பூரி லுகிசான் அருங்காட்சியகம், பாலி

ஆள்கூறுகள்: 8°30′18.35″S 115°15′37″E / 8.5050972°S 115.26028°E / -8.5050972; 115.26028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுழைவாயில்

பூரி லுகிசான் அருங்காட்சியகம் (Puri Lukisan Museum) இந்தோனேசியாவில் பாலியில் அமைந்துள்ள மிகப் பழமையான கலை அருங்காட்சியகமாகும். உபுத் என்னும் இடத்தில் இது அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் இத்தீவினைச் சேர்ந்த நவீன பாலி ஓவியங்கள் மற்றும் மர வேலைப்பாடுகளைக் கொண்டு அமைந்துள்ளது. சுதந்திரப் போருக்கு முந்தைய காலகட்டம் (1930–1945) தற்போதைய (1945 - தற்போது வரை) காலம் வரையிலான காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இங்குள்ள கலைப்பொருள்களில் பாலியைச் சேர்ந்த மற்றும் சானூர், படுவான், உபுட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் உருவாக்கிய மற்றும் கெலிகி பள்ளியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் உருவாக்கிய அனைத்து வகையான கலைப்பாணியில் அமைந்த பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

ஆண்டு வரலாற்று நிகழ்வுகள்
1936 பிதாமகா கலைக் கூட்டுறவு அமைப்பு உபுத்தின் மன்னரான ட்ஜகோகோர்டா க்டே ஆகங்க் சுகாவதி மற்றும் மன்னரின் சகோதரான ட்ஜகோகோர்டா க்டே ராகா சுகாவதி ஆகிய இருவராலும், அப்போது பாலியில் பணியாற்றிக் கொண்டிருந்த மேற்கத்திய கலைஞர்களான வால்ட்டர் ஸ்பைஸ் மற்றும் ரடோல்ப் போனட் ஆகியோராலும் நிறுவப்பட்டது. பாரம்பலிய பாலிக் கலையை பாதுகாப்பதும் வளர்ப்பதுமே இந்த அருங்காட்சியகத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
1953 பிதாமகாவின் கொள்கைகளையும் இலக்கையும் நிறைவேற்றும் வகையில் ரத்னா வார்தா பவுண்டேசன் நிறுவப்பட்டது. கட்டடத்தின் கருத்துருவான பூரி லுகிசான் அருங்காட்சியகம் உருப்பெற்றது.
1954 இந்தோனேசிய பிரதம மந்திரியான திரு. அலி காஸ்ட்ரோமிட்ஜேஜோ இந்த அருங்காட்சியம் கட்டப்படுவதற்கான முதல் அடிக்கல்லை 31 4னவரி 1954இல் நாட்டினார்.
1956 இந்தோனேசிய கல்வி மற்றும் பண்பாட்டு விவரகாரத்துறை அமைச்சர் திரு முகமது யாமின் அலுவல்பூர்வமாக இந்த அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார்.
1972 அருங்காட்சியகத்திற்கு இரு இணைப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒரு தற்காலிக கண்காட்சிக்கூடமும் அமைக்கப்பட்டது.
1978 ட்ஜகோகோர்டா க்டே ஆகங்க் சுகாவதி, முதலாம் கஸ்டி நியோமான் லெம்பாட் மற்றும் ருடோல்ப் பொன்னட் இறந்தனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு மிகவும் பிரம்மாண்டமான அரச மரியாதையிலான இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
2008 பூரி லுகிசான் அருங்காட்சியகத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டன. அப்போது இரு பெரிய கண்காட்சிகள் நடத்தப்பட்டன. அவற்றுள் ருடோல்ப் பொன்னட் சேகரிப்பிலிருந்தும் (லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகம்) மற்றும் உலக முன்னோடியாக கருதப்படுகின்ற இடா பகஸ் மடே எஸ்டேட் சேகரிப்பிலிருந்தும் அக்கண்காட்சியின்போது காட்சிப்படுத்தப்பட்டன.
2011 ஒரு புதிய கட்டடம் (தெற்கு காட்சிக்கூடம்), ஒரு திறந்தவெளி அரங்கம், அருங்காட்சியக கபே உள்ளிட்டவை கட்டப்பட்டன.

அருங்காட்சியகக் கட்டடங்கள்[தொகு]

  • கட்டடம் 1 (வடக்கு) – பிதாமகா காட்சிக்கூடத்தில் போருக்கு முந்தைய நவீன பாலி ஓவியங்கள் (1930–1945) மற்றும் முதலாம் கஸ்டி நியோமான் லெம்பாட்டின் சேகரிப்புகள் உள்ளன.
  • கட்டடம் 2 (மேற்கு) – இடா பகஸ் மடே காட்சிக்கூடத்தில் இடா பகஸ் மடே எஸ்டேட் சேகரிப்புகள் உள்ளன.
  • கட்டடம் 3 (கிழக்கு) – வயாங்க் காட்சிக்கூடத்தில் வயாங் ஓவிய சேகரிப்புகள் உள்ளன.
  • கட்டடம் 4 (தெற்கு)- நிறுவனர் காட்சிக்கூடத்தில் அருங்காட்சியக்ததின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக காட்சிப்பொருள்களை காட்சிப்படுத்தவும் புதிய சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

சேகரிப்புகளின் முக்கியத்துவம்[தொகு]

இடா பகஸ் நியானா (1912–1985)

இடா பகஸ் நியானா ஒரு திறம்பெற்ற மரவேலைப்பாடும் சிற்பி ஆவார். அவர் சிறந்த நடனம் ஆடுபவராகவும் இருந்தார். மரங்களில் அழகான செதுக்கல் மேற்கொள்வதிலும் வடிவங்கள் அமைப்பதிலும், நுணுக்கமாக செதுக்குவதிலும் திறம் பெற்றவர். அவருடைய இறைவி பெர்திவி (ஆகாயத் தாய்) சிற்பம் சிலந்திக்கால்கள் மற்றும் வளைந்துவருகின்ற பாம்பு ஆகியவற்றுடன் பார்ப்பதற்கு ஏதோ கனவுக்காட்சியாக இருக்கும். அவருடைய மகனான இடா பகஸ் டிலம் சிறந்த மரவேலைப்பாடு செய்பவர். தந்தையும் மகனும் வாழ்வின் முக்கியக்கூறுகளை மரத்தில் கொண்டுவந்து உயிர்கொடுக்கும் நிலைக்கு உண்டாக்கும் பெருமை உடையவர்கள். அவர்கள் வடிக்கும் வடிவங்கள் அனைத்துமே ஒரு நகர்ச்சியைக் கொண்டமைந்ததுபோல காணப்படும். அனைத்து வகையான கோணங்களையும் அவர்கள் தம் மர வேலைப்பாடுகளில் பயன்படுத்தியுள்ளனர்.

இடா பகஸ் கெல்கெல் (1900–1937)

இடா பகஸ் கெல்கெல் கமசன் என்னுமிடத்தில் வளர்ந்தார். அங்கு மேற்கத்திய தாக்கம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும் அவருடைய கலைப்பொருள்களில் வாயங்க் பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட உத்திகளைக் காணமுடியும். அவர் மிகச் சிறந்த படைப்புத் திறன் கொண்டவர். 1937ஆம் ஆண்டில் பாரிசில் நடைபெற்ற அனைத்துலக காலனித்துவ கலைக் கண்காட்சியில் அவருடைய ஓவியங்களில் ஒன்று வெள்ளி விருதினைப் பெற்றது. அவருடைய மற்றொரு பணியான பூசாரி தர்மசாமி என்னும் ஓவியமானது இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களில் மிகவும் முக்கியமானதாகும். 1935இல் தாளில் இயற்கை சாயத்தைப் பயன்படுத்தி அதனை அவர் வரைந்திருந்தார். அந்த ஓவியத்தில் ஒரு பூசாரி ஒரு கிணத்திலிருந்து ஒரு குரங்கு, ஒரு பாம்பு மற்றும் ஒரு புலியைக் காப்பாற்றுவதை அவர் சித்தரித்திருந்தார். தவறாக அவர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டபோது பிராணிகள் வந்து அவரைக் காப்பாற்றின. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த பிராணிகள் அவருக்கு பரிசுப்பொருள்களை வழங்குவதும் அந்த சித்திரத்தில் தீட்டப்பட்டுள்ளது.

முதலாம் கஸ்டி நியோமான் லெம்பாட் (~1862–1978)

பாலி சமூகத்தில் ஒரு நியாயமான ஆசிரியராகவும் மறுமலர்ச்சி மனிதராகவும் முதலாம் கஸ்டி நியோமான் லெம்பாட் விளங்கினார். அதுபோலவே வெளி நாடுகளிலும் மிகச் சிறந்த கலை விற்பன்னராக அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய புகழானது புவியியல் எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்ததோடு, கலைத்திறமை கலை வெளிப்பாடு என்ற பரிமாணங்களின் எல்லைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட அமைந்திருந்தது. செவ்வியல் பாணியில் அமைந்த காட்சிகளே லெம்பாட் என்ற இந்த கலைஞரின் சிறப்பாகும். அதனை அவர் இயல்பான நிலையில் தம் படைப்புகளில் வெளிப்படுத்தி இருந்தார்.

அனக் ஆகங்க் க்டே சோப்ரத் (1919–1992)

அனக் ஆகங்க் க்டே சோப்ரத் ஒரு கலைக்குடும்பத்தாருக்கு மகனாகப் பிறந்த பெருமையுடையவர். குழந்தையாக இருக்கும்போதே அவர் பாலியின் வயங் குலிட் எனப்படுகின்ற நிழற்பட பொம்மலாட்டக் கூத்தினைக் கண்டு வியந்துள்ளார். அவருடைய தாத்தா அனைவரும் அறிந்த வயாங் பொம்மலாட்டக்காரர் ஆவார். அவர் அந்த பொம்மைகளை வடிவமைக்க அவருக்கு கற்றுக்கொடுத்ததுடன் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து காப்பியங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தினையும் எடுத்தரைத்தார்.

முதலாம் கஸ்டி மடே டெல்பாக் (1910–1978)

முதலாம் கஸ்டி மடே டெல்பாக் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலைஞர். சீனா புகைப்படக்கலைஞரான யாப் சின் டின் என்பவரின் அலுவலகத்தில் பயிற்சி பெறும் தொழிலாக பணியில் சேர்ந்தார். அவருடய கலைப்பொருள்களில் இயற்கையின் அழகினைக் காணலாம். மிகச் சிறப்பாக அது நுணுக்கமான வடிவமைப்பினைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவர் வரைந்த அனுமன் பிறப்பு (1936) அவரால் பூரி லுகிசான் அருங்காட்சியகத்திற்கு போர்ட் பவுண்டேசன் தலைவரான் அன்பளிப்பாகத் தரப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

இலக்கியம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]