ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிவாள் குருவி / வால் குருவி

ஈப்பிடிப்பான் பெரும்பாலும் ஊர்க்குருவி அல்லது புல்புல் என்னும் கொண்டைக்குருவி யளவிலுள்ள சிறு பறவைச் சாதிகள் இவற்றின் அலகு குட்டையாகவும் அகலமாகவும், அடி அழுந்தியும், நுனிமுனை கொக்கிப்போல வளைந்தும் இருக்கும். , சுள்ளான், கொசு, ஈசல், விட்டில் முதலிய சிறு பூச்சிகளே இவற்றிற்கு முக்கியமான இரை. மரத்தின் மேற்கிளைகளிலோ, தந்திக்கம்பி முதலியவற்றின் மேலோ, நிமிர்ந்து உட்கார்ந்திருந்து, பூச்சியைக் கண்டவுடன் துடுமெனப் பாய்வதுபோலப் பறந்துபோய்ப் பற்றும். பூச்சி தப்பித்துக் கொள்ள முயன்று இங்குமங்கும் பாய்ச்சல் காட்டிச் சுழலுமானால், அதற்கேற்றவாறு இப்பறவையும் தக்கவாறு திரும்பியும், சுழன்றும், கரணம் போட்டும், அவற்றைப் பிடிக்க முயலும் திறமை அதிசயமாக இருக்கும். இரையைப் பிடித்துக்கொண்டு திரும்பத் தானிருந்த விடத்திற்கு வந்து உட்காரும். இவற்றில் சில சாதிகளுண்டு. அவற்றில் சில அவை காணப்படும் பகுதியிலேயே வாழ்பவை. சில சில பருவங்களில் அவ்விடங்களுக்கு வலசை வருவன.

வாழிடம்[தொகு]

இவை பெரும்பாலும் மரங்களில் இலை, புல், சிறு வளார், வேர், பாசம் முதலியவற்றைக் கொண்டு கிண்ணம்போன்ற கூடு கட்டும் சாதாரணமாக 3-5 முட்டைகள் இடும். மாசி முதல் ஆடி வரையில் இவை குஞ்சு பொரிக்குங்காலம். இவற்றின் ஒலி சாதாரணமாகக் கிண்கிணி போலச் செவிக்கு இனிமையாக இருக்கும். தென்னிந்தியாவிலுள்ள சில இனங்கள் இங்குக் குறிக்கப்படுகின்றன. கருநீல ஈப்பிடிப்பான் (மஸ்க்கிகாப்புலா டிக்கெல்லியீ) ஊர்க்குருவி அளவுள்ளது. ஆண் முதுகுபுறம் நீலி. நெற்றியும் புருவமும் தோளும் பளிச்சென்ற நீலம். மார்பு இரும்புத் துருபோன்ற மங்கலான செந்நிறம். வயிற்றுப்புறம் இறங்கி வரவர வெண்மை நிறம் மிகும். பெண் ஆணைவிட மங்கலாக வெளுத்துத் தோன்றும். இவை தனித்தனியாக இருக்கும். செறிவில்லாத முட்செடிக் குறுங்காடுகளிலும் இலையுதிர் காடுகளிலும் வசிக்கும். மேடு பள்ளமான மலையடிவாரப் பள்ளத்தாக்குக்களில் குளிர்ச்சியான நிழலுள்ள சோலைகளிலும் மூங்கில் புதர்களிலும் இருக்கும். வீட்டுத்தோட்டங்கள் தோப்புக்களிலும் வரும். மிகவும் அழகான இந்தப் பறவை நிழலான தோப்புக்களிலும் தோட்டங்களிலும் இலையுதிர் காடுகளிலும் மூங்கிற் புதர்களிலும் வசிக்கும். இவை தாமாகவும் மற்றும் வேறு சாதிச் சிறு பறவைகளோடு கூடியும் பூச்சி வேட்டையாடும். பூச்சியைப் பிடிக்க ஆண் துவண்டு வளைந்து பறந்து போகும் போதும், மரத்திலிருந்து மரம் மேலுயர்ந்தும் கீழே தாழ்ந்தும் அலை போலப் பறக்கும் போதும் அதன் வால் இறகுகள் கொடிபோலப் பின்னால் ஆடிக்கொண்டு வருவது அழகாக இருக்கும். இதன் ஒலி சே-சேச்வே என்று கேட்கும்; காதுக்கு இனிமையாக இராது. இணைகூடும் காலங்களில் ஆணும் பெண்ணும் இனிமையான சில கலகள் ஒலி செய்யும். மாசி முதல் ஆனி வரையில் முட்டையிடும். விசிறிக்குருவி போலவே இதுவும் மெல்லிய புல்இழை முதலியவற்றைக் கொண்டு கூடுகட்டிச் சிலந்தி வலையைக் கொண்டு போர்த்தும். 3-5 வெண்மை கலந்த ரோஜா நிறமானதும் செம்பழுப்புநிறப் புள்ளி விழுந்ததுமான முட்டையிடும். ஆணும் பெண்ணும் கூடு கட்டுவது முதலிய தொழிலில் ஈடுபடும். எனினும் பெண்ணே நிரம்ப வேலை செய்யும். 15-16 நாள் அடைகாக்கும். குஞ்சு பொரித்து 12 நாளில் கூட்டைவிட்டுப் பறக்கக் கூடும்.

இனங்கள்[தொகு]

வெண்ணீல ஈப்பிடிப்பான் (யூமையியாஸ் தலஸ்ஸினா) : ஆண், பளபளப்பான நீலமும் பச்சையும் கலந்த நிறமுடையது. இதுவும் ஊர்க்குருவியளவே இருக்கும். பெண் ஆணைவிட மங்கலாகவும் நரையாகவும் காணும். இது கோடையில் இமயமலை நெடுக 4-10 ஆயிரம் அடிகளிலும், அஸ்ஸாம், பர்மாவைக் கடந்தும் இருக்கும். குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசைவந்து, தமிழ் நாட்டின் தென்கோடிவரையிலும் செல்லும். இதற்கு நெருங்கிய ஓர் இனம் நீலகிரி வெள்ளைவால் ஈப்பிடிப்பான் (யூமையியாஸ் ஆல்பிகா டேட்டா), தென்னிந்திய மலைகளில் மிகச்சாதாரணமாக வாழ்வது. இதன் நிறமும் நீலமே. வாலின் அடிப்பாகமும் அடிவயிறும் வெண்மையாக இருக்கும்.

வெண்புள்ளி விசிறிக் குருவி (லியூக்கோசர்க்கா பெக்ட்டொராலீஸ்) என்பது மற்றொரு சிறு ஈப்பிடிப்பான். இதை அவர்களின் நடுவிலுள்ள தோட்டங்களிலும் காணலாம். இவை பெரும்பாலும் இணையிணையாகவே வாழும். ஓர் இணை ஏதோ ஓரிடத்தைச் சுற்றியே நிலைத்திருக்கும். இது களிப்புமிக்க சுறுசுறுப்பான பறவை. புகைபோன்ற கபிலநிறமுள்ளது. இதன் புருவம் வெண்மையாக விளக்கமாகக் காணப்படும். மார்பிலும் பக்கங்களிலும் வெண்புள்ளி விழுந்திருக்கும். வயிறு வெண்மை . இதன் சிறப்பான அடையாளம் இதன் வாலே. அதை நிமிர்த்தி வீசிறிபோல விரித்துக்கொண்டு, சிறகுகளை இரண்டு மருங்கிலும் தொங்கவைத்துக் கொண்டிருக்கும். இதைச் சேர்ந்த இன்னோர் இனம் வெண்புருவ விசிறிக்குருவி (லியூக்கோ சர்க்கா ஆரியோலா) உண்டு. அது அகன்ற வெள்ளை நெற்றியும் வெண்மையான அடிப்பாகங்களும் உள்ளது. அது மிகவும் சாதாரணமாக இந்தியா முழுவதும் வாழும் விதிக்குருவிக் கூடு மென்மையான புல்லும் நாரும் இழையும் கொண்டு கட்டின மிக அழகான சிறு கிண்ணம். அதன் மேலெல்லாம் சிலந்தி வலையால் போர்த்தும் வேய்ந்தும் இருக்கும். அது மாம்பழச் சிட் டின் (அயோரா) கூட்டைப்போலவே இருக்கும். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. அதன் கூட்டைப்போல அடியில் வட்டமாக அமையாமல், புல்லுக்கொத்தும், மரப்பட்டை உரியும் குப்பைபோல அசிங்கமாகத் தொங்கவிட்டிருக்கும். மூன்று வெண்மை கலந்த ரோஜா நிறமான முட்டைகளிடும். ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டும். மாறி மாறி அடைகாக்கும். இரண்டும் குஞ்சுகளைப் பேணும். நரைத்தலை ஈப்பிடிப்பான் ((குலிசிகாப்பா சிலோனென்சிஸ்) மலைகளில் சாதாரணமாக உள்ள சிறு பறவை.

அரிவாள் குருவி அல்லது வால் குருவி (சிட்ரியா பரதீசீ (Tchitrea paradisi) என்னும் இன்னொரு ஈப்பிடிப்பான் இங்கு உண்டு. இது கொண்டைக் குருவி யளவிருக்கும். இதில் முதிர்ச்சியுற்ற ஆண் வெள்ளிபோன்ற வெண்ணிறமுடையது. தலை உலோகம்போல் மினுமினுப்புள்ள கரியநிறமுள்ளது. இதில் கரிய கொண்டை உண்டு . வாலில் 10-15 அங்குல முள்ள வெண்மையான இரண்டு இறகுகள் நாடா போலக் காணப்படுகின்றன. நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பெண்ணும் முதிர்ச்சியுறாத ஆண் இளம்பறவையும் முதுகு பக்கம் செம்பழுப்பாகவும், கீழ்ப்பக்கம் நரைவெண்மையாகவும் இருக்கும். இளைய ஆணுக்கு இரண்டு வாலிறகுகளும் செம்பழுப்பாகவே இருக்கும். பெண்ணுக்கு இந்த நீண்ட வாலிறகுகள் இருப்பதில்லை. இவை தனித்தோ இணையாகவோ மர மடர்ந்த இடங்களில் வாழும். இந்தியாவில் எங்கும் 5,000 உயரம் வரையில் இருக்கிறது பல இடங்களில் எப்போதுமே வசிக்கும்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்பிடிப்பான்&oldid=2866481" இலிருந்து மீள்விக்கப்பட்டது