ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
பிறப்புமருதங்குளம், சிலாபம், இலங்கை
இறப்பு(2014-07-29)சூலை 29, 2014
சிலாபம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஒலிபரப்பாளர்
பணியகம்இலங்கை வானொலி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
அறியப்படுவதுவானொலி அறிவிப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்முத்தையா, பொன்னம்மாள்

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் (இறப்பு: சூலை 29, 2014) இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கனகரத்தினம் இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் அருகே உள்ள மருதங்குளம் என்ற ஊரில் முத்தையா, பொன்னம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர்.[1] கோட்டையை ஆண்ட காலியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரை பெயர்.[1] மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.

ஒலிபரப்புத் துறை[தொகு]

1960களின் ஆரம்பத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஒரு அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார். அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலிபரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். பொதிகைத் தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார். பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்

திரைப்படத் துறை[தொகு]

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்.[2]

எழுதி வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • மனம் போன போக்கில் (1988)
  • மன்னருக்குக் கோபம் வந்தால்
  • கம்பரும் கவிஞரும்
  • என்தமிழ்

மறைவு[தொகு]

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார்.[3] அவரது உடல் சிலாபத்தில் உள்ள காக்காப்பள்ளி என்ற ஊரில் எரியூட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ராஜகுரு சேனாதிபதி என்ற பெயரைப் பயன்படுத்த மயில்வாகனமே காரணம்..." இம் மூலத்தில் இருந்து 2013-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703020754/http://www.thinakaran.lk/vaaramanjari/2010/10/03/?fn=f1010038.  - தினகரன் வாரமஞ்சரி, அக்டோபர் 3, 2010
  2. எ. வீ. சந்திரன் (ஏப்ரல் 5 2015). "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்". வீரகேசரி. 
  3. ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், சூலை 30, 2014

வெளி இணைப்புகள்[தொகு]