மண்டாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டாவா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் சுன்சுனூ மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். இந் நகரம் சேகவதி பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். மண்டாவா வடக்கில் ஜெய்ப்பூரிலிருந்து 190 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் வடக்கில் அட்சரேகை 28 ° 06 'க்கும் கிழக்கில் தீர்க்கரேகை 75 ° 20' க்கும் இடையில் உள்ளது. மண்டாவா அதன் கோட்டை மற்றும் ஹவேலிகளுக்காக மிகப் பிரபலமானது . கோட்டை நகரமான மண்டாவா சாலைகள் மூலம் பிராந்தியத்தின் மற்ற இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

மண்டாவா நகரம்[1] 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாகூர்களின் ஆட்சிப் பிரதேசமான திகானாவாக மாற்றப்பட்டது . மண்டாவா கிராமத்தை நிறுவியவர் என மண்டு ஜாட் பற்றி முன்னர் குறிப்புகள் கிடைத்துள்ளன. அவர் முதலில் குக்கிராமம் (தானி) ஒன்றை நிறுவி அங்கே ஒரு கிணறு தோண்டினார். கி.பி 1740 ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. (ஆதாரம் - ஷெகாவதி போத், மண்டாவா சிறப்பு இதழ், சூலை 2005). ஆரம்பத்தில், இந்த இடம் 'மண்டு கி தானி', 'மாண்டு கா பாஸ்' அல்லது 'மண்டுவாஸ்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்நகர் 'மண்டுவா', 'மாண்ட்வா' என்றும் இறுதியில் 'மண்டாவா' என்றும் மாற்றப்பட்டது.

மாண்டாவா ஷெகாவதி பிராந்தியத்தின் மையத்தில் நில மானிய முறைமை நடைமுறையில் உள்ள பகுதியாக இருந்தது. இப்பகுதி பண்டைய கேரவன் வழித்தடங்களுக்கான புறக் காவல் நிலையமாக திகழ்ந்தது. நவல்கர் மற்றும் மண்டாவாவின் ராஜபுத்திர ஆட்சியாளரான தாகூர் நவால் சிங் 1755 ஆம் ஆண்டில் இந்த புறக்காவல் நிலையத்தை பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார். கோட்டையைச் சுற்றி வளர்ச்சியடைந்த நகரியம் விரைவில் சமூக வர்த்தகர்களை ஈர்த்ததால் அவர்கள் இங்கு குடியேறினார்கள்.

புவியியல்[தொகு]

மண்டாவா 28.05 ° வடக்கு 75.15 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 316 மீட்டர் (1036 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. வடக்குப் பகுதியில் இது பஜிசர், கமல்சார், குஹாரு, மற்றும் கோடு கா பாஸ் என்ற நான்கு கிராமங்களும், கிழக்குப் பகுதியில் டெட்டாரா (சந்திரபுரா), சியோபுரா, மற்றும் ஹனுமன்புரா (துலார் கா பாஸ்), என்ற மூன்று கிராமங்களும், தெற்கே மித்வாஸ், தின்வா லத்கானி ஆகிய கிராமங்களையும், மேற்குப் பகுதியில் கலாசி, சாடின்சர், திஹாவலி மற்றும் தபரி எனும் கிராமங்களும் உள்ளன.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மண்டாவாவின் மக்கட் தொகை 20,717 ஆகும். ஆண்கள் மக்கட் தொகையில் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் காணப்படுகின்றனர்.[3]

மண்டாவாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 58% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவாகும். ஆண் கல்வியறிவு 70% வீதமும், பெண் கல்வியறிவு 45% வீதமும் ஆகும். மாண்டவா மக்கட் தொகையில் 18% வீதமானோர் மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மண்டோவா கோட்டை[தொகு]

மண்டாவா கோட்டை 18 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. ஷார்துல் சிங்கின் மகன் தாகூர் நவால் சிங் விக்ரம் என்பவர் கி.பி 1755 ஆண்டில் கோட்டையை நிறுவினார். கிருஷ்ணர் மற்றும் அவரது பசுக்களின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயிலுடன் இந்த கோட்டை நகரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இடைக்கால கருப்பொருளின் படி கட்டப்பட்ட மாண்டாவா கோட்டை அழகான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரண்மனையில் உள்ள அறைகள் கிருஷ்ணரின் ஓவியங்கள், நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் அற்புதமான கண்ணாடி வேலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரண்மனையின் தர்பார் மண்டபத்தில் ஏராளமான பழம்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன.

நகரத்தின் நடுவில் அமைந்துள்ள மண்டாவா கோட்டை ஒரு பாரம்பரிய விடுதி மாற்றப்பட்டுள்ளது.

ஹவேலிகள்[தொகு]

இந்த நகரம் ராஜஸ்தானின் "திறந்த கலைக்கூடம்" என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் மண்டாவா மட்டுமல்லாமல் முழு ஷெகாவதி பகுதியும் கண்கவர் மாளிகைகளுடன், சுவரொவியங்களை கொண்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. Sharma, C. L. (1993). Ruling elites of Rajasthan: a changing profile. M.D. Publications Pvt. Ltd.
  2. "Maps, Weather, and Airports for Mandawa, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-22.
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டாவா&oldid=3587801" இலிருந்து மீள்விக்கப்பட்டது