சோள அவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோள அவல்
Corn flakes
கார்ன் பிளேக்ஸ்
தொடங்கிய இடம்அமெரிக்கா
பகுதிமிச்சிகன் மாநிலத்தின், பேட்ரீக் க்ரீக் சானிட்டரி
ஆக்கியோன்ஜான் கெல்லாக் (1894)
வில் கெய்த் கெல்லாக்
முக்கிய சேர்பொருட்கள்அரைக்கப்பட்ட மக்காச்சோளம், சீனி, மால்ட் சுவையூட்டி
வேறுபாடுகள்பல

சோள அவல் (Corn flakes, or cornflakes), என்பது தானியங்களால் தயாரிக்கப்படும் காலை உணவு, பொதுவாக இது மக்காச்சோளத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவானது 1894 இல் மருத்துவரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஜான் கெல்லாக்கால் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த உணவைத் தயாரித்து மக்களிடம் விற்க கெல்லாக் (கெலாக்ஸ்) நிறுவனமும் உருவானது. 1896 இல் இந்த செயல்முறைக்கானக் காப்புரிமை வழங்கப்பட்டது.

மக்காச்சோளத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவு சமூகத்தில் பரந்த அளவில் பிரபலமடையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கெல்லாக் தொடர்ச்சியான பல பரிசோதனைகளைத் தொடர்ந்து, பல்வேறு பொருட்களை சேர்த்து, வெவ்வேறு தானியங்களைப் பயன்படுத்தினார். 1928 இல், அவர் வேறொரு வெற்றிகரமான காலை உணவாக, அரிசியால் செய்யப்பட்ட ரைஸ் கிரிஸ்பிசின் உற்பத்தியைத் தொடங்கினார்.

இவை தயாரிப்பாளர்களால் பல்வேறுபட்ட வகைத் தானியங்களை நசுக்கி உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் பலவற்றுக்கு சோளக்கதிர்கள் பொதுவான மூலப்பொருளாக உள்ளன. இவை காலை உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன், இந்த நசுக்கப்பட்ட தானியங்களானது ரொட்டித் துண்டுகளுக்கு மாற்றான உணவாகவும் உள்ளது.

விளக்கம்[தொகு]

சோள மணிகளை நசுக்கி சருகுபோலாக்கி பின் சிறு துண்டுகளாகக் கொண்ட வெளிறிய அவல்போல தயாரிக்கப்பட்ட பின் அடைக்கப்பட்ட ஒரு உணவுத் தயாரிப்பு ஆகும். இதை பொதுவாக குளிர்ந்த பாலில் இட்டும், சிலசமையம் சர்க்கரையைச் சேர்த்தும் உண்ணப்படும். [1]

வரலாறு[தொகு]

1910 சூலை 21 நாளில் வெளியான லைஃப் பத்திரிகையில் வெளியான கெல்லாக் இன் டஸ்ட்ஸ்ட் சோள அவலுக்கான விளம்பரம்.

இதன் கதையானது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது. ஏழாம் நாள் வருகை சபையானது சைவ உணவு முறையிலான புதிய உணவை உருவாக்கி பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. குழு உறுப்பினர்கள் கோதுமை, ஓட்ஸ், அரிசி, பார்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு தானியங்களைக் கொண்டு பரிசோதித்தனர். ஜான் கெல்லாக்கும் இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரும் இவருடைய தம்பி வில் கெய்த் கெல்லாக்கும் இணைந்து உணவுப் பொருள் கடையை நடத்தி வந்தனர். ஒருநாள் ரொட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட கோதுமை மாவு, காய்ந்து பாத்திரத்தில் ஒட்டியிருந்தது. வில் கெல்லாக் அந்தப் பாத்திரத்தைச் சுத்தம் செய்யும்போது சருகுகள்போல் உதிர்ந்தன. அவற்றை அருகில் இருந்த சூடான பாத்திரத்தில் போட்டபோது அவை பொரிந்தன. அதை சுவைத்துப் பார்த்தபோது, ஓரளவு சாப்பிடக்கூடியதாகத்தகத் தெரிந்தது. பின்னர் கோதுமை மாவை எடுத்து, இதேபோல் மீண்டும் செய்து, ஜான் கெல்லாக்கிடம் காட்டினார். அவருக்கும் பிடித்துவிட, பல முயற்சிகள், பரிசோதனைகளுக்குப் பிறகு, 1906 ஆம் ஆண்டு கோதுமைக்குப் பதில் மக்காச்சோளத்தில் உருவான ‘சோள அவல்’ விற்பனைக்கு வந்தது. கெல்லாக் நிறுவனமும் உருவானது. அதன்பிறகு கெல்லாக் சகோதரர்கள் தங்கள் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த 122 ஆண்டுகளில் பல உணவுப் பொருட்களைப் புதிதாக உருவாக்கி, இன்றும் கெல்லாக் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kellogg's Fast Facts". Kellogg's இம் மூலத்தில் இருந்து 4 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101204044445/http://www.kelloggs.ie/whatson/pressoffice/Company/fast-facts.aspx. பார்த்த நாள்: 3 October 2011. 
  2. எஸ். சுஜாதா (2 மே 2018). "கண்டுபிடிப்புகளின் கதை: கார்ன் ஃப்ளேக்ஸ்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோள_அவல்&oldid=3577342" இலிருந்து மீள்விக்கப்பட்டது