தொடர்ந்தாடுதல் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பின்தொடர்தல் (துடுப்பாட்டம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஒரு போட்டியில் இரண்டாவதாக மட்டையாடும் அணி, முதலில் மட்டையாடிய அணியை விட கணிசமான அளவு குறைவான ஓட்டங்களை எடுத்தால் அந்த அணி, தன் 2ஆவது ஆட்டப்பகுதியையும் தொடர்ந்தாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்: அதாவது தனது முதல் ஆட்டப் பகுதி முடிந்த பிறகு உடனடியாக தனது இரண்டாவது ஆட்டப்பகுதியையும் தொடர்ந்தாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். முதலில் மட்டையாடிய அணியின் தலைவர் விரும்பினால் மட்டுமே எதிரணியின் மீது பின்தொடர்தலைச் செயல்படுத்த இயலும்; இல்லையென்றால் போட்டி வழமையான வரிசையில் நடைபெறும். தொடர்ந்தாடுதல் முறையின் மூலம் ஒரு போட்டி வெற்றி/தோல்வியின்றி முடிவதற்கான வாய்ப்பு குறைகிறது.

வழமையான வரிசை பின்தொடர்தல் வரிசை
1. முதலில் மட்டையாடும் அணி 1. முதலில் மட்டையாடும் அணி
2. இரண்டாவதாக மட்டையாடும் அணி 2. இரண்டாவதாக மட்டையாடும் அணி
3. முதலில் மட்டையாடும் அணி 3. இரண்டாவதாக மட்டையாடும் அணி
4. இரண்டாவதாக மட்டையாடும் அணி 4. முதலில் மட்டையாடும் அணி

எடுத்துக்காட்டு[தொகு]

2017ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற இரண்டாவது தேர்வுப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடியது. அதன்பிறகு மட்டையாடிய இலங்கை அணி, இந்திய அணியின் ஓட்டங்களை விட கணிசமான அளவில் குறைந்த ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. எனவே இந்திய அணித்தலைவர் விராட் கோலி இலங்கை அணியின் மீது தொடர்ந்தாடுதல் முறையைச் செயல்படுத்தினார். அதன்படி இலங்கை அணி தொடர்ந்து தனது இரண்டாவது ஆட்டப்பகுதியை விளையாடியது. முடிவில் இந்திய அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  1.  இந்தியா 622/9, அறிவி.
  2.  இலங்கை 183, அனைவரும் வெளியேறினர்
  3.  இலங்கை 386, அனைவரும் வெளியேறினர்

அதே தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு பின்தொடர்தல் நிலை ஏற்பட்டது. அப்போது விராட் கோலிக்கு பின்தொடர்தலைச் செயல்படுத்தும் உரிமை இருந்தும் அதைச் செயல்படுத்த மறுத்துவிட்டார். எனவே வழமையான வரிசையில் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  1.  இந்தியா 600, அனைவரும் வெளியேறினர்
  2.  இலங்கை 291, அனைவரும் வெளியேறினர்
  3.  இந்தியா 240/3, அறிவி
  4.  இலங்கை 245, அனைவரும் வெளியேறினர்

குறைந்தபட்ச முன்னணி[தொகு]

துடுப்பாட்ட விதிகளின் விதி 14 [1] ஒரு அணியின் மீது தொடர்ந்தாடுதல் முறையை செயல்படுத்த போட்டியின் நீளத்தை கருத்தில் கொள்கிறது.

  • ஐந்து நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில், முதலில் மட்டையாடிய குறைந்தது 200 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கும் போது எதிரணியை தொடரும்படி வலியுறுத்த வாய்ப்பு உள்ளது.
  • மூன்று அல்லது நான்கு நாட்களில், 150 ஓட்டங்கள்;
  • இரண்டு நாள் போட்டியில், 100 ஓட்டங்கள்;

ஒரு போட்டியின் தொடக்கமானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாமதமாகும்போது, (எ.கா. மோசமான வானிலை காரணமாக) தொடர்ந்தாடுதல் முறையை செயல்படுத்தத் தேவையான ஓட்டங்களின் முன்னணி அதற்கேற்பக் குறைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Law 14 - The follow-on". Lord's. https://www.lords.org/mcc/laws-of-cricket/laws/law-14-the-follow-on/. பார்த்த நாள்: 13 May 2018.