இளம்பூரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளம்பூரணர் (Ilampooranar) இடைக்காலத் தமிழ் மொழி உரையாசிரியராவார். இவர் இன்றுவரை தொல்காப்பியத்துக்குக் கிடைத்த உரைகளில் மிகப்பழைய உரையை எழுதியவர் ஆவார். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதினார்.

தொல்காப்பிய உரையாசிரியர்களில் இவர் காலத்தால் முந்தியவர். இவரது காலம் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டு.[1][2] ‘உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்’ என அடியார்க்கு நல்லார் இவரைக் குறிப்பிடுவதால் இவரது பெயரை இளமையில் அறிவு நிறையப்பெற்ற துறவி என உணர்ந்துகொள்ள வேண்டும். ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர்’, ‘ஏதமில் மாதவர்’ என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார்.[3]

இளம்பூரணருக்கு முன்பும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதப்பட்டிருந்தது என்பதனை "இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது" என அவர் குறிப்பிடுவதால் உணரலாம்.[6] அதிகார விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள், தெளிவுரை, சொல்தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. 13 ஆம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் இவரது உரையைத் தழுவி நன்னூல் என்னும் இலக்கண நூலைச் செய்திருப்பதாலும், அதே 13 ஆம் நூற்றாண்டு சேனாவரையர் தம் உரையில் இவரது உரையை மேற்கோள் காட்டுவதாலும், 12 ஆம் நூற்றாண்டு அடியார்க்கு நல்லார் இவரது பெயரைச் சொல்லிப் பாராட்டுவதாலும், இவர்களின் காலத்துக்கு முற்பட்டவர்.
  2. 9 ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்களாகிய புறப்பொருள் வெண்பாமாலை, தமிழ்நெறி விளக்கம் நூல்களிலிருந்து இவர் மேற்கோள் பாடல்களைத் தருவதால் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்.
  3. நன்னூல் மயிலைநாதர் உரை
  4. ‘ஊர் எனப்படுவது உறையூர்’, ‘நாடு எனப்படுவது சோழநாடு’ என்பன இவரது உரையில் வரும் தொடர்கள்.
  5. எருது வந்த்து அதற்குப் புல்லிடுக, கன்றுக்கு நீரூட்டுக, பசித்தேன் பழஞ்சோறு தா, கூழுண்ணாநின்றான், எட்குப்பை, நெற்குப்பை, கரும்புக்கு வேலி, ஏர் பின் சென்றான் – என்பன போன்ற எடுத்துக்காட்டுகளை இவர் தருகிறார்.
  6. இளம்பூரணர் (11 ஆம் நூற்றாண்டு). தொல்காப்பியம், (எழுத்து, சொல், பொருள்) மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம், சென்னை 14 பதிப்பு 2010 1939,. பக். 238, 2-57 உரை. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்பூரணர்&oldid=3787525" இலிருந்து மீள்விக்கப்பட்டது