ரிச்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சி
இயக்கம்கௌதம் ராமச்சந்திரன்
தயாரிப்பு
  • ஆனந்த் குமார்
  • வினோத் ஷொனூர்
கதைரக்சித் செட்டி
மூலக்கதைரக்சிதா செட்டியின்
உளிதவரு கண்டந்தை
திரைக்கதை
  • ரக்சித் செட்டி
  • கௌதம் ராமச்சந்திரன்
இசைபி. அஜனீஷ் லோக்நாத்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ்.பாண்டி குமார்[சான்று தேவை]
படத்தொகுப்புஅதுல் விஜய்
கலையகம்
  • Yes Cinema
  • Cast n' Crew
விநியோகம்ட்ரையண்ட் ஆர்ட்ஸ்
வெளியீடு8 திசம்பர் 2017 (2017-12-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்/மலையாளம்

ரிச்சி (Richie) (முதலில் சாண்டா மரியா மற்றும் அவர்கள் என்ற பெயர்கள் இடப்பட்டன) என்பது 2017 ஆண்டைய இந்திய தமிழ்/மலையாள குற்றவியல் திரைப்படமாகும். இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்க ரக்சித் செட்டி எழுதியுள்ளார். இந்தப் படமானது 2014 ஆண்டைய கன்னட திரைப்படமான உளிதவரு கண்டந்தை படத்தின் மறு ஆக்கமாகும். படத்தில் நிவின் பாலி முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க, உடன் நடராஜன் சுப்பிரமணியம், சிரத்தா சிறீநாத், லட்சுமி பிரியா சந்திரமெளலி ஆகியோர் பிற பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பப் பணிகள் 2016 சூனில் தொடங்கியது.[1] ரிச்சி இந்தியாவில் 2017 திசம்பர் 8 அன்று வெளியானது.

கதை[தொகு]

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் கிராமத்தில் நிகழுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் ரிச்சி (நிவின் பாலி) இவர் தேவலயத் திருத்தந்தையான ஏ.கே.சகாயத்தின் (பிரகாஷ் ராஜ்) மகன். ரிச்சியின் ஒரு நண்பன் ரகு (ராஜ் பரத்) இவருடைய அம்மா ஒரு மீன் வியாபாரி. ரிச்சியும் ரகுவும் பள்ளிக்கூடத்தில் இருந்து நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் பள்ளி நண்பர்களுக்குள் வந்த சிறு சண்டையில் எதிர்பாராத விதமாக ஒருவன் கொலை செய்யப்படுகிறான். இந்த நிகழ்வால் ரகு ஊரைவிட்டு ஓடிப்போய் கொல்கத்தாவில் ஒரு கடத்தல் கும்பலில் இணைகிறான். கொலப்பழி சுமத்தப்பட்ட ரிச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். வளர்ந்த பிறகு ரிச்சி ஐசக் அண்ணாச்சி என்னும் நிழலுலக தாதாவிடம் வேலை செய்கிறார். ஊரில் அடாவடி செய்து சண்டியராக உலவுகிறார். இவருக்கு உதவியாக முருகேஸ் (ஆடுகளம் முருகதாஸ்) உள்ளார்.

இதற்கிடையில் நண்பனின் மரணத்துக்குக் காரணமானதால் குற்ற உணர்வில் செல்வம் (நட்டி நட்ராஜ்) தனது ஊரான மதுரையைவிட்டு மணப்பாடு கிராமத்தில் படகு பழுதுபார்பவராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஒரு நண்பர். அவரின் தங்கையின் மேல் செல்வத்துக்கு காதல் வருகிறது. செல்வத்தின் நண்பன் காணாமல் போகிறான் அவனைத் தேடி அவனின் தங்கையும், செல்வமும் அலைகிறார்கள்

இதற்கிடையில் மேகா (சிரத்தா ஸ்ரீநாத்) என்னும் ஒரு பத்திரிக்கை துறை பெண் ஒரு கொலைச் சம்பவத்தின் ஊற்றுக்கண்ணைத் தேடி பெரும் ஆராய்ச்சியில் இறங்குகிறார். அவரது ஆராய்ச்சியில் படம் மேற்கண்ட பல கிளைக் கதைகளாக விரிகிறது. இத்தனைக் கதைகளும் ரிச்சியை தொடர்புடையதாக அவனைச் சுற்றி வருகிறது. அந்நேரத்தில் ரிச்சியின் உயிருக்கு ஒரு எதிர்பாராத ஆபத்து ஏற்படுகிறது. அதே நேரம் ரிச்சியின் நீண்ட நாள் நண்பன் ரகு சுட்டுக்கொல்லப்படுகிறான். கடைசியில் ரிச்சி என்ன ஆனான், மேகா கண்டுபிடிப்பது என்ன என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

  • நிவின் பாலி - ரிச்சர்ட் கே. சகாயம் (ரிச்சி), மணப்பாடைச் சேர்ந்த அண்ணாச்சியின்கீழ் செயல்படும் உள்ளூர் சண்டியர்
  • நடராஜன் சுப்பிரமணியம் - செல்வம் (செல்வா), மதுரையைச் சேர்ந்த ஒரு படகு பழுதுநீக்குநர்
  • சிரத்தா சிறீநாத் - மேகா, ரிச்சியின் கொலை வழக்கில் உள்ள மர்மத்தை எழுதும் ஒரு செய்தித்தாள் எழுத்தாளர்
  • லட்சுமி பிரியா சந்திரமெளலி - பிலோமினா, பீட்டரின் சகோதரி மற்றும் செல்வாவாவால் காதலிக்கப்படுபவர்
  • பிரகாஷ் ராஜ் - ஏ.கே.சகாயம், ரிச்சியின் தந்தை மற்றும் தேவாலய திருத்தந்தை
  • ராஜ் பரத் - ரகு, கொல்கத்தாவுக்கு ஓடிப்போன ரிச்சியின் பால்யகால நண்பன்
  • துளசி - ராதா, ரகுவின் தாயார்
  • ஆடுகளம் முருகதாஸ் - முருகேஷ், ரிச்சியன் குடும்ப நண்பர்
  • இளங்கோ குமரவேல் - 'காகா' பீட்டர், கடலில் கிடைத்த சிலையை கொண்டுவந்த மீனவர்
  • ஜி. கே. ரெட்டி - ஐசக் அண்ணாச்சி, மணப்பாடைச் சேர்ந்த நிழலுலக தாதா
  • பார்கவ் ராமகிருஷ்ணன் - தாஸ்

தயாரிப்பு[தொகு]

வளர்ச்சி[தொகு]

2012 இல், கௌதம் ராமச்சந்திரன் நிவின் பாலியைச் சந்தித்து, இருமொழித் திரைப்படத்தை உருவாக்கும் யோசனை குறித்து கலந்துரையாடினர். அவர்கள் பல கதைகள் குறித்து உரையாடி, இறுதியில், ரக்ஷித் ஷெட்டியின் கன்னடப் படமான உளிதவரு கண்டந்தை (2014) படத்தின் திரைக்கதையால் கவரப்பட்டு அதன் மறு ஆக்க உரிமையை வாங்க முடிவெடுத்தனர்.[2] 2015 சூனில் கௌதம் தமிழ் சூழலுக்கு பொருந்தக்கூடியவாறு அசல் திரைக்கதையை மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 40 வரைவுகளை தயாரித்தார். தமிழ் மொழிக்கேற்ற திரைக்கதையை உருவாக்கும் பணியில் கௌதத்துடன் ஈடுபாட்டுடன் பணிபுரிந்த நிவின் பாலி, மலையாளத்துடன் சேர்த்து இருமொழி படமாக்குவதாக கொண்டிருந்த திட்டத்தைக் கைவிட்டார். 2015 ஏப்ரலில் படத்தில் முன்னணி பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பதாக வெளியான செய்தியை கௌதம் மறுத்தார்.[3][4] சென்னையில் அமைக்கப்பட்ட சில செட்டிங்குகளைக் கொண்டு படத்தின் மலையாளப் பதிப்பு முடித்து வெளியிடப்பட்டது. இறுதியில் சில தமிழ் உரையாடல்கள் இடம்பெற்றன.

படப்பிடிப்பு[தொகு]

2016 சூன் துவக்கத்தில், தூத்துக்குடியில் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.[5] முதலில் இந்த திரைப்படத்தின் பெயர் சாண்டா மரியா என இடப்பட்டது, பின்னர் பெயரானது அவர்கள் என மாற்றப்பட்டு, இறுதியில் ரிச்சி என பெயரிடப்பட்டது.[6][7]

2016 செப்டம்பரில் இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அசோக் செல்வன் இடம்பெறுவதாக காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. ஆனால் இந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nivin's Tamil film named Santa Maria?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Nivins-Tamil-film-named-Santa-Maria/articleshow/52729573.cms. பார்த்த நாள்: 25 June 2016. 
  2. "Gautham Ramchandran Interview: Remaking Nivin Pauly". பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  3. "It took 40 drafts to finalise Nivin Pauly's next Tamil film". 19 April 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  4. "Director Gautham Ramachandran on his film with Nivin Pauly". பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  5. "Nivin Pauly shoots in Tuticorin". பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  6. "Nivin Pauly's Tamil Movie titled as Avargal". 25 November 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
  7. http://www.moviecrow.com/News/14935/nivin-pauly---shraddha-srinaths-film-titled-richie
  8. https://silverscreen.in/tamil/news/director-gautham-ramachandran-ashok-selvans-cameo-ulidavaru-kandanthe-remake/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சி_(திரைப்படம்)&oldid=3709404" இலிருந்து மீள்விக்கப்பட்டது