திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னிந்தியத் திருச்சபையின் திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் பேராயம்
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தென்னிந்தியத் திருச்சபை
புள்ளிவிவரம்
உறுப்பினர்கள்88,831 (2000-ம் ஆண்டின் தரவுகளின்படி)
விவரம்
குருக்கள்100+
தற்போதைய தலைமை
ஆயர் †மகாகணம் பொருந்திய பேரருட்திரு. முனைவர். தன்ராஜ் சந்திரசேகரன் அவர்கள்
இணையதளம்
http://www.trichytanjore.csi1947.com/

திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் பேராயம் அல்லது திருச்சி-தஞ்சைப் பேராயம் (CSI Tiruchirappalli-Thanjavur Diocese or CSI Trichy Tanjore Diocese) என்பது, தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்தியத் திருச்சபையின் ஒரு பேராயம் ஆகும். தென்னிந்திய திருச்சபையில் தற்போது இருக்கும் 24 பேராயங்களில் இதுவும் ஒன்று. மேலும் 1947-இல் அங்குரார்பணிக்கப்பட்ட தென்னிந்தியத் திருச்சபையின் ஆரம்பகால 14 பேராயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பேராயத்தைப் பற்றி[தொகு]

இப்பேராயம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி, அரியலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. நிர்வாக வசதிகளுக்காக இந்த பேராயம் தஞ்சாவூர் இறைமாவட்டம், திருச்சிராப்பள்ளி இறைமாவட்டம், பெரம்பலூர் இறைமாவட்டம், கரூர் இறைமாவட்டம், தாராபுரம் இறைமாவட்டம் மற்றும் ஆனைமலை(வால்பாறை) இறைமாவட்டம் என ஆறு இறைமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பேராயம் 2000 ஆம் ஆண்டில் 88,831 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இப்பேராயத்தின் இறைப்பணி, 100க்கும் மேலுள்ள நியமிக்கப்பட்ட ஆயர்களுடன், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கிலாந்தில் இருக்கும் லெஸ்டர் (leicester ) நகர திருச்சபை, இப்பேராயத்தின் கூட்டுத் திருச்சபை ஆகும். முதன்மையாக, பெண்கள் மற்றும் தவறாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதிய சமூக படிநிலைகளில் கீழ் நிலையில் இருப்போரை மிளிர்த்தலே இப்பேராயத்தின் உந்துதல்.

பேராயத்தின் ஊழிய சேவைகள்[தொகு]

இப்பேராயமானது கல்விச்சேவைகள், மருத்துவ சேவைகள், பழங்குடியினர் நலச்சேவைகள், மிஷன் & நற்செய்தி ஊழியங்கள் மற்றும் பெண்கள் நல சேவைகளை செய்கிறது.

கல்விச்சேவை[தொகு]

இப்பேராயத்தில் 52 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 17 மேல்நிலைப் பள்ளிகள், 2 நர்சிங் பள்ளிகள், 1 தொழில்துறை பயிற்சி மையம் மற்றும் 4 கல்லூரிகள் (கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, செவிலியர் மற்றும் சமூக நலனில் நிபுணத்துவம் பெற்றவை) உள்ளன. இந்த பேராயத்தின் அனைத்து நிறுவனங்களும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களில் பலவும் தமிழக மாநிலத்தின் ஆரம்ப காலங்களில் அப்போதைய மிஷனரிகளால் சேவை நோக்கங்களுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய தியாகத்தினால், அந்நிறுவனங்கள் இருக்குமிடங்களில் மிகச்சிறந்த கல்வி சேவைகளை வழங்கும்படி நிறுவப்பட்டிருக்கின்றது. இக்கல்விநிலையங்களில் பலவும் உண்டு உறைவிட சேவையுடன் கூடிய கல்வி நிலையங்கள் ஆகும்.

மருத்துவ சேவை[தொகு]

இப்பேராயத்தில் 2 பொது மருத்துவமனைகள் உள்ளன; சி.எஸ்.ஐ மிஷன் பொது மருத்துவமனை திருச்சிராப்பள்ளியின் உறையூரிலும், சி.எஸ்.ஐ டாக்டர். ஆனி பூத் மிஷன் மருத்துவமனை, தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ மிஷன் வளாகத்திலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பன்முக சிறப்பு மருத்துவமனைகளிலும், நவீன வசதிகள், உள்கட்டமைப்பு, கடவுளின் மகிமைக்கென அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் மற்றும் ஊழியர்களைக் கொண்டு குணப்படுத்தும் மருத்துவ ஊழியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. திருச்சிராப்பள்ளியில் உள்ள சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் 2019 ஆம் ஆண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நல ஊழிய சேவை[தொகு]

இப்பேராயத்தின் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் பழங்குடியினர் மத்தியில் அவர்களுக்கான நலத்திட்டங்களை இப்பேராயம் செயல்படுத்துகிறது.

மிஷன் மற்றும் நற்செய்தி ஊழியங்கள்[தொகு]

இப்பேராயத்தின் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் மிஷன் மற்றும் சுவிசேஷ ஊழியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெண்கள் நல சேவைகள்[தொகு]

மகளிரின் மிளிர்த்தலை தனது முக்கிய உந்துதல்களில் ஒன்றாக இப்பேராயம் கொண்டிருக்கிறபடியினாலே, மகளிரின் வாழ்க்கைமுறை மற்றும் அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை இப்பேராயம் மேற்கொண்டு வருகிறது.

பேராய அச்சகம் மற்றும் புத்தகம்[தொகு]

திருச்சிராப்பள்ளியின் உறையூரில் பேராயத்திற்கென்று அதன் சொந்த அச்சகம் உள்ளது; அங்கு அவர்கள் படிக்கும் அனைத்து பொருட்களையும் அச்சிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாதமும் உள்விநியோக முறையில் "திருச்சபை மலர்" என்ற புத்தகத்தை வெளியிடுகிறார்கள்.

பேராயத்தின் முக்கிய அலுவலர்கள்[தொகு]

பேராயத்தின் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆயர், பேராயராக இப்பேராயத்திற்கு தலைமை வகிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அப்பேராயர், தனது சேவை காலத்தில், இப்பேராயத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் தலைவரென கருதப்பருகிறார். அனைத்திற்கும் தலைமை சேவை பொறுப்பிலிருக்கும் பேராயரைத் தவிர, குருத்துவ செயலர் எனும் சேவை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேராயத்தில் இருக்கும் ஆயர்கள் மற்றும் நற்செய்தியாளர்களையும், இறைமக்கள் செயலர் எனும் சேவை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேராயத்தின் மற்ற பணியாளர்களையும், கல்விச் செயலர் எனும் சேவை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கல்வி நிலையங்களையும் அவரவர்களின் பொறுப்பு காலங்களில் கவனித்துக்கொள்கின்றனர் . அனைத்து நிறுவனங்களை போலவும் வரவு செலவுகளை மேற்கொள்ளவும் கவனிக்கவும் இந்த பேராயத்திற்கு ஒரு பொருளாளர் அல்லது பொக்கிஷதாரர் பேராயரால் நியமிக்கப்படுகிறார்.

பேராயத்தின் பேராயர்களும் அவர்களின் பதவிக்காலமும்[தொகு]

இத்திருமண்டலத்தில் பணியாற்றிய பேராயர்களின் பட்டியல் பின்வருமாறு:

பேரருட்திரு. முனைவர். எட்கர் பென்ட்லி தோர்ப் (1947-1962)[தொகு]

பேரருட்திரு. முனைவர். எட்கர் பென்ட்லி தோர்ப்

வெசுலிய மெதடிச மிஷனரியும், பெங்களூரில் பிறந்தவருமாகிய எட்கர் பென்ட்லி தோர்ப் (The Rt. Rev. Dr. Edgar Bentley Thorp) இப்பேராயத்தின் முதல் பேராயர் ஆவார். 27 செப்டம்பர் 1947 அன்று சென்னை புனிதர் ஜார்ஜ் பேராலயத்தில் தனது 42-ம் அகவையில் பேராயராகப் புனிதப்படுத்தப்பட்டார். அவர் முன்னாள் போதகரும், அன்றைய மைசூரு (Mysore) மாவட்டத் தலைவருமான வில்லியம் ஹூபர்ட் தோர்பின் (Mr.William Hubert Thorp) மகனாவார். மேலும் அவர், பேராயர்களாகப் புனிதப்படுத்தப்பட்ட இரண்டு வெசுலிய மிஷனரிகளில் ஒருவராக இருந்தார். இவர், கிங்ஸ்வுட் பள்ளியில் (Kingswood School) படித்தவரும், ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்ற ஒரு புகழ்பெற்ற அறிஞரும் கல்வியாளரும் ஆவார். பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த கணிதவியலாளராக இருந்த அவர், திருச்சபையின் திருப்பணிகளுக்காக அறிவியலைத் துறந்தார். மார்பர்க்(Marburg)-ல் ஒப்பீட்டு மதக் கோட்பாட்டியலைக் கற்ற பின்பு 1930-ல் அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தார். தாராபுரத்தில் இருந்த வேதாகாமப் பள்ளியில் முதல்வராக இருந்துகொண்டு கிராமத்து சுவிஷேஷகர்களுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருந்தார். அம்மாவட்டத்தின் தலைவராக 1945-ம் ஆண்டுமுதல் 1947-ம் ஆண்டு வரை இருந்தார். திருமண்டலத்தை 15 ஆண்டுகளாக பேராயராக வழிநடத்தி வந்த அவர், 1962-ல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தியாவை விட்டு வெளியேறினார். தாராபுரம் வெகுஜன இயக்கப் பகுதியிலும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும், வறுமையில் வாடும் கிராம கிறிஸ்தவர்களிடையே அவரது அலங்காரமில்லாத எளிய வாழ்க்கைமுறையின்படி அவர் மேற்கொண்ட ஊழியங்களும்; பேராயராக, அவரின் பக்கச்சார்பற்ற தலைமைப் பண்புகளும் பேராயத்தில் இருந்த ஆங்கிலிகன் (Anglican) சிறுபான்மையினரிடத்திலும் மெதடிஸ்ட் (Methodist) பெரும்பான்மையினரிடத்திலும் ஒற்றுமையை வளர்த்தது. பேராயரவர்கள் செப்டம்பர் 1, 1991-ல் பிரஸ்டாட்டினில் (Prestatyn) மரித்தார். தாராபுரத்தில் உள்ள பிஷப் தோர்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

பேரருட்திரு. முனைவர். டேவிட் செல்லப்பா (1962-1964) (இடைக்கால பேராயர்)[தொகு]

பேரருட்திரு. முனைவர். டேவிட் செல்லப்பா

பேராயர் தோர்ப் அவர்கள் அவசரமான உடல்நிலை காரணங்களினால் இந்தியாவை விட்டு வெளியேறியதாலும், அச்சமயத்தில் உடனடியாக ஒரு காப்புத்திட்டத்தை செயல்படுத்த இயலாததாலும், அப்போதைய தென்னிந்திய திருச்சபையின் பெரும்பேராயராக இருந்த அதி பேரருட்திரு. அர்னால்டு ஹென்றி லெக் (The Most Rev. Arnold Henry Legg) அவர்கள் பேராயர் டேவிட் செல்லப்பாவின் தலைமையை திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயத்திற்கும் அளித்திட கேட்டுக்கொண்டார். பேராயர் டேவிட் செல்லப்பா அவர்களுக்கு இத்திருமண்டலத்தோடு நெடிய தனிப்பட்ட தொடர்பு உண்டு. 1933-ல் பேராயர் எட்வர்ட் ஹென்றி மனஸ்ஃபீல்டு வாளர் (Rt. Rev. Edward Harry Mansfield Waller) அவர்களால் ஆயராக அருட்பொழிவு பெற்றபின்பு, திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் திருமண்டலத்தின் மேட்டுப்பட்டி மற்றும் இருங்களூர் திருச்சபைகளுக்கு ஆயராக பணிக்கப்பட்டிருந்தார். பேராயரவர்கள், தஞ்சாவூரில் இருந்த அன்றைய ஒப்பில்லாத மற்றும் புகழ்பெற்றிருந்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து வந்த திருமதி. எலிசபெத் டேனியல் செல்லப்பாவின் மகனாவார். திருமதி. எலிசபெத் டேனியல் செல்லப்பா அவர்கள், தஞ்சாவூரின் போன்ஸ்லே ராஜவம்சத்தின் இரண்டாவது சரபோஜி மன்னரின் சட்ட ஆலோசகராக இருந்த திரு. டேவிட் பிள்ளையின் மகளாவார். திரு. டேவிட் பிள்ளை அவர்கள், சிறந்த மற்றும் அர்ப்பணம் மிகுந்த டச்சு மிஷனரியாகிய அருள்திரு. கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் ஷ்வார்ட்ஸ் ஆயரவர்களாலே கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட்ட தஞ்சாவூரின் திரு. மலையப்பெருமானின் கொள்ளுபேரனாவார். திருமதி. எலிசபெத் டேனியல் செல்லப்பா அவர்கள், நீதியரசர். திரு. டேனியல் செல்லப்பாவை மணந்துகொண்டார். மேலும் தனது முதல் குழந்தைக்கு தனது தந்தையின் நினைவாக, டேவிட் செல்லப்பா என பேரிட்டார்கள். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயத்தை ஒரு "இடைக்கால பேராயராக" பேராயர் டேவிட் செல்லப்பா அவர்கள் 7 பிப்ருவரி 1964 வரையில் வழிநடத்தினார். மேலும் அதே ஆண்டில், ஆகஸ்டு 25-ம் தேதி மரித்தார். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலே பேராயர் தங்கியிருந்தபோது, மிச்சிகன் மாகாணத்தின் ஹோலாண்டில் இருக்கும் ஹோப் கல்லூரி, அவருக்கு கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கியது.

அதி பேரருட்திரு. சாலமன் தொரைசாமி (1964-1982)[தொகு]

அதி பேரருட்திரு. சாலமன் தொரைசாமி அவர்கள் இப்பேராயத்தை வழிநடத்திய முதல் இந்திய பேராயராவார். பேராயர் தோர்ப் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றபின்பு இப்பேராயம் ஒரு குழப்ப நிலையிலிருந்ததாக பேராயரவர்கள் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயம், பேராயர் வேட்பாளர் குழுவை தேர்ந்தெடுத்து அனுப்ப தவறியிருந்தது. உள் விவகார பிரச்சினைகளாலும், பேராயத்தின் அரசியலமைப்பு சட்டத்தின் படி பேராயர் பொறுப்பிற்கு, குறைந்த பட்சம் இரண்டு பேராயர் வேட்பாளர்களின் பெயர்களையாவது அனுப்பாமல் ஒரே பெயரை பரிந்துரைத்து அனுப்பியதாலும், தென்னிந்திய திருச்சபை ஆலோசனை சபை குழு (Synod), அருள்திரு. சாலமன் தொரைசாமியை திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயத்தின் பேராயராக நியமித்தது. அதிகாரப்பூர்வமாக, 8 பிப்ருவரி 1964 -ல் தஞ்சாவூரில் இருக்கும் தூய பேதுரு தேவாலயத்தில் அதி பேரருட்திரு. அர்னால்டு ஹென்றி லெக் அவர்களாலும், அதி பேரருட்திரு. பெரெஜி சாலமன் அவர்களாலும் பேராயராக புனிதப்படுத்தப்பட்டார். சரியான நேரத்திற்கு தயார் செயாததால், புனிதப்படுத்தும் நிகழ்விற்கு, பேரருட்திரு.டேவிட் செல்லப்பாவின் மோதிரமும், சிலுவையும், செங்கோலுமே பயன்படுத்தப்பட்டன.

சென்னை பெண்கள் கிறித்துவக் கல்லூரியிலே 10 முதல் 14 ஜனவரி 1974-லே நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் ஆலோசனை சபை குழு (Synod) கூட்டத்திலே பேராயர் தொரைசாமி அவர்கள் தென்னிந்திய திருச்சபையின் துணை பெரும்பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதே நிலையிலே சுமார் மூன்று பதவி காலங்களுக்கு பொறுப்பிலிருந்தார் (1974-1976; 1976- 1978 மற்றும் 1978-1980). மீண்டும், 10-ம் தேதி முதல் 14-ம் தேதி ஜனவரி 1980-ம் ஆண்டு சென்னை, தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியிலே நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் 17-வது ஆலோசனை சபை குழு (Synod) கூட்டத்திலே, தென்னிந்திய திருச்சபையின் பெரும் பேராயராக 1982 வரையில் இருந்த பதவி காலத்தில் பொறுப்பு வகித்தார். அவருடைய பொறுப்பு காலத்திலே, நிறைய மக்களுக்கு இணக்கமான திட்டங்களையும், மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களையும் அவர் உயிர்ப்பித்தார் மற்றும் புதிதாக உருவாக்கினார். திருச்சிராப்பள்ளியில் இருக்கும் பிஷப் ஹீபர் கல்லூரியின் மறுபிறப்பு, அவருடைய சாதனைகளுக்கு ஒரு சான்று. அவருடைய சாதனைகளில், பிஷப் ஹீபர் கல்லூரி, பிஷப் ஹீபர் பள்ளிகள், கிண்டர்நோத்லைஃப் (Kindernothlife), ஆகியவை அதிகமாக நினைவுகூரப்பட்டவைகளில் சில. கொல்கத்தா செராம்பூர் கல்லூரியின் (பல்கலைக்கழகம்) ஆட்சிமன்ற குழு (Senate of Serampore College (University)) 1981-ல், பேராயரவர்களுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தது. பணிமூப்பின் காரணமாக 1982-ம் ஆண்டில் தனது 65-ம் அகவையில் பேராயரவர்கள் பணியிலிருந்து ஓய்வடைந்தார்.

பேரருட்திரு. முனைவர். இராஜமாணிக்கம் பால்ராஜ் (1982-1998)[தொகு]

பேரருட்திரு. இராஜமாணிக்கம் பால்ராஜ்

பேரருட்திரு. முனைவர். இராஜமாணிக்கம் பால்ராஜ் அவர்கள், 21 ஜனவரி 1982 அன்று திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயத்தின் மூன்றாவது பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இப்பேராயத்தை 16 ஆண்டுகள் வழிநடத்தினார். இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மூன்று முனைவர் பட்டங்களை கற்றறிந்து பெற்றவர். தென்னிந்திய திருச்சபையின் ஆலோசனை சபை குழுவில் முனைப்போடு செயலாற்றிய இவரை 1994-ல் திருச்சிராப்பள்ளியிலுள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் ஆலோசனை சபை குழு 1994-1996 ம் ஆண்டுக்கான பொறுப்புக்காலத்தில் துணை பெரும்பேராயராக பணியாற்ற தெரிவு செய்தது. தாராபுரம் பகுதியிலிருந்த உயர்கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த முன்னாள் பேராயர் 1984 ஆம் ஆண்டில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்த "பிஷப் தோர்ப் கல்லூரி"-ஐ (Bishop Thorp College) துவங்க தென்னிந்திய திருச்சபை திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பேராயத்தின் மூலம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இவ்வாறு, "பிஷப் தோர்ப் கல்லூரி" தமிழ்நாட்டின் "முதல் சுய நிதிக் கல்லூரி" (First Self-Financing College) ஆக உருவெடுத்தது. பேராயரவர்கள் 18 ஜனவரி 2016 அன்று தனது 82-வது அகவையில் நித்திரையடைந்தார்.

பேரருட்திரு. முனைவர். டேனியல் ஜேம்ஸ் சீனிவாசன் (1998-2008)[தொகு]

பேரருட்திரு. முனைவர். ஞானமுத்து பால் வசந்தகுமார் (2008-2018)[தொகு]

பேரருட்திரு. முனைவர். தன்ராஜ் சந்திரசேகரன் (2018-லிருந்து பொறுப்பில் உள்ளவர்)[தொகு]

பேரருட்திரு டி. சந்திரசேகரன் அவர்கள் பேராயத்தின் ஆறாவது பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டார். பேராயரவர்கள், திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரியிலுள்ள புனித லூக்கா தேவாலயத்தில் (St. Luke's Church) 28 மே 2018 அன்று தென்னிந்திய திருச்சபையின் பெரும்பேராயரும் (Moderator), தென்னிந்திய திருச்சபை, மத்திய கேரள பேராயத்தின் பேராயருமான அதி பேரருட்திரு. தாமஸ் கஞ்சிரப்பள்ளி ஊம்மென் (The Most Rev. Thomas Kanjirappally Oommen) அவர்களால் புனிதப்படுத்தப்பட்டார்.

இறையியல் கல்வி[தொகு]

செராம்பூர் கல்லூரியின் ஆட்சி குழுவின் இறையியல் கல்வி வாரியத்துடன் இணைந்த கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இரையிறர்ப் பட்டங்களை இப்பேராயம் அங்கீகரிக்கிறது. அக்கல்வி நிறுவனங்கள் பின்வருமாறு:

  • கேரள ஐக்கிய இறையியல் பாடசாலை (KUTS), திருவனந்தபுரம்
  • ஆந்திர கிறிஸ்தவ இறையியல் கல்லூரி ( ACTC ), ஹைதராபாத்
  • பிஷப்ஸ் கல்லூரி (கல்கத்தா) | பிஷப்ஸ் கல்லூரி ( BC ), கொல்கத்தா
  • குருகுல் லூத்தரன் இறையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( GLTCRI ), சென்னை
  • கர்நாடக இறையியல் கல்லூரி ( KTC ), மங்களூர்
  • தெற்காசியா இறையியல் ஆராய்ச்சி நிறுவனம் ( SATHRI ), பெங்களூரு
  • செராம்பூர் கல்லூரி ( SC ), செராம்பூர்
  • தமிழ்நாடு இறையியல் கல்லூரி|தமிழ்நாடு இறையியல் கல்லூரி (TTS), மதுரை
  • யுனைடெட் இறையியல் கல்லூரி (UTC), பெங்களூரு

பேராயத்திலுள்ள சேகரங்கள்[தொகு]

ஆனைமலை (வால்பாறை) இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

  • ஆனைமுடி சேகரம்
  • ஹென்றி எட்வின் பிளெபி (Henry Edwin Bleby) சேகரம்
  • ஐயர்பாடி சேகரம்
  • கருமலை சேகரம்
  • முடீஸ் (Mudis) சேகரம்
  • நடுமலை சேகரம்
  • சோலையார் நகர் சேகரம்
  • சிறுகுன்றா சேகரம்
  • வால்பாறை சேகரம்
  • வில்லோனி சேகரம்
  • வாட்டர்ஃபால்ஸ் (Waterfalls) சேகரம்

தாராபுரம் இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

கரூர் இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

பெரம்பலூர்-கொள்ளிடம் இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

தஞ்சாவூர் இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

திருச்சிராப்பள்ளி இறைமாவட்டத்தில் உள்ள சேகரங்கள்[தொகு]

  • சகல பரிசுத்தவான்களின் தேவாலயம் சேகரம்
  • பெத்தேல் சேகரம்
  • கிறிஸ்துநாதர் தேவாலயம் பொன்மலை வடக்கு-டி சேகரம்
  • இம்மானுவேல் தேவாலயம் சேகரம்
  • புனிதர் திரித்துவ தேவாலயம், காட்டூர் சேகரம்
  • மணப்பாறை சேகரம்
  • ஓ.எஃப்.டி (துப்பாக்கி தொழிற்சாலை) தேவாலயம் சேகரம்
  • மீட்பரின் தேவாலயம் சேகரம்
  • புனிதர் அந்திரேயா தேவாலயம் சேகரம்
  • புனிதர் கிறிஸ்டோபர் தேவாலயம் சேகரம்
  • புனிதர் மத்தேயு தேவாலயம் சேகரம்
  • புனிதர் யோவான் தேவாலயம் சேகரம்
  • புனிதர் லூக்கா தேவாலயம் சேகரம் (பிஷப் ஹீபர் கல்லூரி சிற்றாலயம், சாட்சிகளின் கூடாரம்) ( http://bhc.edu.in/Lukechurch/ )
  • புனிதர் மாற்கு தேவாலயம், கருமண்டபம் சேகரம்
  • புனிதர் பவுல் தேவாலயம் சேகரம்
  • புனிதர் பேதுரு தேவாலயம் பொன்மலை (GOC) சேகரம்
  • புனிதர் தோமா தேவாலயம் சேகரம்
  • மலைகோட்டை கிறிஸ்துநாதர் தேவாலயம் சேகரம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]