சிங்காசாரி கோயில், கிழக்கு ஜாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்காசாரி கோயில்
தரைத் திட்ட வரைபடம் (ca. 1901)

சிங்காசாரி கோயில் (Singhasari temple) அல்லது கேண்டி சிங்காசாரி என்பது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவின் மலாங் ரீஜென்சி, சிங்காசாரி மாவட்டத்தில் அமைந்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இந்து - பௌத்த கோயில் ஆகும்.

அமைவிடம்[தொகு]

மலாங் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் வடக்கே, சிங்கோசாரி மாவட்டத்தில் உள்ள காண்டிரெங்கோ கிராமத்தில் உள்ள ஜலான் கெர்டானேகராவில், இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில், கிழக்கில் டெங்கர்- புரோமோ மற்றும் மேற்கில் அர்ஜுனோ-வெலிராங் என்னும் இடத்தில், கடல் மட்டத்திலிருந்து 512 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோயிலானது அர்ஜுனோ மலையை நோக்கி வடமேற்கே உள்ளது . கிழக்கு ஜாவாவின் வரலாற்று சிங்காசாரி இராச்சியத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் கோயிலைச் சுற்றியுள்ள இடம் சிங்காசரியின் ஜாவானிய நீதிமன்றத்தின் மையமாகக் கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

நாகரக்ரேதகமா என்ற ஜாவானிய கவிதை நூலில் இந்த கோயிலைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அந்நூலில் உள்ள காண்டோ 37: 7 மற்றும் 38: 3 இல் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளத. மேலும் 1351 தேதியிட்ட கந்தாமாரி கல்வெட்டு என்று அழைக்கப்படுகின்ற கஜா மாதா கல்வெட்டிலும் கோயிலின் முற்றத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்த ஆதாரங்களின் படி, இந்தக் கோயிலானது சிங்காசாரி வம்சத்தைச் சேர்ந்த கடைசி மன்னனான (1268 ஆம் ஆண்டு முதல் 1292 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த) கெர்த்தனேகர என்னும் மன்னரை கௌரவிப்பதற்காக இந்த கோயில் சவக்கிடங்கு கோயிலாக கட்டப்பட்டதாகும். சிங்காசாரி 1292 ஆம் ஆண்டில், கேடிரி அரசைச் சேர்ந்த ஜயாகட்வாங் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் மயாபாகித்து பேரரசு உருவானது.

இந்தக் கோயிலின் முற்றுப் பெறாத நிலையை அதன் கீழ் நுழைவாயிலில் காணக்கூடிய முழுமையற்ற காலா எனப்படுகின்ற கீர்த்திமுகத்தின் தலைப் பகுதியிலிருந்து அறிந்து கொள்ள முடியும். இக்கோயில் வடமேற்கு திசையை நோக்கிய வகையில் அமைந்துள்ளது. அக் கோயிலின் கீழ் தளமானது சைவத்தைக் குறிக்கும் ஆனால் கோயிலுக்கு மேல் நிலையில் இரண்டாவது பாதாள அறை உள்ளது, அது பௌத்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.[1] இது கெர்த்தனேகர என்றும் கெர்த்தனேகரா என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் சிங்காசாரி சிங்கோசாரி என்றும் அழைக்கப்படுகிறது.

சிங்காசாரி[தொகு]

சிங்காசாரி இராச்சியம் 1222 ஆம் ஆண்டில் கென் அரோக் என்ற பெயரில் ஒருவரால் நிறுவப்பட்டது. அவர் ஜங்கலாவின் அழகான இளவரசியான கென் டெடெஸ் என்பவரை, அவருடைய கணவரைக் கொன்ற பிறகு, திருமணம் செய்து கொண்டார். கென் அரோக் பின்னர் அண்டை நாடான கெதிரியைத் தாக்கினார். இதனால் 1049 ஆம் ஆண்டில் கிங் ஏர்லாங்காவால் பிரிக்கப்பட்ட இரண்டு பகுதிகளையும் ஒன்றிணைத்தார். தனது இரு மகன்களையும் வாரிசாக ஆக்கினார். பிராண்டாஸ் நதிப் படுகையில் வளமான விவசாய நிலப்பரப்பை வளர்ப்பதிலும், ஜாவா கடலில் இலாபகரமான கடல் வர்த்தகத்திலும் சிங்காசாரி வெற்றி பெற்றார். 1275 ஆம் ஆண்டு மற்றும் 1291 ஆம் ஆண்டுகளில் கார்த்தனேகர மன்னர் தெற்கு சுமத்ராவில் உள்ள ஸ்ரீவிஜயாவின் கடல் இராச்சியத்தைத் தாக்கி ஜாவா மற்றும் சுமத்ரா கடல்களின் கடல் வர்த்தகத்தை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். இருந்தபோதிலும், 1293 ஆம் ஆண்டில் ஜெயகத்வாங் என்பவரால் அவர் கொல்லப்பட்டார். சிங்காசாரியின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்து வந்தது.[2]

இக் கோயிலின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு அமையும்:[3]

  • சிங்காசாரி அரச கல்லறைகளின் பாதுகாவலராக மிகவும் பெரிய உருவத்தில் அமைந்த ஒரே கல்லால் வடித்து அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலை
  • மேற்கு திசையின் மேல் பகுதியில் நன்கு செதுக்கப்பட்ட காலா எனப்படுகின்ற கீர்த்திமுகம்
  • கீழ் தெற்கு அறையில் சிவன் பதாரா குரு என்ற நிலையில் (ஒருவேளை, அகத்தியராக சிவன்) சிவனின் ஒரு பெரிய சிலை.

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Gavin Pattison (2000). Blue Guide: Bali, Java, and Lambok. A&C Black, London, and WW Norton, NY. பக். 80. 
  2. Singosari Temple
  3. "Candi Singosari". பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.