மோராவியா பெரிதும் பாதிக்கப்பட்டது. போலந்து, சிலேசியா மற்றும் மோராவியா ஆகிய இடங்களில் நடைபெற்ற அழிவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

1247 ஆம் ஆண்டு குயுக் கானைத் தேர்ந்தெடுத்த நிகழ்வில் பைதர் கலந்து கொண்டார்.

குழந்தை[தொகு]

அல்கு, இறப்பு. 1265 அல்லது 1266

உசாத்துணை[தொகு]

  1. Vladivoj, Vaclav Tomek. "Vítězství nad Tatary" (in Czech).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைதர்&oldid=2976589" இலிருந்து மீள்விக்கப்பட்டது