சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பது இலங்கையில், கொழும்பில் 2011 சனவரி 6 முதல் சனவரி 9 வரை நடைபெற்ற ஒரு பன்னாட்டு தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆகும். இந்த மாநாட்டை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்தது. இந்த மாநாட்டின் முதன்மை ஏற்பாட்டாளர் ஆத்திரேலியாவைச் சேர்ந்த லெ. முருகபூபதி ஆவார்.

காரணங்கள்[தொகு]

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு 12 காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.[1] அவை பின்வருமாறு:

  • தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாகக் கவனிப்புக் குள்ளாகியிருப்பதால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் செவ்விதாக்கம் செய்யும் கலையை வளர்த்தெடுப்பது.
  • தமிழ் இலக்கியப் படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளைப் பேணிவளர்த்து மொழி பெயர்க்கப்படும் தமிழ்ப் படைப்புகளைச் சர்வதேச ரீதியாக அறிமுகப் படுத்தல்.
  • தமிழ் இலக்கியப்படைப்புகளை(நூல்கள், இதழ்கள்)ஆவணப்படுத்துவது தொடர்பாக இது குறித்த சிந்தனை கொண்டவர்களுடன் தொடர்ந்து இயங்குவது.
  • இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகிய வற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை(Trust fund) உருவாக்குவது.
  • தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றேடுகளுக்கு அரச மானியம் (Grant) பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.
  • தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளைப் பெறுதல்.
  • நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல்.
  • தமிழ் எழுத்தாளர்கள் , இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை , இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப் பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்கல்.
  • நாடகம், நடனம், நாட்டுக்கூத்து, இசை நாடகம் மற்றும் பாரம்பரியக் கிராமியக் கலைகளைப் பற்றிய கருத்தரங்குகள், பயிலரங்குகளை ஒழுங்குசெய்தல்.
  • இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறையில் ஈடுபடும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.
  • குறும்படம் தொடர்பான பிரக்ஙையைத் தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா இரசனையை வளர்த்தல்.
  • கணனித்துறை சார்ந்த முயற்சிகள், ஒளிப்படக்கலை, Graphics, முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கிப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும் விதமான காட்சிப் படுத்தும் (Demonstration) கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல்.

கருப்பொருட்கள்[தொகு]

ஏற்பாடுகள்[தொகு]

இடம், திகதி, அரங்குகள்[தொகு]

மாநாட்டில் பினவரும் ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

  • ஆரம்ப அரங்கு – தனிநாயகம் அடிகளார் அரங்கு
  • ஈழத்து இலக்கியம் – இலங்கையர்கோன் அரங்கு
  • நிகழ்த்துகலைகள், நுண்கலைகள் - பேரா. சு. வித்தியானந்தன் அரங்கு
  • உலகத்தமிழ் இலக்கியம் - சுவாமி விபுலானந்தர் அரங்கு.
  • சிறுவர் இலக்கியம் - சோமசுந்தரப்புலவர் அரங்கு
  • சிற்றிதழ்கள் அரங்கு - வரதர் அரங்கு
  • செவ்விதாக்கம் - ஆறுமுக நாவலர் அரங்கு
  • இணையமும் வலைப்பதிவுகளும் - எஸ் டி. சிவநாயகம். அரங்கு
  • மொழி பெயர்ப்பு - சித்தி லெப்பை அரங்கு
  • மகளிர் அரங்கு - மங்களநாயகி அம்மாள் அரங்கு
  • எழுத்தாளர் உறவுப்பரிவர்த்தனை அரங்கு - எழுத்தாளர் கே. டானியல் அரங்கு
  • 7ஆம் திகதி மாலை கலை நிகழ்ச்சிகள் - கோ. நடேசையர் அரங்கு
  • 8ஆம் திகதி மாலை கலை நிகழ்ச்சிகள் - அருள்வாக்கி அப்துல் காதர்.அரங்கு
  • 9 ஆம் திகதி மாலை நிறைவு நாள் நிகழ்ச்சிகள் - பேரா. கைலாசபதி அரங்கு

நிதி[தொகு]

முதனை ஏற்பாட்டாளர் லெ. முருகபூபதி, பூபாலசிங்கம் சிறீதரன், தி. ஞானசேரன் ஆகியோர் தொடக்ககட்ட நிதியை வழங்கி உள்ளனர். இலங்கை அரசு, அரசியல்வாதிகளோ தமக்கு எந்தவித நிதி ஆதரவும் செய்யவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் கூறி உள்ளார்கள்.

இலவசமாக வழங்கப்பட்ட பகல் உணவு, தேனீர், மாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு, பை ஆகியவற்றுக்கென பேராளர்களாகப் பதிவு செய்தவர்களிடம் ஆளுக்கு 1000 இலங்கை ரூபாய்கள் அறவிடப்பட்டது.

விமர்சனங்கள்[தொகு]

தணிக்கை[தொகு]

இந்த மாநாடு எந்தவித அடிப்படை கருத்து வெளிப்பாட்டுச் சுந்ததிரமும் இல்லாத இலங்கையில் நடைபெறுவதால், எந்தவிதமான அரசியல் அலலது சமூகப் பிரச்சினை விடயங்கள் இங்கு அனுமதிக்கப்படமாட்டது என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். "நிச்சியமாக தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது" என்று மாநாட்டின் முதன்மை ஏற்பாட்டளர்களின் ஒருவர் தி. ஞானசேரன் கூறினார்.[2] ஈழத்து இலக்கியத்தில் கடந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற "பரிணாம வளர்ச்சி" ஆராய இந்த மாநாடு நடைபெறுகிறது, ஆனால் ஈழத்தில் கடந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை, ஈழப் போராட்டம் பற்றிய இலக்கியங்கள் இந்த தணிக்கையால் தவிர்க்கப்படும்.

அரசியல் இல்லாமல் இலக்கியமும் இல்லை[தொகு]

பெறுமதிவாய்ந்த இலக்கியங்களில் பெரும்பாலனவை அரசியல் கருத்துக்கள் கொண்டவை. அப்படியிருக்க "அரசியல் விடயங்கள் வரக்கூடாது" என்று தடை போட்டிருப்பது எந்த வகையான இலக்கியங்களை பற்றி இந்த மாநாடு அமைய விருக்கிறது என்று கேள்வியை எழுப்புகிறது.

இலங்கை அரசுக்கு துணை போதல், பிரச்சார வாய்ப்பு[தொகு]

தணிக்கைக்கு உட்பட்டு, அரசின் நேரடி ஆதரவு அற்று நடந்தாலும் இந்த மாநாட்டை இலங்கை அரசு தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. சடங்குகளைக் கொண்ட கோயில் திருவிழாக்கள் போல் அல்லாமல் தமிழர்களின் கருத்து கருவூலாமகக் கருதப்படக் கூடிய எழுத்தாளிர்களின் பொறுப்புக் கூடியது.[3]

அரசியல் தீர்வு அல்ல பொருளாதார வளர்ச்சியே தீர்வு என்று கூறும் தற்போதை அரசுக்கு, அரசியல் பிரச்சினைகள் முக்கியம் அல்ல இலக்கியமே முக்கியம் என்ற இந்த மாநாட்டின் கொள்கையும் துணைபோகிறது.[4]

"மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?" என்று எஸ். பொ கேள்வி எழுப்பி உள்ளார்[5].

எழுத்தாளர்களின் எதிர்ப்பு[தொகு]

இலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு கடுமையான எதிர்ப்பைத் பதிவுசெய்து வருகிறன. தேடகம் (கனடா), புதிய திசைகள் (இங்கிலாந்து), மே 18 இயக்கம் (கனடா), இனியொரு (இங்கிலாந்து), அசை (பிரான்ஸ்) உட்பட்ட பல அமைப்புகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

மாநாட்டுக்குச் சார்பான கருத்துக்கள்[தொகு]

தணிக்கைகள் இல்லாமலிருந்தமை[தொகு]

அரசியல் உண்மைகளைப்பேசுவதற்கு எந்தவிதமான தணிக்கைகளும் இருக்காது என்று தனது நேர்காணலில் தி. ஞானசேகரன் உறுதி மொழி அளித்திருந்ததன்படி[6] மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளிலோ, உரையாடல் நேரத்தில் உரையாடப்பட்ட விடயங்களிலோ எந்தவிதமான மட்டுறுத்தலும் தணிக்கைகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஈழ ஆதரவு தொடக்கம் பல்வேறு அரசியற்பார்வைகள் சுதந்திரமாக வெளிப்படுத்தப்பட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அரசியல் உள்ளடக்கம்[தொகு]

மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் சிறப்பு உரைகளிலும் அரசியல் உள்ளடக்கம் தவிர்க்கப்படாமல் இலங்கை நடப்பு அரசியலின் போக்குக்கள் குறித்த விமர்சனங்களும் கருத்துக்களும் பரவலாக இடம்பெற்றிருந்தன.

எழுத்தாளர்களின் ஆதரவு[தொகு]

மாநாட்டில் ஆய்வரங்கொன்றினைத் தலைமையேற்று உரையாற்றும் எம். ஏ. நுஃமான்

புலம்பெயர், இலங்கை எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட ஆதரவு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம், கொழுந்து, மல்லிகை, நீங்களும் எழுதலாம் போன்ற சிற்றிதழ்கள் பலவும் தேசிய நாளிதழ்களான வீரகேசரி, தினக்குரல், சுடரொளி ஆகியனவும் இம்மாநாட்டில் பங்குபற்றியிருந்தன.

பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், டொமினிக் ஜீவா, நீ. மரிய சேவியர் அடிகள், பேராசிரியர் செ. யோகராசா பேராசிரியர் மௌனகுரு உட்பட இலங்கைத் தமிழ் சூழலின் மிக முக்கிய ஆளுமைகள் பலர் இம்மாநாட்டில் பங்கெடுத்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாநாட்டின் நோக்கங்கள்". Archived from the original on 2011-01-10. பார்க்கப்பட்ட நாள் 2010-12-05.
  2. நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்
  3. "ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?" - எஸ். பொ. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்
  4. இலங்கை அரசு. அரசியலற்ற தலித்தியம், அரசியலற்ற மனிதாபிமானம், அரசியலற்ற அபிவிருத்தி, அரசியலற்ற இலக்கியம் என்று தனது சமூகவிரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றாத ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை, இந்திய உலக அதிகாரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.இலங்கை அரசின் வலைப்பின்னலுள் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு
  5. கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும்
  6. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்

வெளி இணைப்புகள்[தொகு]