எழும்பூர் கண் மருத்துவமனை

ஆள்கூறுகள்: 13°04′13″N 80°15′39″E / 13.070313°N 80.260735°E / 13.070313; 80.260735
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழும்பூர் கண் மருத்துவமனை
முந்தைய பெயர்கள்
மதராசு கண் பள்ளியியல்
Active1819 (1819)–1850 (1850)
அமைவிடம்13°04′13″N 80°15′39″E / 13.070313°N 80.260735°E / 13.070313; 80.260735
இணையதளம்www.riogohchennai.ac.in

எழும்பூர் கண் மருத்துவமனை அல்லது பிராந்திய கண் சிகிச்சை மருத்துவமனைக் கல்லூரி, 1819-ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்திலுள்ள சென்னையில் தொடங்கப்பட்டது. இது சென்னை அரசுப் பொது மருத்துவமனையையும், மதராசு மருத்துவக் கல்லூரியையும் சார்ந்து இயங்கி வருகின்றது. இங்கிலாந்திலுள்ள மூர்பீல்டு கண் மருத்துவமனையை (1805) அடுத்து உலகிலேயே இரண்டாவதாக கண் மருத்துவத்திற்கென்று துவங்கப்பட்ட மருத்துவமனை ஆகும்.[1] மேலும் இது தெற்காசியாவின் முதல் கண் மருத்துவமனை, ஆசியாவிலேயே முதல் கண் வங்கி தொடங்கப்பட்ட மருத்துவமனை, ஆசியாவில் முதல் கண் மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்ற மருத்துவமனை எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டது. தற்போது எழும்பூர் கண் மருத்துவமனையானது தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரிமா சங்கங்களுடன் இணைந்து கண் தானம் குறித்த விழிப்புணர்வு முகாம்களும், பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.[2][3]

வரலாறு[தொகு]

லண்டனில் உள்ள மார்ஃபீல்டு மருத்துவமனையே உலகின் முதல் கண் மருத்துவமனை ஆகும். அதன்பிறகு சென்னையில் 1819ஆம் ஆண்டு சூலை மாதத்தில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் மெட்ராஸ் ஐ இன்ஃபர்மரி என்ற பெயரில் இந்த கண் மருத்துவமனை இராயப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டது. பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக 1844இல் எழும்பூரில் தற்போது உள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. 44 ஆண்டுகள் கழித்து இந்த மருத்துவமனையின் பெயரை அரசு கண் மருத்துவமனை என ஆங்கிலேய அரசு மாற்றியது. ஆனால், பேச்சு வழக்கில் ‘எழும்பூர் கண் மருத்துவமனை’ என்றே அழைக்கப்படுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 1942ஆம் ஆண்டிலிருந்து மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

வசதிகள்[தொகு]

இந்த மருத்துவமனையில் 478 படுக்கைகள் உள்ளன. தினமும் சராசரியாக 1,000 வெளி நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு 47 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் தினசரி 50 கண்புரை நீக்கும் அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. இந்தக் கண் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவும் உள்ளது. இரவில் ஒரு மருத்துவருடன் செயல்படும் பிரிவில் எல்லா நேரமும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு மூத்த கண் மருத்துவர், ஒரு மயக்கவியல் நிபுணர், 20 முதுகலை மாணவர்கள் இங்கே செயல்படுகிறார்கள்.[4]

மேலும் காண்க[தொகு]

சான்றுகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Regional Institute of Ophthalmology". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2018.
  2. "`I care' — their message". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2018.
  3. "Chennai Today". பார்க்கப்பட்ட நாள் 22 மே 2018.
  4. டி.கார்த்திக் (21 சூலை 2018). "இரட்டை சதம் அடித்த ஒளிவிளக்கு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2018.