சோழபாண்டியபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழபாண்டியபுரம் அல்லது சோழவண்டிபுரம் அல்லது சோழவாண்டிபுரம் இந்தியாவில்  தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுக்காவில் அமைந்துள்ளது, இங்கு  வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதர தொழில் விவசாயம் ஆகும்.2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராம மக்கள் தொகை 1000 ஆகும்.

அமைவிடம்[தொகு]

சோழபாண்டியபுரமானது திருக்கோவிலூருக்கு தென்மேற்காக 12 கிலோ மீட்டர் அதாவது 7.5 மைல் தொலைவில் அமைந்துள்ளது,உளுந்தூர்பேட்டைக்கு வடமேற்கில் 16 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது 9.9 மைல் தொலைவில் அமந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்கள்) எண்:5,20 ரிஷிவந்தியத்திற்கு சோழபாண்டியபுரம் வழியாக செல்கிறது இதில் செல்லலாம்,இல்லையெனின் ஜீ.அரியூர் கூட்டுச் சாலையிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்தில் சோழவண்டிபுரம் செல்லலாம் தற்பொழுது (ஷேர் ஆட்டோக்கள்) பகிர்ந்து செல்லும் தானியங்கிகள் இயங்குகின்றன, அதில் செல்ல இயலும்.

சோழவண்டிபுர கிராமம்[தொகு]

இக்கிராமமானது 1000 ஆண்டுகள் பாரம்பரிய பெருமை கொண்டது,இது கி.பி 10 ம் நூற்றண்டிலிருந்து சமண மத மையமாக விளங்கி வருகிறது.

ஆண்டிமலை[தொகு]

சோழவாண்டிபுரம் சமண சிற்பங்கள்[தொகு]

இவ்வூரின் வடக்கேயுள்ள மலை ஆண்டிமலை எனப்படுகிறது. இம்மலையின் கிழக்கில் செங்குத்தான இடத்தில் சிறிய படிக்கட்டுக்களும் வெட்டப்பட்டுள்ளன. இம்மலையில் இரண்டு பாறைகள் பெரிய இடைவெளியுடன் மேற்பகுதியில் ஒட்டியவாறு அமைந்து ஒரு பெரிய குகை போன்று உள்ளது. இதன் உட்பகுதியில் வடக்குப் பாறையில் கோமடீஸ்வரர்சிற்பமும், தெற்குப் பாறையில் பார்சுவநாதர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டிருக்கின்றன. தருமதேவி சிற்பம் காணப்படுகிறது. இவற்றையடுத்துள்ள மலையின் தென் கிழக்காகவுள்ள குண்டுபாறையில் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

கோமதீஸ்வரர் புடைப்பு சிற்பம்
புடைப்பு சிற்பங்கள்[தொகு]

இக்குகையில் கோமடீஸ்வர் என்னும் பாகுபலியின் புடைப்புச் சிற்பம் சுமார் 8 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் வடிக்கப்பட்ட இச்சிற்ப உருவத்திற்கு கீழ்ப்புறம் அவரின் வலது, இடது ஆகிய இரு பக்கங்களிலும் முறையே இரண்ட பாம்புகளும் காணப்படுகின்றன. அமைதியான முகத்தோற்றத்துடன் சற்று புன்முறுவல் பூத்தவண்ணம், அவரது காலிலிருந்து கைவரை கொடிகள் பின்னியிருக்க தடித்த உடலமைப்பினைப் பெற்று அணியா அழகராய் கோமடீஸ்வர் காட்சியளிக்கிறார். கோமடீஸ்வரர் சிற்பத்திற்கு எதிர்திசையில் பார்சுவநாதனர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. மேற்புறம் ஐந்துதலை பாம்பு தலை விரித்து ஆடுவது போன்று உள்ளது. இச்சிற்பத்தின் கீழ் இக்குகைக்கோயிலை அமைத்தவரின் கல்வெட்டு காணப்படுகிறது.[1] இக்குகையில உள்ள தருமதேவி இயக்கியின் சிற்பம் அழகும் கலைநயமும் வாய்ந்தது. இயற்கை எழில் வடிவாய் நிறகும் இத்தேவியின் வலதுகரம் அருகில் நிற்கும் பணிப்பெண்ணின் தலையைத் தொட்டவாறும், இடது கரம் தோளுக்கு அருகில் ஒரு கிளியும் உள்ளது. இயக்கியின் வலது பக்கத்தில் கழுகு மரத்தின் வடிவமும் இவளது காலுக்கு அடியில் நிமிர்ந்து நிற்கும் சிங்கத்தின் உருவமும் சிறப்புற படைக்கப்பட்டுள்ளன. இவ்வூர் மக்கள் இவ்வியக்கியினைக் காளியம்மன் என்று அழைத்து வழிபடுகின்றனர். தற்பொழுது இவ்வூரில் சமணர்கள் ஒருவர் கூட இல்லை என்பது வியப்பிற்குரியது. இம்மலையின் மேற்கு மூலையில் உள்ள மற்றொரு குகையில் [மகாவீரர்]] சிற்பம் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் பத்மாசனத்தில் இரண்டு கைகளையும் ஒன்றின் மீது ஒன்று வைத்து மேல் நோக்கியுள்ளது. இவரது வலது மற்றும் இடதுபுறம் இரு சாமரம் வீசுவோர் காட்டப்பட்டுள்ளனர். தலையின் பின்புறம் அரைவட்ட பிரபையும், அதன் மேல் முக்குடையும் காட்டப்பட்டுள்ளன. மேற்கண்ட சிற்பங்கள் யாவும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவையாகும்.­

தருமதேவி சிற்பம்

சோழவாண்டிபுரம் சமண படுக்கைகள்[தொகு]

ஆண்டிமலை பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கப்படுகிறது, இம்மலையில்தான் சமண சிற்பங்களும் சமணப் படுக்கைகளும் காணப்படுகின்றன. இயற்கையாக அமைந்த குகையின் உட்புறமாக 6 இடங்களில் மொத்தம் 25 படுக்கைகள் உள்ளன. இவற்றில் சில முற்றுப்பெற்றும் சில முற்றுப் பெறாமலும் உள்ளன. இக்குகையின் வடக்கில் அமைந்த கற்படுக்கைகளின் மேல் விதானத்தில் சுதை பூசி அதன் மீது ஓவியங்கள் பல தீட்டப்டிபற்றிருக்கின்றன. இவ்வோவியங்கள் பெரும்பாலும் அழிந்து தற்போது அதன் எச்சங்களை மட்டுமே காண முடிகின்றது. ஒரு பெரிய இருக்கை ஒன்றும் உள்ளது. இப்படுக்கைகள் அமைந்த குன்றைச் சுற்றிலும் செங்கற் சுவர்கள் இருந்து அழிந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன.[2]

படங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்s[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நடுநாட்டில் சமணம் முனைவர் த. ரமேஷ் -நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் பக்கம் எண்:37,38
  2. நடுநாட்டில் சமணம் முனைவர் த. ரமேஷ் -நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் பக்கம் எண்:91
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழபாண்டியபுரம்&oldid=3867451" இலிருந்து மீள்விக்கப்பட்டது