மௌனசுவாமி மடம், கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌனசுவாமி மடம் நுழைவாயில்
மௌனசுவாமி மடம் வளாகம்
மௌனசுவாமி மடம் விழா அறிவிப்பு

கும்பகோணத்தில் உள்ள மடங்களில் ஒன்று மௌனசாமி மடம் ஆகும். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கும்பகோணம் செல்லும் நகரப்பேருந்துகள் மொட்டை கோபுரத்திற்கு முன்பாக நிற்கும் முதல் நிறுத்தம் மௌனசுவாமி மடம் ஆகும். கும்பகோணம் மௌனசுவாமி மடத்துத்தெருவில் இந்த மடம் உள்ளது. கும்பகோணம் சிங்காரம்செட்டித் தெருவின் வழியாகவும், மேல மேட்டுத் தெரு வழியாகவும் இம்மடத்திற்குச் செல்லலாம்.

மௌனசுவாமிகள்[தொகு]

பல ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த ஒரு துறவி யாரிடமும் பேசாமல் இருந்ததால் அவர் மௌனசுவாமிகள் என்று அழைக்கப்பட்டுள்ளார். “மௌனப்பரதேசி“ என்றழைக்கப்பட்ட இவர் 1890களில் இம்மாவட்டத்தில் அதிகம் புகழ் பெற்றவராக இருந்துள்ளார். அவர் யாரிடமும் பேசியதில்லை; அவருக்கென்று இருக்க ஓர் இடம் இல்லை. ஆனால் எங்கு சென்றாலும் அவர் வரவேற்கப்பட்டார். அவருக்கு உணவு படைக்கப்பட்டது. தாம் நினைத்தவை கைகூடினால் அவருக்கு முன்பாக தேங்காய் உடைப்பதாக மக்கள் வேண்டிக்கொண்டு அவ்வாறு செய்யும் வழக்கம் இருந்தது.

சமாதி[தொகு]

அவர் சமாதியடைந்தபிறகு அவருடைய சீடருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்களைக் கொண்டு அச் சீடரால் மௌனசுவாமி சமாதியின்மீது ஒரு மடம் கட்டப்பட்டது. அந்தச் சமாதி அனைவராலும் வழிபடப்படுகிறது. அவருடைய படம் அந்த சமாதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [1] அவர் சமாதியடைந்த இடமே மௌனசுவாமி மடமாக உள்ளது. அண்மைக்காலமாக இங்கு சிறப்புப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

பிற மடங்கள்[தொகு]

கும்பகோணத்தில் உள்ள பிற மடங்கள் சங்கர மடம், வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகியவையாகும். இஷ்டகா மடம் என ஒரு மடம் இருந்தததாகக் கூறப்பட்டாலும் அதற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

பாடகச்சேரி சுவாமி[தொகு]

இவரைப் போலவே கும்பகோணத்தில் இருந்த மற்றொருவர் பாடகச்சேரி சுவாமிகள் எனப்படும் பாடகச்சேரி ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் ஆவார். அவர் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து, நாகேஸ்வரர் கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். [2]

மேற்கோள்[தொகு]

  1. F.R.Hemingway, Tanjore District Gazetteer, Government Press, Madras, 1906, p.219
  2. கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம், தெய்வத்திருமலர், 1985