கூடல்மாணிக்கம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூடல்மாணிக்கம் கோயில்
கூடல்மாணிக்கம் கோயில் is located in கேரளம்
கூடல்மாணிக்கம் கோயில்
கேரளாவில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:இரிஞ்ஞாலகுடா
ஆள்கூறுகள்:10°20′48″N 76°12′04″E / 10.34661°N 76.20108°E / 10.34661; 76.20108
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை (கேரள மாதிரி)

கூடல்மாணிக்கம் கோயில் ( Koodalmanikyam Temple) அல்லது குடல் மாணிக்கம் கோயில் / கூடல்மாணிக்கியம் கோயில் [1] என்பது ஒரு இந்துக் கோவிலாகும், இது இந்தியாவின் கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. இராமரின் மூன்றாவது சகோதரரான பரத வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பழங்கால கோயில் கூடல்மாணிக்கம் கோயிலாகும். இருப்பினும் கோயிலின் முக்கியச் சிலை விஷ்ணுவாகும். கூடல்மாணிக்கத்தின் கோயிலில் மற்றொரு தெய்வத்துடன் தொடர்புடைய பெயர் "சங்கமேஸ்வரர்" (சங்கமத்தின் இறைவன்) என்பதாகும். இது " நாலம்பலம் " என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தின் உள்ள நான்கு கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.[2] ஒவ்வொரு கோயிலும் இராமாயணத்தில் உள்ள நான்கு சகோதரர்களான இராமன், பரதன், இலட்சுமணன் மற்றும் சத்ருக்கன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது:

"மாணிக்கம் கேரளர்"[3] என அழைக்கப்படும் தச்சுடய கைமால் என்ற ஆன்மீகத் தலைவர், கூடல்மாணிக்கம் கோயில் மற்றும் அதன் தோட்டங்களின் தற்காலிக ஆட்சியாளராக இருந்தார். இந்த கதை பழங்காலத்திற்கு செல்கிறது. இது கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய கோவிலின் மீதான தற்காலிக உரிமைகள், கைமாலின் அலுவலகம் ("மாணிக்கம் கேரளருக்கு" மாறாக) மற்றும் "மெல்கோய்மா" அலுவலகம் ஆகியவற்றிக்கு சென்றது.

வரலாறு[தொகு]

கூடல்மாணிக்கம் கோயிலின் முந்தைய வரலாற்று குறிப்பு பொ.ஊ. 854 தேதியிட்ட சேர மன்னர் ஸ்தானு ரவி வர்மனைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கல் கல்வெட்டில் காணப்படுகிறது. இதில் கோயிலுக்கு ஏராளமான நிலங்களை நன்கொடையாக அளித்தது பற்றி குறிப்பிடுகிறது. ஆகையால், இந்த தேதிக்கு முன்பே இந்த கோயில் இருந்திருக்க வேண்டும் என்றும், கூடல்மாணிக்கம் கேரள கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது என்றும் கருதுவது நியாயமானதே.

இரிஞ்ஞாலக்குடா வரலாற்றில் கூடல்மாணிக்கம் கோவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இப்பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பெரும்பாலான நிலங்கள் கூடல்மாணிக்கம் கோயில் மற்றும் திருவாங்கூரின் தச்சுடயா கைமாலிடம் 1971 வரை இருந்தன.[4] இந்த கோயில் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது, இது அரசாங்கத்தின் வருவாயாகும்.

சடங்குகள் மற்றும் ஆண்டு விழா[தொகு]

ஆண்டு விழாவின் போது யானை அணிவகுப்பு

கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை பூஜைகள் மற்றும் மூன்று சீவேலிகள் இருப்பது வழக்கம். ஆனால் கூடல்மாணிக்கத்தில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே உள்ளன. சீவேலியும் இல்லை. இதன் சன்னதியில் உஷா பூஜை மற்றும் பந்தீரடி பூஜை இல்லை. வருடாந்த திருவிழாவின் போது மட்டுமே தெய்வம் ஊர்வலத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. எந்த தீபாராதானையும் இல்லை. தீபாராதானையைத் தொடங்க திட்டங்கள் உள்ளன. தீபாராதானை இல்லாத ஒரே கோயில் இதுவாகும்.

பூஜைக்கு ஊதுபத்திகள் மற்றும் கற்பூரம் பயன்படுத்தப்படுவதில்லை. தெய்வத்திற்கான மலர் பிரசாதம் தாமரை, துளசி மற்றும் அரளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் அவை கோயில் வளாகத்தில் வளர்க்கப்படுவதில்லை. பூசைக்காகவோ அல்லது மாலைகளை தயாரிப்பதற்காகவோ வேறு எந்த பூவும் எடுக்கப்படுவதில்லை. தாமரை மாலை தெய்வத்திற்கு ஒரு முக்கியமான பிரசாதமாகும். 101 தாமரை பூக்களுக்கு குறையாத ஒரு மாலை தெய்வத்திற்கு அணிவிக்கப்படும்.   [ மேற்கோள் தேவை ] இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் கொல்ல ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல் / மே) பத்து நாட்களுக்கு அதன் முதன்மைத் திருவிழாவை நடத்துகிறது. திருவிழாவின் முதல் நாள் உத்ரம் நட்சரத்திரம் வானில் தோன்றுவதிலிருந்து கணக்கிடப்படுகிறது. சடங்கு கொடியை ஏற்றுவதன் மூலம் குறிக்கப்படுகிறது. (அருகிலுள்ள திருச்சூரில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு ஒரு நாள் கழித்து தொடக்க நாள் வருகிறது. )

திருவிழாவின் ஒவ்வொரு நாளும், பஞ்சரி மேளத்துடன் (புனித இசை) ஒரு சீவேலி ( கோயில் யானைகளின் ஊர்வலம்) இரண்டு முறை, காலையில் ஒரு முறை மற்றும் இரவில் ஒரு முறை நடைபெறும். இதில் பதினேழு யானைகள் பங்கேற்கின்றன. சீவேலியின் இரண்டு அம்சங்கள் கூடல்மாணிக்கம் கோயிலுக்கு தனித்துவமானவை: முதலில் இரண்டு குழந்தை யானைகள் ஊர்வலத்தில் சேர்க்கப்படும். ஒன்று தெய்வத்தை சுமந்து செல்லும் யானையின் ஒவ்வொரு பக்கத்திலும் நிற்கும். இரண்டாவதாக, ஏழு யானைகளின் தலைக்கவசங்கள் ( மலையாளத்தில் 'நெட்டி பட்டம்') தூய தங்கத்தால் செய்யப்பட்டவை, மீதமுள்ளவை தூய வெள்ளியால் செய்யப்பட்டவை. திருவிழாவின் கடைசி இரண்டு நாட்களில் பஞ்ச வாத்யம் (ஐந்து கருவிகளின் இசைக்குழுவிலிருந்து புனிதமான இசை) இடம்பெறுகிறது, திருவிழா திருவோணம் நட்சத்துரத்துடன் முடிகிறது.

குளங்கள்[தொகு]

கூடல்மாணிக்கம் கோயில் மற்றும் குளிப்பிணி தீர்த்தம்

கோயிலிலும் சுற்றிலும் நான்கு குளங்கள் உள்ளன. நான்கில் மிகப் பெரியது குட்டன் குளம், இது கிழக்குப் பகுதியில் உள்ள வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ளது. குளிப்பிணி தீர்த்தம் ஆகியவை வளாகத்திற்குள் அமைந்துள்ளது. குளிப்பிணி தீர்த்தம் முனிவர் குளிப்பிணி யால் புனிதமாக்கப்பட்டவை என நம்பப்படுகிறது. முனிவர் இந்த இடத்தில் ஒரு பெரிய வேள்வி நடத்தியதாக கருதப்படுகிறது. இந்த மூலத்திலிருந்து வரும் நீர் கோயிலுக்குள் நடக்கும் சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோயிலுக்கு வெளியே உள்ள "குட்டன் குளத்தில்" தங்களைத் தூய்மைப்படுத்திய பின்னரே பூசாரிகள் விழாக்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் கருவறைக்குள் நுழைவதற்கு முன்பு "குளிப்பிணித் தீர்த்தம்" நீரில் மூழ்க வேண்டும். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சுவருக்கு வெளியே உள்ள குளத்தை "பதின்ஜரக் குளம்" என்றும், தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வளாகத்திற்கு வெளியே உள்ள குளம் "தெக்கே குளம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று நீர்நிலைகளும் கோயிலின் அளவைப் போலவே குறிப்பிடத்தக்க பகுதியைக் கொண்டுள்ளன. "குளிப்பிணி தீர்த்தம்" தவிர மற்ற மூன்று நீர்நிலைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Koodalmanikyam Irinjalakkuda". The-week.com. http://the-week.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do?channelId=-1073750346&contentId=729841&programId=1073751467&tabId=2&contentType=EDITORIAL&BV_ID=@@@. பார்த்த நாள்: 2014-01-18. 
  2. "Nalambala darsanam from July 17" இம் மூலத்தில் இருந்து 2012-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109050651/http://www.hindu.com/2007/07/15/stories/2007071551420300.htm. பார்த்த நாள்: 2014-01-18. 
  3. Epistles by Ananthakumara Swami, Thachudaya Kaimal Stanom, Published 1927 Irinjalakkuda India Office Records, London IOR/R/2/882/104
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-31.

வெளி இணைப்புகள்[தொகு]

{commons category|Koodalmanikyam Temple}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடல்மாணிக்கம்_கோயில்&oldid=3825144" இலிருந்து மீள்விக்கப்பட்டது