இராஜ ராஜேஸ்வர சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜ ராஜேஸ்வர சேதுபதி அல்லது மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (3 சூன் 1889 - 1929) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீன்தாராக 1903 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். இவர் பாஸ்கர சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவரும் ஆவார்.

வாழ்கைக் குறிப்பு[தொகு]

இவரது தந்தையான பாஸ்கர சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகனான இராஜ இராஜேஸ்வரன் பாலகனாக இருந்தார். இதனால் பிரித்தானிய அரசால் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகமானது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரச குடும்பத்தையும் பராமரித்து வந்ததனர். இராஜ இராஜேஸ்வர சேதுபதி கல்வியிலும் நிர்வாகத்திலும் பயிற்சி பெற்றபின் 1910இல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1929இல் இறக்கும்வரை ஜமீன்தாராக இருந்தார்.

பணிகள்[தொகு]

இவர் நல்ல தமிழ்ப் புலமையும் ஆங்கிலதிதில் பேச்சாற்றலையும் உடையவராக இருந்தார். 1911 இல் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார். சென்னை மாகாண ஆளுநரின் பொறுப்பிலிருந்த சென்னை மாகாண சட்ட மேலவையில் ஜமீன்தார்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே இடத்தின் பிரதிநிதியாக இருந்தார். இவர் ஆட்சியின் போது இரண்டாம் உலகப் போர் நடந்ததால், நேச நாடுகளை வலுப்படுத்துவதற்காக இராமநாதபுரம் சீமை மறவர்களை இராணுவ அணியில் சேருமாறு பிரச்சாரம் செய்தார். மேலும் பல இலட்சங்களை போர் நிதியாக அளித்து அதிலிருந்து இராம்நாட் என்று பெயர் சூட்டப்பெற்ற விமானம் ஒன்றை வாங்கி அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் தலைவராக இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவரது பணிக் காலத்தில் இன்றைய மானாமதுரை நகரை மானாமதுரை இரயில் சந்திப்புடன் இணைப்பதற்காக வைகை ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் ஒன்றை கட்டுவித்தார். இராமேஸ்வரம் வரும் பயணிகள் தனுஷ்கோடி தீர்த்தக் கரையில் நீராடுவதற்காக இராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தர்மப் படகு சேவையைக் கடலில் தொடங்கி வைத்தார். மற்றும் திருப்புல்லாணி பெருமாளது திருத்தேர் (திருமலை ரெகுநாத சேதுபதியினால் வழங்கப் பெற்றது.) மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், புதிய தேர் ஒன்றையும் செய்வித்து அந்த கோவிலுக்கு வழங்கினார். மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் வடக்கு ராஜகோபுர திருப்பணிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். 1921இல் திருச்சி நகரில் நடைபெற்ற பிராமணர் அல்லாதார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

தமிழ்ப் பணிகள்[தொகு]

இந்த மன்னரது தந்தையார் ஆட்சிக்காலத்தில் இருந்து சேதுபதி சமஸ்தான அவைப் புலவராகப் பணியாற்றிய மகாவித்துவான் இரா. இராகவயங்காரின் வாழ்க்கைக்காக இராமநாதபுரம் நொச்சிவயல் ஊரணி வீதியில் ஒரு வீடு ஒன்றை அமைத்துக் கொடுத்ததுடன், இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள போகலூர் கிராமத்தில் ஆற்றுப் பாய்ச்சலில் விளைநிலங்களையும் வாங்கித் தானமாக வழங்கினார். இவரது தந்தையைப் போலவே இவரும் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தார். நூற்றுக்கணக்கான தனிப்பாடல்களை எழுதியிருப்பதுடன் திருக்குறள் வெண்பா என்ற நூலினையும் இயற்றியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. VIII இராஜ இராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (1910-1929) (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 104-105. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058. 
முன்னர்
பாஸ்கர சேதுபதி
இராமநாதபுரம் மன்னர்
1903–1929
பின்னர்
சண்முக ராஜேஸ்வர சேதுபதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ_ராஜேஸ்வர_சேதுபதி&oldid=3580876" இலிருந்து மீள்விக்கப்பட்டது