தெங்குமரஹாடா

ஆள்கூறுகள்: 11°34′06″N 76°55′35″E / 11.568232°N 76.926494°E / 11.568232; 76.926494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெங்குமரஹாடா
இருப்பிடம்: தெங்குமரஹாடா

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°34′06″N 76°55′35″E / 11.568232°N 76.926494°E / 11.568232; 76.926494
மாவட்டம் நீலகிரி
வட்டம் கோத்தகிரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தெங்குமரஹாடா, (Thengumarahada), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள தெங்குமரஹாடா ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்கு மாயாறு பாய்கிறது.

அமைவிடம்[தொகு]

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காப்புக் காட்டில் அமைந்த முதுமலை தேசியப் பூங்கா பரப்பில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இக்கிராமம் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி வட்டத்தில் அமைந்திருப்பினும், கொடநாட்டிலிருந்து மலைக்காடுகள் வழியாக, மூன்றரை மணி நேரம் நடந்து, 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். தெங்குமரஹாடாவிலிருந்து கொடநாடு செல்ல அடிப்படை சாலை வசதிகள் இல்லை.

ஈரோடு மாவட்டத்தின், பவானிசாகருக்கு வடமேற்கே 25 கிமீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடாவிற்கு செல்ல கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் உள்ளன.

மலையேற்றம்[தொகு]

தெங்குமரஹாடா பகுதிக்கு மலையேற்றப் பயிற்சி மேற்கொள்பவர்கள் உதகமண்டலம் வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். வனத்துறை வழிகாட்டிகள் மூலம் மட்டும் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள முடியும். தெங்குமரஹாடாவில் உள்ள வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.[3][4]

பின்னணி[தொகு]

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, உணவு உற்பத்தி மாதிரி கிராமங்களை உருவாக்கினார். இதில் தெங்குமரஹாடா கிராமமும் ஒன்று. 1948ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி, சோலூர்மட்டத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 142 விவசாயிகளுக்கு தெங்குமரஹாடாவில் 500 ஏக்கர் நிலம் வழங்கி விவசாயம் செய்ய வழி வகை செய்யப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தலா 2 ஏக்கர் நஞ்சை மற்றும் ஓர் ஏக்கர் புஞ்சை நிலம் வழங்கப்பட்டது. இந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி செய்ய கோபி, ஈரோடு, சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ளவர்களை பணியமர்த்தினர். விவசாயத்துக்கான நிலம் மற்றும் தண்ணீர் வசதி இருந்ததால் நாளடைவில் தெங்குமரஹாடா செழிப்பான பூமியாக மாறியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தெங்குமரஹாடா கூட்டுறவு பண்ணை சங்கம் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கம் மூலம் விளைபொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

மக்கள் பிரச்சனைகள்[தொகு]

இக்கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக 350 குடும்பங்கள், இங்கு பாயும் மோயாறு நீர்வளத்தைக் கொண்டு காட்டு வேளாண்மை செய்து வாழ்கின்றனர். சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் நிறுவப்பட்டதற்குப் பின், தெங்குமரஹாடா கிராம மக்கள், 38 கிமீ கிழக்கில் உள்ள சத்தியமங்கலத்தில் உள்ள கல்விநிலையம், சந்தை மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு, நல்ல சாலை வசதி இன்மையால் பெருந்துயர் கொள்கின்றனர். இதனால் தெங்குமராஹாடா கிராம மக்கள் தங்களை வேறிடங்களில் குடியேற்றி வாழ வழிவகை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.[5]

முதுமலை தேசியப் பூங்கா விரிவாக்கதிற்கு மக்கள் வெளியேற்றம்[தொகு]

497 குடும்பங்கள் வாழும் தெங்குமரஹடா கிராமம் முதுமலை தேசியப் பூங்காவின் கிழக்கு எல்லைப்பகுதியாக உள்ளது. 1948ல் உருவான தெங்குமரஹடா கிராமம் பயிரிடுவதற்காக 100 ஏக்கர் நிலம் தெங்குமரஹடா கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் 500 ஏக்கர் வன நிலம் குத்தகையாகவும் அரசு வழங்கியது. இந்த தெங்குமரஹடா கிராமம் தான் முதுமலை புலிகள் சரணாலயத்தின் கிழக்கு எல்லைப்பகுதியாக உள்ளது.

இக்கிராமம் யானைகளின் வலசைப்பாதையாக உள்ளது. மாயாற்றில் முதலைகளும், மற்ற வனத்தைவிட அதிக அளவில் புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல காட்டுயிர்களும் உள்ளன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பில், இக்கிராமத்தை சுற்றிய காட்டுப்பகுதியில் மட்டும் 33 புலிகள் இருப்பதாக வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். தெங்குமரஹடா கிராமத்தை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அண்மையில் நடந்த புலிகள் கணக்கெடுப்பில், தெங்குமரஹடா கிராமத்தை சுற்றி 33 புலிகள் உள்ளனவாம். இதனிடையே மனிதர்கள் - விலங்குகள் மோதல் கருதி, வனப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றி வேறு பகுதியில் குடியேற்ற அரசு முடிவு செய்தது. இக்கிராமத்தில் வசிக்கும் 497 குடும்பங்களை வேறிடத்திற்கு மாற்ற, குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில், 74.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டது. தமிழக அரசுக்கும் இதற்கான பரிந்துரையை அக்டோபர் 2022ல் அனுப்பி வைக்கப்பட்டது[6] [7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தெங்குமரஹாடா மலையேற்றப் பயிற்சிக்கு
  4. தெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்
  5. Thengumarahada village ready to relocate
  6. தெங்குமரஹடா கிராமத்தினர் இடமாற்றம் மாற்றம்
  7. தெங்குமரஹடா கிராமத்தினர் வெளியேறப்போவது எப்போது? மத்திய அரசுக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
  8. காலியாகிறது தெங்குமரஹாடா? - வாழ்வாதாரம் பாதிக்கும் என பழங்குடியின மக்கள் அச்சம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்குமரஹாடா&oldid=3800584" இலிருந்து மீள்விக்கப்பட்டது