கேசவாநந்த பாரதி வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kesavananda Bharathi is the case which saved Indian democracy; thanks to Shri Kesavananda Bharati, eminent jurist Nanabhoy Palkhivala and the seven judges who were in the majority.

தி இந்து - in April 2013, on the occasion of the 40th anniversary of the judgement., [1]

கேசவாநந்த பாரதி வழக்கில் (Kesavananda Bharati judgement) 24 ஏப்ரல் 1973 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது.[2] மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அரசிற்கே ஆதரவு அளித்தாலும் கூட அவர்களால் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறி அரசியலமைப்ப்புச் சட்டங்களை மாற்ற முடியாது என்பதை இந்த வலிமை மிகுந்த தீர்ப்பு தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு குறித்த புரிதலை கொண்டுவருவதற்காக கோலாக் நாத் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கவனிக்க வேன்டும். இந்த வழக்கை 13 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இறுதியில் ஆறுக்கு ஏழு என்ற வாக்கு கணக்கில், அரசிற்கு எதிராய் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பின் அதிகாரபூர்வ வடிவத்தை பெரும்பான்மையில் இருந்த நீதிபதி ஹன்ஸ் ராஜ் கண்ணா எழுதினார்.

வரலாறு[தொகு]

கோலக் நாத் வழக்கு[தொகு]

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கோலக்நாத் என்ற நில உடைமையாளரின் 500 ஏக்கர் விளைநிலத்தை பஞ்சாப் மாநில அரசு, நிலசீர்திருத்தச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தியது. பஞ்சாப் அரசின் செயலை எதிர்த்து கோலக்நாத் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி கொண்டுவந்த சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்த்தால் அதுவும் செல்லுபடியாகாது என்பது கோலக்நாத்தின் வாதம்.

1967 ஆம் ஆண்டில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரிக்க 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்தது. வழக்கை விசாரித்த பெருபான்மையான நீதிபதிகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ, நீக்கவோ செய்யவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

கோலக்நாத் வழக்கில் அப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றம் 5 நவம்பர் 1971 அன்று 24-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்த திருத்தங்கள் வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியற் சட்டப்பிரிவு 31-க்கு கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது. இந்தகாலகட்டத்தில் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேசவானந்த பாரதி வழக்கு[தொகு]

கேரள அரசின் நில சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த சுவாமி கேசவானந்த பாரதி தலைமையிலான எட்நீர் மடத்தின் விளைநிலங்கள் கேரள அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து மடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நாடாளுமன்றத்தின் அதிகார வரையறை குறித்து விசாரணை செய்து தீர்ப்பளிப்பதற்காக 13 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற அமர்வு 68 நாட்கள் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு 24 ஏப்ரல் 1973 அன்று வழங்கினார்கள். முடிவில் 6 நீதிபதிகள் நாடாளுமன்றத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பிரிவையும் மாற்றவோ அல்லது புதிதாக எந்தவித சட்டத்தை இயற்றவோ நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என 6 நீதிபதிகளும், நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர் இப்பெரும்பான்மையான தீர்ப்பின் படி இந்திய நாடாளுமன்றத்திற்கு கட்டுக்கடங்காத அதிகாரம் இல்லை என்றும், குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் இவற்றை மீறி எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தால் இயற்ற முடியாது என தீர்ப்பளித்தனர். நாடாளுமன்றம் சொத்து உரிமைகளை வரையறுக்கப்பட்ட அளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதையும் கேசவானந்த தீர்ப்பு வரையறுத்தது.

நாடாளுமன்றமோ, சடட மன்றமோ, தமக்கு வரையறுத்துக் கொடுத்துள்ள உரிமைகளை மீறிச் செயல்படும்போது, அவற்றின் அச்செயல் குறித்து முறையீடு செய்ய நீதி மன்றங்களை அணுகலாம் என்பது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதிக நாட்கள் விசாரித்த வழக்கு கேசவானந்த பாரதி வழக்கு மட்டுமே. (அடுத்ததாக அதிக நாட்கள் விசாரிக்கப்பட்டது அயோத்தி சிக்கல் வழக்கு).

இதனையும் காணக்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Datar, Arvind P. (24 April 2013). "The case that saved Indian democracy". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/opinion/op-ed/the-case-that-saved-indian-democracy/article4647800.ece. பார்த்த நாள்: 12 August 2013. 
  2. "Kesavananda Bharati ... vs State Of Kerala And Anr on 24 April, 1973". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 2012-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவாநந்த_பாரதி_வழக்கு&oldid=3593869" இலிருந்து மீள்விக்கப்பட்டது