சங்கரலிங்கனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டன் சங்கரலிங்கனார்
பிறப்புமண்மலைமேடு, விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு(1956-10-13)அக்டோபர் 13, 1956
விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
கல்லறைமதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிவணிகர்
அறியப்படுவதுதமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்பெரிய கருப்பசாமி
வள்ளியம்மை

கண்டன் சங்கரலிங்கனார் (Sankaralinganar, 1895 - 13 அக்டோபர் 1956) என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன், உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர்.[1][2] விபரம் தேவை.

வாழ்க்கை[தொகு]

சங்கரலிங்கம் 1895 ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி, வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர், வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் சங்கத்தையும் துவக்கிய இவருக்கு இராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் பொட்டி சிறீராமுலுவின் உண்ணாவிரதம் ஏற்படுத்திய பாதிப்பிலும், ம. பொ. சி.யின் தமிழரசுக் கழகம், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்.

உண்ணாவிரதம்[தொகு]

இவர் காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 சூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல் வாழ வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழிற்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன், சூலை 27 ஆம் தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார். அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாதுரை, காமராசர், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர், இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை. நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணாதுரை. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார்.

“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார். 79 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. (சூலை - 5 நாட்கள், ஆகத்து - 31 நாட்கள், செப்டம்பர் - 30 ,நாட்கள், அக்டோபர் 13 நாட்கள், மொத்தம் 79 நாட்கள். திருத்தம் த.ரெ. தமிழ்மணி) தமிழகத்தில் அப்போதிருந்த நாளிதழ்களில் இதுகுறித்த செய்திகள் நாளும் வெளிவந்து கொண்டிருந்தன.[3]

மறைவு[தொகு]

அக்டோபர் 10 ஆம் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் 1956 அக்டோபர் 13 அன்று அவருடைய உயிர் பிரிந்தது. அப்போது சென்னை மாகாணத்தில் இந்த செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரை தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இறந்தபின் தன் உடலைப் பொதுவுடமைக் கட்சியிடம் ஒப்படைத்து, இறுதிமரியாதை செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறினார்.[4] அதையொட்டி அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள். கம்யூனிஸ்டுத் தலைவர் கே. டி. கே. தங்கமணி, கே. பி. ஜானகியம்மாவும் மருத்துவமனைக்குச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, உடலைப் பெற்றனர். மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது.[5] தியாகி சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக‍ அரசால் விருதுநகர் கல்லூரி சாலையில் நகராட்சி பூங்கா அருகில் 76 இலட்சம் செலவில், மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[6]

தமிழ்நாடு பெயர் மாற்றம்[தொகு]

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னாளில் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு 1967, ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. அதன் தொடர்ச்சியாக, 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968 இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து திசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விரைவில் திறப்பு: தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்தவர்
  2. தியாகி சங்கரலிங்கனார்
  3. http://nadarmahajanasangam.com/index.php?/freedom_fighters
  4. ஸ்ரீரசா (23 ஆகத்து 2014). "இன்னொரு மொழிப்போருக்கான வாசலில்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 4. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2014.
  5. "தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விரைவில் திறப்பு: தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்தவர்". இந்து தமிழ் (நாளிதழ்). 4 September 2014 இம் மூலத்தில் இருந்து 1 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180301104448/http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article6378767.ece. 
  6. "பணிகள் முடிந்து தயார் நிலையில் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம்". தினமணி (டிசம்பர் 23, 2014)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரலிங்கனார்&oldid=3909278" இலிருந்து மீள்விக்கப்பட்டது