திபெத்தியக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாலாவின் வெள்ளை அரண்மனை
யெர்பா மடாலயம்
பால்கோ மடாலயம்

திபெத்தியக் கட்டிடக்கலை என்பது சீன மற்றும் இந்தியக் கட்டடக் கலையின் தாக்கங்களைக் கொண்டுள்ளதாகும். ஆனால் இவை உயரமான திபெத்திய பீடபூமியின் குளிர், பொதுவாக வறண்ட, காலநிலை ஆகியவற்றைத் தழுவுவதன் மூலம் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. கட்டிடங்கள் பொதுவாக உள்நாட்டில் கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் திபெத்திய பௌத்த மதத்தின் அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தனியார் வீடுகளில் பெரும்பாலும் பௌத்த பிரார்த்தனைக் கொடிகள் கூரையின் மேல் பறக்கின்றன.

மத கட்டமைப்புகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: அவை முதலாவதாக கோயில்களும் இரண்டாவதாக ஸ்தூபங்களும் ஆகும். கோயில்கள் மத விழாக்கள் மற்றும் வழிபாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன; ஸ்தூபங்கள் எனப்படும் தாது கோபுரஙகள் நினைவுச் சின்னப் பேழைகளாகவும் அடையாளச் சின்னங்களாகவும் உள்ளன. திபெத்தியக் கோம்பாக்கள் எனப்படும் கோயில்கள் பலவிதமானகலைப் பாணிகள் கொண்டு திகழ்கின்றன. இவை பொதுவாக உள்ளூர் கட்டடக்கலை மரபுகளைப் பிரதிபலிக்கின்றன. திபெத்திய தாது கோபுரங்களின் வடிவமைப்புகள் ஒவ்வோரிடத்திலும் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக காம் என்ற இடத்தில் உள்ள வட்டவடிவத்திலிருது சதுரமாக அமைந்த தாது கோபுரம், லடாக்க்கில் நான்குபுறச்சுவர்களுடன் உள்ள தாதுகோபுரம், ஒரு சில பிராந்தியங்களில், குறிப்பாக டான்பா கவுண்டியில், பல நூற்றாண்டுக்கும் மேற்பட்ட பழமையான, உயரமான மற்றும் சுவாரஸ்யமான கற்கோபுரங்களைக் கொண்ட தாது கோபுரங்கள் எனப் பலவகைகளில் திபெத்தில் தாதுகோபுரங்களை ஒருவர் காணலாம் [1]

திபெத்தில் தனியார் வீடுகள், பல குடும்பங்களின் வாழ்விடங்கள, கடைகள் ஆகியவை மதச்சார்பற்ற கட்டமைப்புகளுள் அடங்கும். மந்தைகளைப் பராமரிக்கும் சில குடும்பங்கள் ஆண்டு முழுவதும் கூடாரங்களில் வாழ்கின்றன, இருப்பினும் ஆண்டு முழுவதும் கூடாரங்களில் வசிக்கும் மக்கள் கால்நடை வளர்ப்பவர்களை நிரந்தர வீட்டுவசதிக்கு செல்ல ஊக்குவிக்கும் (அல்லது தேவைப்படும்) அரசாங்க திட்டங்களால் அவர்கள் கூடாரங்களில் தங்குவது அரிதாகி வருகின்றது. . 1949 க்கு முன்னர் திபெத்திய பிரபுத்துவத்திற்கு சொந்தமான மேனர் வீடுகள் அனைத்தும் திபெத்திய பீடபூமியில் இருந்து மறைந்துவிட்டன. எவ்வாறாயினும், 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லோகா பர்பெக்சரில் உள்ள, டிரானாங் கவுண்டி என்ற இடத்திலிருந்த நம்செல்லிங் மேனர் என்ற இடம் மீட்டெடுக்கப்பட்டது.

பொதுவாக, திபெத்திய கட்டமைப்புகள் கல், களிமண் மற்றும் மரம் போன்ற இயற்கை பொருட்களால் கட்டப்பட்டுள்ளன. இங்கு 1980 முதல், கான்கிரீட் பயன்பாட்டுக்கு வந்துள்ளது, ஆனால் இதுவரை பரவலாக இல்லை. மிகவும் விரும்பத்தக்க வடிவமைப்புடன் கூடிய கட்டிடத் தளங்கள் தெற்கு நோக்கிய உயரமான நிலத்தில் உள்ளன. மழை குறைவாக இருக்கும் மத்திய மற்றும் மேற்கு திபெத்திய பீடபூமியின் பெரும்பாலான பகுதிகளில் வீட்டின் மேல் தட்டையான கூரைகள் பயன்படுத்தப்படுகின்றன; இருப்பினும் கிழக்கு திபெத்திய பீடபூமியில் கோடை மழை கனமாக இருக்கும், எனவே இப்பகுதிகளில் கற்பலகைகள் அல்லது சில்லோடுகள் அல்லது பெரும்பாலும் பீங்கான் ஓடுகள் ஆகியவற்றால் மூடப்பட்ட சாய்வான கூரைகள் சில பிராந்தியங்களில் பிரபலமாக காணப்படுகின்றன. . வளமான விவசாய பகுதிகளில், தனியார் வீடுகளில் மூன்று நிலைகளுடன் கூடிய அடுக்குக் கட்டமைப்புகள் காணப்படுகின்றன. ஆனால் . வருடத்தின் ஒரு பகுதியில் மட்டுமே வீடாகப் பயன்படுத்தக்கூடிய மந்தைப் பகுதிகளில், அவை வழக்கமாக ஒரே ஒரு நிலையை மட்டுமே கொண்டுள்ளன.

கல் அல்லது அடித்துக் கெட்டியாக்கப்பட்ட மண்ணால் கட்டப்பட்ட சுவர்கள் அஸ்திவாரத்தில் ஒரு மீட்டர் தடிமன் கொண்டவையாக இருக்கலாம். கோயில்கள் மற்றும் மேனர் வீடுகள் போன்ற பெரிய கட்டமைப்புகளில், சுவர்கள் உள்நோக்கி சாய்ந்து அதிக உயரமுள்ளது போன்ற மாயையை உருவாக்குகின்றன. இவற்றின் சாளரங்கள் பொதுவாக சிறியதாக இருக்கும், ஏனெனில் சுவர்கள் மிகவும் கனமாக இருப்பதால் பெரிய திறப்புகள் கொண்ட சாளரங்கள் கட்டமைப்பை பலவீனமாகவும் நிலையற்றதாகவும் ஆக்கிவிடும். கடந்த காலத்தில், திபெத்திய சாளரஙகள் காகிதத்தால் மூடப்பட்ட மரச்செதுக்கு வேலைகளைக் கொண்டிருந்தன, ஆனால் இப்போதெல்லாம் கிட்டத்தட்ட அனைவராலும் சாளரங்களில் கண்ணாடிகள் பயன்படுத்தப் படுகின்றன.

தாஷில்ஹன்போ. மங்கோலிய கட்டிடக்கலைகளின் செல்வாக்குடன் கூடியது.

உலக பாரம்பரிய தளம்[தொகு]

117 மீட்டர் உயரத்திலும் 360 மீட்டர் அகலத்திலும் நிற்கும் பொட்டாலா அரண்மனை 1994 இல் உலக பாரம்பரிய களமாக நியமிக்கப்பட்டு 2001 இல் நோர்பூலிங்கா பகுதியை உள்ளடக்கியதாக நீட்டிக்கப்பட்டது, இது திபெத்திய கட்டிடக்கலைக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.[2] முன்னதாக தலாய் லாமாவின் வசிப்பிடமாக, அதன் பதின்மூன்று நிலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது, இது இரு மத நோக்கங்களுக்காகவும், திபெத்திய அரசாங்கத்தின் (முன்னாள்) இருக்கையாகவும், 1959 வரை திபெத்தின் மாநிலத் தலைவராக இருந்த தலாய் லாமாவின் இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது வெளிப்புற வெள்ளை அரண்மனையாக மற்றும் உட்புற சிவப்பு அரண்மனை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது, வெளிப்புற வெள்ளை அரண்மனை தலாய் லாமாவின் நிர்வாகக் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு வீடுகளாகவும், உள்புற சிவப்பு அரண்மனையாகனாது கிரேட் வெஸ்ட் ஹால், தேவாலயங்கள், புனிதத் தலங்கள், பௌத்த வேதங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. Tibet's stone towers have been documented by Frederique Darragon
  2. "Historic Ensemble of the Potala Palace, Lhasa". unesco. Archived from the original on 21 February 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.