தொண்டைமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தவர்கள். இவர்களின் கட்டுப்பாட்டில், தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும், தளபதிகளும் தொண்டைமான் என்றே அறியப்பட்டனர்.

தோற்றம்[தொகு]

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாகப் பிரித்து ஆண்டு வந்தார்கள். இவர்களே பல்லவர் எனப்பட்டனர்.

பல்லவர்[தொகு]

இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன.

சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.

சோழர் ஆட்சியில் தொண்டைமான்[தொகு]

வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான்[தொகு]

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள். கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.

"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)

என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை மாமல்ல புரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.

1

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்

அரச னரசர்கள் நாதன் மந்திரி

உலகு புகழ் கருணாகரன்றன தொருகை

யிருபணை வேழ முந்தவே!
2

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்

கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்

சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்

சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே
3

வண்டை வளம்பதி பாடிரே

மல்லையுங் கச்சியும் பாடிரே

பண்டை மயிலையும் பாடிரே

பல்லவர் தோன்றலைப் பாடிரே - பாடல் . 534

அறந்தாங்கி தொண்டைமான்[தொகு]

அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான்களும் [1] மற்றும் பாலைவனம் ஜமீன்களும், இவர்களின் வழி வந்தவர்களே.[2]

புதுக்கோட்டை தொண்டைமான்[தொகு]

இவர்கள் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர். இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை. ‘ஆலங் குடிநா டமரா பதிநாடு கோலங் கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டு நாடு திருப்பேரை யூர்நாடு மங்காத வல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ர ரேகை நா டையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனா டெனப் புரந்தே ஆளப் பிறந்த வரசர்கோன். என்பது விளக்கும்.

ஆவடை ரகுநாத தொண்டைமான்[தொகு]

ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான், இளையவர் நமன தொண்டைமான்.[3]

இரகுநாத தொண்டைமான் - 1686 - 1730[தொகு]

தொண்டைமான்களில் புதுக்கோட்டை நகரத்தை உருவாக்கிய பின் முதல்வர் மன்னர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை யென்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினர்.

தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது. இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தாம்

ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீமையை அந்த மன்னரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார். கள்ளர் சீமை பிரிந்து தன்னரசு நிலை பெற்றது

விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769[தொகு]

இவருக்குச் சிவஞானபுர துரைத் தொண்டைமான் என்றும் பெயருண்டு. இவர் பட்டத்துக்கு வந்தவுடன் தமது சகோதரர்களாகிய இராஜகோபால தொண்டைமான், திருமலைத்தொண்டைமான் என்னும் இருவர்க்கும் இரண்டுபாளையப்பட்டுகளை அளித்து, தமக்கு உதவியாக வைத்தக் கொண்டனர்.

ஹிஸ் ஹைனெஸ் பிரகதம்பாதாஸ் ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 8 (1839 – 1886)

இவர் 1876-ல் தம் மூத்த புதல்வியின் மூன்றுவது குமாரரைத் தத்து எடுத்துக்கோண்டார். 1884-ல் இந்திய சக்கரவர்த்தினியாகிய விக்டோரியா மகாராணியார் இம்மன்னர்க்கும், இவருடைய சந்ததியார்க்கும் பதினொரு மரியாதை வேடுகள் போடும் நிரந்தர உரிமையை அளித்தார். இவ்வரசர் காலத்திலேயே தந்தி, தபால் ஆபீசுகள் ஏற்பட்டன. 2-வது வகுப்புக் காலேஜும் ஏற்படுத்தப்பெற்றது. இவர் 1886-ல் தமது ஐம்பத்தேழாவது வயதில் விண்ணுலகடைந்தார்

பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்.

புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் கடைசி மன்னராகவும் புதுக்கோட்டை தொண்டைமான் பரம்பரையின் 9 ஆவது மன்னராகவும் விளங்கியவர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான். இம்மன்னரின் காலத்தில் திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் புதிய புகை வண்டித்தடம் 1929 இல் தொடங்கப்பட்டது. 1928 இல் நகரில் மின்சார வசதி செய்யப்பட்டது. மன்னரின் உபயோகத்திற்காக புதிய அரண்மனை கட்டப்பட்டு. 1929 இல் முடிவுற்றது. மன்னர் 1930 ஆம் ஆண்டு இங்கு குடியேறினார். இந்திய வைஸ்ராய் மார்க்கியூஸ் வெல்லிங்கடனும், அவரது துணைவியாரும் இவரது ஆட்சியின் போது 1933ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர். 1947 இல் டெல்லி சென்ற மன்னர் மகாத்மா காந்தியை சந்தித்து உரையாடினார். 1948 இல் மகாத்மா சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அவரது ஈமக்கிரியை நாளில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். 1948 மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் அழைப்பினை ஏற்று 1948 மார்சு 3ஆம் நாள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார். அப்போது புதுக்கோட்டை கஜானாவில் இருந்த ரொக்கங்களையும், தங்கம் போன்ற ஆபரணங்களையும் மத்திய அரசிடம் ஒப்படைத்தார். மேலும் பல கட்டிடங்களையும், மன்னர் நிர்வாகத்தில் இருந்த அரசர் கல்லூரியையும் அரசிடம் ஒப்படைத்தார். 1972இல் புதுக்கோட்டை தனி மாவட்டமாக உறுவானபோது தமிழ் நாடு அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க புதுக்கோட்டை அரண்மனையையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கினார். ராஜகோபாலத் தொண்டைமான் திருச்சிராப்பள்ளியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனை வளாகத்திலேயே மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார் . இவர்1997இல் மறைந்தார்.

தொண்டைமான் கட்டிய கோவில்கள்[தொகு]

திருப்பதி

திருப்பதி, ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது திருமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருமலையில் திருமாலுக்காக அமைந்துள்ள வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இக் கோயிலே திருப்பதி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனலாம். ஏழுமலை என்று அழைக்கப்படும் இம் மலையில் அமைந்துள்ள இக் கோயில் தொண்டைமானால் கட்டப்பட்டது.[4] திருமலை ஸ்ரீ ஏழுமலையான் கோவில் தங்க கதவை திறந்து பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தை யாதவர்களே முதலில் தரிசிக்க வேண்டும். இந்த வழக்கம் கோவில் கட்டப்பட்டதிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சற்று (3 கி.மீ) தொலைவிலும், சென்னை-ஆவடி நெடுஞ்சாலையில் திருமுல்லைவாயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அருகே (வடக்கே 0.8 கி.மீ) இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. இதை வட திருமுல்லைவாயில் என்பர். சுந்தரமூர்த்திநாயனாரால் பாடல் பெற்ற தலம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறந்தாங்கி தொண்டைமான்கள். 2008. பக். 153. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0005986/mode/2up. 
  2. MANUAL OF PUDUKKOTTAI STATE VOLUME II. 2002. பக். 721. https://archive.org/details/dli.chennai.145/mode/2up?q=. 
  3. புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள். பக். 8. https://archive.org/details/dli.chennai.161/page/n16/mode/1up. 
  4. "தொண்டைமான் சக்கரவர்த்தி". இந்து தமிழ். 04-10-2014. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  1. பெரிய பெருமாள் பழனிவேல் பிள்ளையின் உரையுடன் கலிங்கத்துப் பரணி- தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1912
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டைமான்&oldid=3937920" இலிருந்து மீள்விக்கப்பட்டது