வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (Vasireddy Venkatadri Nayudu) ( 1783–1816 ) இவர் ஐதராபாத்தின் நிசாம் மற்றும்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருந்த இந்தியாவின் குண்டூர் மாவட்டத்தில் ( பின்னர் அமராவதி ) சிந்தப்பள்ளி என்ற ஊரில் கம்மவர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஜமீன்தார் ஆவார். குண்டூர் மற்றும் கிருட்டிணா மாவட்டங்களில் அமைந்துள்ள 552 கிராமங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். [1] இவர், சிந்தபள்ளியில் தனது பரம்பரை அரண்மனையை கைவிட்டு, பண்டைய சாதவாகனர்களின் தலைநகரான அமராவதியில் ஒரு புதிய அரண்மனையையும் நகரத்தையும் கட்டினார். அதன் கட்டுமானப் பணியின்போது, இவரது தொழிலாளர்கள் அங்கே புகழ்பெற்ற ஒரு அமராவதி தூணைக் கண்டுபிடித்தனர், அதோடு அதனை கணிசமான அளவில் சேதத்தையும் ஏற்படுத்தினர். [2]

குடும்பம்[தொகு]

1670 ஆம் ஆண்டில் கோல்கொண்டா சுல்தான்களின் கீழ் நந்திகிராம பர்கானாவின் தேசுமுக்காக நியமனம் பெற்ற வாசிரெட்டி வீரப்பநாயுடு என்பவர் வாசிரெட்டி ஜமீன்தாரி குடும்பத்தை நிறுவியிருக்கலாம். சிறிது காலத்திற்குப் பிறகு, கோல்கொண்டா முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. ஆனால் இவரது ஆட்சிப் பகுதி தொடர்ந்தது. இவரது மரணத்திற்குப் பிறகு, அது இவரது மூன்று மகன்களான இராமண்ணா, ஜக்கன்னா மற்றும் வெங்கடாத்ரிநாயுடு ஆகியோருக்குள் பிரித்துக் கொள்ளப்பட்டது. ஜக்கன்னா குண்டூர் மாவட்டத்தில் சிந்தப்பள்ளியின் பகுதியைப் பெற்றார் .[3]

வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு 1761 ஏப்ரல் 27 அன்று ஜக்கன்னா (ஜக்க பூபதி) மற்றும் அவரது மனைவி அச்சமம்பா ஆகியோருக்கு பிறந்தார்.[3] பத்திரிகையாளர் பொட்டூரி வெங்கடேசுவர ராவ் கருத்துப்படி, ஜக்கன்னா நிசாமுக்கு எதிராக போராடினார். வெங்கடாத்ரி நாயுடு மிகச் சிறிய வயதில் இருந்தபோது இறந்து போனார். ஜக்கபூபதி இறந்த பிறகு அவரது மனைவி அச்சம்மா உடன்கட்டை ஏறி தன்னை மாய்த்துக் கொண்டார்.[4]

இவரது பெற்றோர் இறந்தபோது வெங்கடாத்ரி நாயுடுவுக்கு நான்கு வயது மட்டுமே ஆகியிருந்தது. இவரை இவரது மாமா இராமண்ணா என்பவர் வளர்த்தார். இராமண்ணாவின் மரணத்திற்குப் பிறகு, நாயுடு தனது தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரின் பகுதிகளையும் வாரிசாகப் பெற்றார் என்று தெறிகிறது.[3][5]

தென்னிந்தியாவில் பிரெஞ்சு செல்வாக்கு 1741-1754
இந்தியாவில் பிரித்தான் செல்வாக்கு, 1763

வடக்கு சர்கார் மாவட்டங்கள் என்று அறியப்பட்ட ஐந்து கடலோர மாவட்டங்கள் ஆங்கிலோ-பிரெஞ்சு போட்டிக்கான முக்கிய களமாக மாறியது. நான்காவது நிசாம், சலாபத் ஜங்,மீது பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது. இருப்பினும் பிரெஞ்சு கட்டுப்பாடு 1759 இல் மசூலிபட்டணத்தை பிரித்தன் கைப்பற்றியதுடன் முடிந்தது. பிரித்தன் கிழக்கிந்திய நிறுவனம் 1765 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடம் சர்க்கார் பகுதியை வழங்கியது. இது 1768 இல் நிசாமை உறுதிப்படுத்தியது. ஆரம்பத்தில் விலக்கப்பட்ட குண்டூர் மாவட்டமும் 1788 இல் வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இப்போது வாசிரெட்டி குடும்பத்தின் உண்மையான மேலதிகாரிகளாக இருந்தனர்.

ஆட்சி[தொகு]

வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு 1783 ஆம் ஆண்டில் ஜமீன்தாராக முடிசூட்டப்பட்டார். இவர் 1783 முதல் ஆங்கிலேயர்களின் வருகை வரை ஆட்சி செய்தார் (27 ஏப்ரல் 1783-1816). தற்போதைய குண்டூர் மாவட்டத்தில் சிந்தப்பள்ளி தான் அதிகாரத்தின் அசல் இருக்கையாகும். வெங்கடாத்ரி நாயுடு தனது தலைநகரை தரனிகோட்டாவுக்கு மாற்றினார். பின்னர் குண்டூர் மாவட்டத்தில் கிருட்டிணா ஆற்றின் குறுக்கே அமராவதி என்ற புதிய நகரத்தை கட்டினார். பின்னர் அதை தனது தலைநகராக மாற்றினார்.[6] இவர் கலை மற்றும் இலக்கியத்தின் புரவலராகவும், கிருட்டிணா நதி படுகையில் ஏராளமான கோயில்களையும் கட்டியுள்ளார். அமராவதி, செப்ரோலு, மங்களகிரி, பொன்னூரு ஆகிய இடங்களில் உள்ள பழங்கால கோயில்களை இவர் புதுப்பித்தார்

  குண்டூர் பிராந்தியத்தில் மக்களைக் கொள்ளையடித்த பிண்டாரிகளை வெங்கடாத்ரி வெற்றிகரமாக அகற்றினார். இவரது ஆட்சிக் காலத்தில், செஞ்சஸ் என்ற வன பழங்குடியினர் அமராவதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி கொள்ளையடித்து வந்தனர். வெங்கடாத்ரி சுமார் 600 செஞ்சு ஆட்களை ஒரு மதிய உணவுக்கு அழைத்து அவர்களை கொல்ல உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்த கிராமங்கள் இன்று நருக்குலபாடு என்று அழைக்கப்படுகின்றன ( தெலுங்கு மொழியில் 'நருக்கு' என்றால் 'நறுக்குவது' என்ற பொருள்படும்). இந்த சம்பவத்திற்குப் பிறகு வெங்கடாத்ரி அமராவதிக்கு வந்து தனது முழு வாழ்க்கையையும், நேரத்தையும், வருவாயையும் சிவபெருமானுக்கு கோயில்களைக் கட்டுவதற்கு அர்ப்பணித்தார். இவர் இங்குள்ள அமரேசுவரசுவாமி கோயிலை புதுப்பித்தார். இறைவனின் அன்றாட அர்ச்சனைகாக வேதங்களை கற்ற ஒன்பது அர்ச்சகர்களைக் கொண்டுவந்தார். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 12 ஏக்கர் நிலம் உட்பட வாழ்வாதாரத்தின் அனைத்து தேவைகளையும் வழங்கினார்.

வெங்கடாத்ரிக்கு மிகவும் திறமையான அமைச்சரும் கவிஞருமான முலுகு பாப்பாயராத்யா உதவினார். வெங்கடாத்ரி அவையில் பல கவிஞர்களும் அறிஞர்களும் இருந்தனர்.[7]

அமராவதியில் கோட்டையின் தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Frykenberg, Elite Groups in a South Indian District 2011.
  2. Ramaswami, Indian Monuments 1971.
  3. 3.0 3.1 3.2 Office of the Registrar General (1962), Census of India, 1961: Andra Pradesh, Manager of Publications, Government of India
  4. Potturi Venkateswara Rao, Amaravati Prabhuvu Vasireddy Venkatadri Nayudu, Emesco Books, 2016
  5. Ramaswami, Indian Monuments 1971: "From his uncle, who died in 1778, Venkatadri inherited vast wealth and the great influence that goes with it."
  6. "This Raja knows how to hold the fort – Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/This-Raja-knows-how-to-hold-the-fort/articleshow/54510567.cms. 
  7. Life and History of Venkatadri: http://www.openlibrary.org/details/rajavasireddyven022548mbp பரணிடப்பட்டது 2007-06-25 at the வந்தவழி இயந்திரம் Sri Raja Vasireddy Venkadadri Nayudu by K. Lakshminarayana 1963, Ponnuru

நூற்பட்டியல்[தொகு]


மேலும் படிக்க[தொகு]