சிற்றிங்கணுடையான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்றிங்கணுடையான் (இயற்பெயர் : கோயில்மயிலை) என்பவர் சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், உத்தம சோழன் போன்றோர் காலத்தில் சோழர் அரசில் அதிகாரியாக இருந்தவர் ஆவார். இவர் அக்காலத்தின் ஈங்கா நாட்டின் சிற்றிங்கண் என்ற ஊரைச் சேர்ந்தவர். இதனால் இவரது ஊரின் பெயராலேயே சிற்றிங்கணுடையான் என்று அழைக்கபட்டார். இவருக்கு பராந்தகமூவேந்த வேளான் என்ற பட்டம் சூட்டபட்டடு இருந்தது. இவர் திருவிடைமருதூர் கோயிலில் ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரியாக இருந்தார்.

பணிகள்[தொகு]

ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரியான சிற்றிங்கணுடையான் திருவிடைமருதூர் நகரத்தாருடன் கலந்து ஆலோசித்து, அவ்வூரின் ஆடல்வல்லானான சித்தி மறைக் காடானான திருவெள்ளறைச் சாக்கை என்ற கலைஞனைக் கொண்டு தைப்பூச நாளிலும், தீர்த்தமாடின பிற்றைநாள் தொடங்கி மூன்று நாட்களும், வைகாசித் திருவாதிரையின் பின் பிற்றை நாள் தொடங்சி மூன்று நாட்களும் ஆக ஏழு தடவை திருவிடைமருதூரில் உள்ள இறைவன் திருமுன் (சன்னிதி) ஆரியக்கூத்து (புராண இதிகாசக் கதைகளைத் தழுவிவரும் கூத்து) ஆடுவதற்குப் பதினாறு கலம் நெல் கொடுப்பதற்காக ஒரு வேலி நிலத்தை ஒதுக்கினர்கள்.

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் அக்காலத்தில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என அழைக்கப்ட்டது. திருக்குடந்தை ஊர் சபையினரிடம் இருந்து நிலத்தை விலைக்கு வாங்கிய சிற்றிங்கணுடையான், அந்த நிலவருவாய் கொண்டு, வேதம் வல்ல அபூர்விகள் (தல யாத்திசை செய்யும் பிராமணர்கள்) இருபதுபேருக்கும், ஐந்து சிவயோகிகளுக்கும் அக்காலத்தில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என அழைக்கப்ட்ட கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் அன்னம்பாலிக்க ஏற்பாடு செய்தார். இவர் இதுபோன்ற பல்வேறு அறக் கொடைகளை செய்துள்ளதாக கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகின்றார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. வேங்கடராமையா, சோழர் கால அரசியல் தலைவர்கள் நூல், பக்கம் 21-30, பதிப்பு பிப்ரவரி, 1977 கட்டுரை, சிற்றிங்கணுடையான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றிங்கணுடையான்&oldid=3717951" இலிருந்து மீள்விக்கப்பட்டது