உருவப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன அரசவையில் மகாராணி காவோ (மாமன்னர் ரென்சாங்கின் மனைவி) சாங் வம்சம், 11ஆம் நூற்றாண்டு.
பிரான்ஸ் ஹால் என்பவரால் வரையப்பட்டு பிட்டர் கோட் என்பவரால் முடிக்கபப்ட்ட குழு ஓவியம். 1637. நெய்வண்ன ஓவியம், 209 x 429 செ.மீ. டச்ச பொற்கால குழு ஓவியம்.

உருவப்படம்; என்பது ஒருவரைப் பார்த்து அவரது உருவத்தைப் போன்றே கையினால் எழுதுவதே உருவப்படமாகும். ஓவியத்தைப் பார்க்கும்போது அவ்வோவியத்தில் யாருடைய உருவம் எழுதப்பட்டுள்ளதோ அவரே உயிரோடு நம்முன் நின்று காட்சியளிப்பது போன்று தோன்றுவதாக ஓவியம் அமைய வேண்டும். அவரது உள்ளத்தின் இயல்புகளையும் காட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்.

வரலாறு[தொகு]

தொன்மை[தொகு]

உருவப்படக்கலை தொன்மையானது. தொன்றுதொட்டே ஆட்சியாளர்களாலும் பெருமக்களாலும் போற்றப்பட்டும் பேணப்பட்டும் வரும் சீரிய கலை. பண்டைக் காலத்தில் காதலர், காதலிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், காதல் பிரிவுத் துன்பத்தை ஆற்றுவதற்கும் உருவப்படம் உறுதுணையாக இருந்துவந்ததைப் பண்டை இலக்கியங்கள் இயம்புகின்றன. உருவப்படக்கலையின் தொன்மைக்குப் பண்டைக்கால ஓவியங்களும் இலக்கியங்களும் சான்றாக உள்ளன.

கிரேக்கம்[தொகு]

பண்டைக்கால எகிப்தியக் கல்லறைகளில் உறைகளில் போடப்பட்ட உருவப்படங்கள் பல தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை கலைச்சிறப்புடையவை. அப்பாலோடோரஸ் என்ற கிரேக்க ஓவியர் முதன்முதலாக ஒளி நிழல் அமைப்போடு உருவப்படத்டை வரைந்தார். பாம்ப்பியை, ஹெக்குலேனியம் ஆகிய இடங்களில் பண்டைக்கால ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ரோமானியர்[தொகு]

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர் மரப்பலகைகளில் வ ண்ண மெழுகால் ஓவியம் தீட்டினர். தீட்டப்பட்ட ஓவியத்தைப் பிணப்பெட்டிகளுள் வைத்தனர்.

சீனா[தொகு]

கி.மு. 1326 லேயே சீன மக்கள் உருவப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். பெரியோர்களின் உருவப்படங்கள் வருங்கால மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேஎண்டும் என்று கன்பூசியஸ் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் போதித்துள்ளார். சீனக் கோயில்களில் கலைச்சிறப்பு மிக்க பண்டைக்கால ஓவியங்கள் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன. பண்டைச் சீன உருவப்படங்கள் பெரும்பாஉம் சுவர்களில் தீட்டப்பெற்றன. வண்ண அமைப்பு அவைகளுக்கு அழகைத் தந்தது.

இத்தாலி[தொகு]

இத்தாலியில் 13 ஆம் நூற்றாண்டில் ஜாட்டோ என்பவர் முதன்முதலாக உருவப்படக் கலையில் ஈடுபட்டார். இவர் தாந்தே போன்ற அறிஞர்களின் உருவப்படங்களைக் கோயிற் சுவர்களில் வரைந்தார். பிலீப்பீனோ லீப்பி, ஜீர்லாண்டாயா (1449-1494) ஆகியவர்களும் கோயில் சுவர்களில் உருவப்படங்களை வரைந்தனர். பிளாண்டர்ஸில் நீடித்து நிற்கக்கூடிய நெய்வண்ண ஓவிய முறையைப் பின்பற்றினர். இத்தாலிய உருவப்படக்கலை சிறந்திருந்தது. மறுமலர்ச்சிக் காலத்தில் உருவப்படக்கலை மேலும் வளர்ந்தது. செல்வர்கள் கலைக்கு ஆதரவு அளித்தனர். பிரா ஆன்ஜெலீக்கா என்ற ஓவியர் போப் ஐந்தாம் நிக்கலஸ், பிரெடரிக் மன்னர் ஆகியவர்களின் உருவங்களைத் தீட்டினார். கஜோலி, ஹோகார்த் ஆகியவர்களும் தம் காலத்தவரின் உருவப்படஙக்ளை வரைந்தனர்.

வட ஐரோப்பா[தொகு]

14 ஆம் நூற்றாண்டில் இறுதியில் வட ஐரோப்பாவில் உருவப்படக்கலை தனிக்கலையாக வளர்ச்சியடைந்தது. ஜான் வான் ஐக் டுரா (1471-1528), ஹால்பைன் போன்ற ஓவியர்கள் உருவப்படக்கலையை வளர்த்தனர். லியனார்டோ டா வின்சீ, ராபல்ஸோ சன்டி (1483-1520) ஆண்டிரியா டல் சார்ட்டோ (1486-1531), புரான் ஜீனோ(1520-1572) போன்ற இத்தாலி நாட்டு சமயத்துறை ஓவியர்களும் உருவப்படக்கலையில் தலை சிறாந்தவர்களாக இருந்தனர். இவர்கள் காலத்தில் உருவப்பட வடிவமைப்பு வளம் பெற்றது. படத்தில் முழு விளக்கங்களும் காட்டப்பட்டன. ஒளியையும் நிழலையும் கலந்து உடலின் பருமன், உடையின் தன்மை, ஆகியவைகளை உள்ளது உள்ளபடி புலப்படுத்தும் வண்னம் படம் தீட்டப்பட்டது. தெளிவான வடிவும் பளபளப்பான வண்னமும், முடிந்த அமைப்பும் ஓவியத்தின் சிறப்பியல்புகளாகத் திகழ்ந்தன. டிஷன் வீசெல்லி (1477-1576) என்ற வெனிசு நகர ஓவியரது வண்ண அமைப்புக் கவின் மிக்கது.

டச்சு[தொகு]

ஹாலந்தில்ல் 1579 இல் டச்சு குடியரசு நிறுவப்பட்டது. வாணிகம் வளம்பெற்றது. அதனால் வளம்பெற்ற மக்கள் கலைத் துறையில் நாட்டம் செலுத்தினர். செல்வர்கள் தங்கள் உருவப்படங்களை எழுதி வைத்துக்கொள்ள விரும்பினர். உருவப்படக்கலை வளர்ந்தது.டச்சுக் கலைவானில் ரெம்பிராண்டின் உருவப்படங்கள் ஆன்மிகச் சிறப்புடையவை. ஆட்களின் அக இயல்புகளைத் தெற்றெனக் காட்டுவனவாகத் தீட்டப்பட்டிருந்தன. ஹால்ஸ் சிரிப்பைக் காட்டும் ஓவியர். இவருடைய ஓவியங்களில் புன்சிரிப்பு மலர்ந்தது. பார்த்தலாமெயோ வாண்டர் ஹெல்ஸ்ட், யான் ஸ்டேன் (1626-1679) ஆகியவர்களும் டச்சு ஓவியர்களில் சிறப்புடையவர்களாவர்.

ஸ்பெயின்[தொகு]

ஸ்பெயின் நாட்டு உருவப்படங்கள் பெருஞ்சிறப்புடையவை, டாமினீக்கோ டெயாட்டாக்காப்பூல்லி, ரீபெரா(1588-1656), ஜூர்பாரான்(1598-1669), வெலாத்கெத் (1599=1660), காயா ஓய் லூசியென்ட்ஸ்(1746-1828), பெட்ரஸ் பாலஸ் (1577-1640) ஆகிய ஸ்பெயின் நாட்டு ஓவியர்கள் உருவப்படக்கலையில் சிறப்பு இக்கவர்களாக இருந்தனர். வாலாஸ் ரூவெஸ் அரசாங்க ஓவியராக இருந்தார். இவர்தாம் முதன் முதலாக நெய்வண்ன ஓவியக்கலை முறையைத் தோற்றுவித்தார். இவருடைய ஓவியங்கள் உயிரோவியஙக்ளாகத் திகழ்ந்தன. பெட்ரஸ் குடும்ப்த்தவர்களின் உருவப்படங்கள் மிகச்சிறந்த ஓவியங்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

இங்கிலாந்து[தொகு]

இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டு வரையில் வெளிநாடுகளிலிருந்தே ஓவியர்கள் வரவழைக்கப்பட்டனர். உள்நாட்டவர்களில் சிறப்பு மிக்க ஓவியர்கள் தோன்றாவில்லை. 18 ஆம் நூற்றாண்டில் ரெனால்ட்ஸ், கெயின்ஸ்பரோ, ராம்சே, ராம்னே, சர் தாமஸ்லாரன்ஸ் போன்றஓவியர்கள் சிறப்புப் பெற்று உருவப்படக்கலையை வளர்ந்த்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவப்படம்&oldid=2867484" இலிருந்து மீள்விக்கப்பட்டது