நியூசிலாந்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலினீசியர்கள் விரிவாக்கம் (சீனாவிலிருந்து பொலீனீசிய முக்கோணத்திற்கு.)

நியூசிலாந்தின் வரலாறு குறைந்தது 700 ஆண்டுகளுக்கு முந்தையது. கி.பி 1200-1300 காலகட்டத்தில் பொலினீசியர்கள் இங்கு குடியேறி தனித்துவமான மவுரி பண்பாட்டை நிலைநாட்டினர். நியூசிலாந்தைக் கண்டறிந்த முதல் ஐரோப்பிய தேடலாளர் டச்சு மாலுமி ஏபெல் டாஸ்மான் ஆவார்; இவர் திசம்பர் 13, 1642இல் இத்தீவைக் கண்டார்.[1]உள்ளூர்வாசியல்லாதோரில் டச்சுக்காரர்களே இத்தீவின் கடலோரத்தை முதலில் ஆராய்ந்தவர்களாவர். தனது மூன்று கடற்பயணங்களில் முதற்பயணத்தின்போது அக்டோபர் 1769இல் நியூசிலாந்து வந்தடைந்த கப்பல்தலைவர் ஜேம்ஸ் குக்,[2] முழுவதுமாக நியூசிலாந்தைச் சுற்றிக் கப்பலோட்டி அதன் நிலப்படத்தை உருவாக்கிய முதல் ஐரோப்பிய கடலோடி ஆவார். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அடிக்கடி பல தேடலாளர்களும் கடலோடிகளும் வணிகர்களும் சமயவியலாளர்களும் இந்நாட்டிற்கு வந்தவண்ணம் இருந்தனர். 1840இல் இங்கிருந்த மவுரித் தலைவர்களுடன் பிரித்தானிய அரசர் வைத்தாங்கி ஒப்பந்தம் கையெழுத்திட்டு நியூசிலாந்தை பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்; மவுரிகளுக்கு பிரித்தானியக் குடிகளுக்கு இணையான உரிமைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அந்த நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் மிக விரைவான பிரித்தானியக் குடியேற்றம் நிகழ்ந்தது. தொடர்ந்த போர்களும் ஐரோப்பிய பொருளியல், சட்ட அமைப்புகளும் பெரும்பாலான மவுரிகளிடமிருந்த நிலங்கள் பிரித்தானியர் பறிக்க (பகேகா நிலவுரிமை) துணை நின்றன. மவரிக்கள் மிகவும் ஏழ்மைநிலைக்குத் தள்ளப்பட்டனர். [3]

1890களிலிருந்து நியூசிலாந்து நாடாளுமன்றம் பல முன்னேற்ற முனைப்புக்களை முன்னெடுத்துள்ளது; பெண்களுக்கான வாக்குரிமை, முதியவர் ஓய்வூதியம் போன்றவை. பிரித்தானியப் பேரரசின் ஊக்கமிக்க அங்கமாக முதலாம் உலகப் போருக்கு 110,000 பேரை அனுப்பியது. போருக்குப் பின்னர் கைச்சாத்திட்ட வெர்சாய் உடன்பாட்டின்படி (1919), உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது. தனக்கான தனியான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றலாயிற்று. இருப்பினும் நியூசிலாந்தின் பாதுகாப்பு பிரித்தானியர் கட்டுப்பாட்டில் இருந்தது.

1939இல் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது பிரித்தானியப் பேரரசிற்காக நியூசிலாந்து வீரர்கள் போரிட்டனர்; கிட்டத்தட்ட 120,000 துருப்புகள் சென்றனர். 1930களிலிருந்து பொருளாதாரம் வெகுவாக கட்டுபடுத்தப்பட்டது; நியூசிலாந்து மக்கள்நல அரசாக மேம்பட்டது. மவுரி பண்பாடும் இக்காலகட்டத்தில் மறுமலர்ச்சி பெற்றது. 1950களிலிருந்து பெரிய நகரங்களுக்கு இவர்கள் பெருஎண்ணிக்கையில் குடிபெயர்ந்தனர். தொடர்ந்து மவுரி போராட்ட இயக்கங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களினால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வைத்தாங்கி ஒப்பந்தம் ஏற்கப்பட்டு மவுரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1973 உலகளாவிய ஆற்றல் நெருக்கடியை அடுத்து நாட்டின் பொருளியல்நிலை பாதிக்கப்பட்டது. பிரித்தானியா ஐரோப்பிய பொருளியல் சமூகத்தில் இணைந்தபிறகு நியூசிலாந்தின் ஏற்றுமதிகள் இறங்குமுகமாயின. இவற்றைத் தொடர்ந்து பணவீக்கம் ஏற்பட்டது. 1984இல் நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சி பழைய தேசிய கட்சி ஆட்சியின் குறுக்கிடும் கொள்கைகளை மாற்றியமைத்து கட்டற்ற சந்தைமுறைக்கு மாறியது. இது இக்கொள்கையை அறிமுகப்படுத்திய நிதி அமைச்சர் ரோஜர் டக்ளசு பெயைக் கொண்டு ரோஜரொனொமிக்சு (அமெரிக்காவின் ரீகனோமிக்சு போல) என குறிப்பிடப்படுகின்றது. 1980களுக்குப் பிறகு நியூசிலாந்தின் வெளியுறவுக் கொள்கைகள் மேலும் தனித்து எடுக்கபடலாயிற்று. காட்டாக அணுக்கரு இல்லா வலயத்தை ஊக்குவிக்கும் கொள்கை.

மவுரிகளின் வருகையும் குடியேற்றமும்[தொகு]

நியூசிலாந்தில் முதலில் குடியேறியவர்கள் கிழக்குப் பொலினீசியாவிலிருந்து வந்த பொலினீசியர்களாவர். மரபணுவழி மற்றும் தொல்லியல் சான்றுகள் இவர்கள் தாய்வானிலிருந்து மெலனீசியா குடிபெயர்ந்து அங்கிருந்து கிழக்கில் பயணித்து சொசைட்டி தீவின் வழியே இங்கு வந்தடைந்தனர். இந்த செயற்பாடு 70 முதல் 265 ஆண்டுகள் எடுத்திருக்கலாம்.[4] இது கி.பி 1280இல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [4]

இவர்களின் வழித்தோன்றல்கள் மாவோரிகள் எனப்பட்டனர். இவர்கள் தங்களுக்கெனத் தனித்த பண்பாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தனர். நியூசிலாந்தின் கிழக்கே உள்ள மிகச்சிறிய தீவான சதாம் தீவுகளில் குடியேறியவர் மொரியோரி மக்கள் எனப்படுகின்றனர்; மொழிச்சான்றுகளின்படி இவர்கள் கிழக்கில் பயணித்த மாவோரிகளின் இனத்தைச் சேர்ந்தவர்களே எனக் கருதப்படுகின்றது.[5]

இங்கு குடியேறியவர்கள் இங்கிருந்த 1500களில் அற்றுவிட்ட பறக்காத மோவாவை வேட்டையாடி வாழ்ந்துவந்தனர். பயிரிடப்படக் கூடிய பகுதிகளில் குடியேறியவர்கள் சேம்பு, வற்றாளைக் கிழங்குகளை வேளாண்மை செய்யத்தொடங்கினர். வேளாண்மைக்கு வாயப்பற்ற தெற்குத் தீவின் தென்பகுதியில் பெர்ன்ரூட் போன்ற வனத்தாவரங்கள் வளர்க்கப்பட்டன. போர்முறைகளும் முதன்மைப் பெறத் தொடங்கியது. இது இவர்களிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்ததைக் குறிக்கிறது. அமைதிப் பெருங்கடலின் பிற பகுதிகளைப் போன்றே இங்கும் போர்முறையின் அங்கமாக தன்னின உயிருண்ணி இருந்தது.[6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Wilson, John. "European discovery of New Zealand – Abel Tasman". Te Ara – the Encyclopedia of New Zealand. New Zealand: Ministry for Culture and Heritage / Te Manatū Taonga. பார்க்கப்பட்ட நாள் 16 January 2010. 'On 13 December 1642 the Dutch sighted "a large land, uplifted high" – probably the Southern Alps ...'
  2. Cook's Journal, 7 October 1769, ஆஸ்திரேலிய தேசிய நூலகம், http://southseas.nla.gov.au/journals/cook/17691007.html, visited 20120409
  3. Coleman, Andrew; Dixon, Sylvia; Maré, David C (September 2005). "Māori economic development – Glimpses from statistical sources" (PDF). Motu. pp. 8–14. பார்க்கப்பட்ட நாள் 4 May 2014.
  4. 4.0 4.1 Wilmshurst, J. M.; Hunt, T. L.; Lipo, C. P.; Anderson, A. J. (2010). "High-precision radiocarbon dating shows recent and rapid initial human colonization of East Polynesia". Proceedings of the National Academy of Sciences 108 (5): 1815. doi:10.1073/pnas.1015876108. Bibcode: 2011PNAS..108.1815W. 
  5. Clark, Ross (1994). Moriori and Māori: The Linguistic Evidence. Auckland, NZ: Auckland University Press. பக். 123–135. 
  6. James Belich (historian) (1996). Making Peoples: A History of the New Zealanders from the Polynesian Settlement to the End of the Nineteenth Century. பக். 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-100639-0. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூசிலாந்தின்_வரலாறு&oldid=2533524" இலிருந்து மீள்விக்கப்பட்டது