கு. கோதண்டபாணி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
K Kothandapani Pillai
Rao Sahib K Kothandapani Pillai

இராவ் சாகேப் கு. கோதண்டபாணி (29 அக்டோபர் 1896 - 9 சனவரி 1979) என்பவர் ஒரு தமிழறிஞர், தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் அரசுப் பணியில் இருந்து கொண்டே தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.

பிறப்பும் வாழ்வும்[தொகு]

இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள செம்மங்குடியில் 29, அக்டோபர், 1896 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் குப்புசாமி, வள்ளியம்மை இணைர் ஆவர். குடவாசல் வட்டம் விடையல் கருப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்த இவர். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரி யில் இளங்கலை பட்டம் பெற்றார். தமிழார்வம் மிகுந்த இவர், பின்னத்தூர் நாராயணசாமி, பண்டித சௌரிராஜன் ஆகியோரிடம் தமிழ் கற்றார்.

தொழில்[தொகு]

கோதண்டபாணி பிள்ளை 1934 முதல் 1940 வரை மெட்ராஸ் மாகாணத்தின் Deputy Collector (Civil Service) ஆக பணிபுரிந்தார். 1940 முதல் 1944 வரை இரண்டாம் உலகப்போரில் குடியேறியவர்கள் பாதுகாவலராக (Protector of Emigrants for South African repatriates) பணிபுரிந்தார். இவரது பணிகளைப் பாராட்டி பிரித்தானிய அரசு இவருக்கு 1943 ஆம் ஆண்டு இராவ் சாகேப் பட்டம் அளித்தது. 1947 முதல் 1951 வரை மெட்ராஸ் மாகாணத்தின் அயல்நாட்டுச் செல்கைக் கட்டுப்பாட்டாளராகவும் (Controller of Emigration) பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின்னர் இரயில்வே பணிக்குழு (Railway Service Commission) உறுப்பினராகவும் பணியாற்றினார். 1956-1957 சென்னை ஆட்சி சொல்லாக்கக் கழக உட்குழுவில் முக்கிய பங்கு வகித்தார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

உருசிய அறிஞர் லியோ டால்ஸ்டாயின் மூன்று சிறுகதைகளை கோதண்டபாணி பிள்ளை 1932ஆம் ஆண்டு "கதைமணிக்கோவை" (Stories from Tolstoy) தலைப்பில் மொழிபெயர்த்தார். டால்ஸ்டாய் மொழிபெயர்ப்புகளில் முதலில் வெளிவந்த தமிழ் நூல் இதுவே ஆகும். 1968 இல் நடந்த இரண்டாம் உலக தமிழ் மாநாட்டில் இவர் “Ancient Tamilians Philosophy of Life” என்ற தலைப்பில் உரையாற்றினார். இவரின் முதற்குறள் உவமை-1956 அகரமுதல எழுத்தெல்லாம் என்னும் திருக்குறள் முதல்பாடலில் அமைந்துள்ள உவமைகளை விளக்குவதாகும்.

சென்னை ஆட்சி சொல்லாக்க கழக உட்குழுவில் திரு கோதண்டபாணி பிள்ளை அவர்கள் 1956

பழந்தமிழ் இசை-1959 என்கின்ற நூல் மூலமாக இசையின் நுணுக்கங்களை ஆராய்ச்சி செய்தார். நெடுநல்வாடை பொருள்நலன், நெடுநல்வாடை பாநலன்-1946 என்னும் இரு நூல்களிள் பத்துப் பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடையின் சிறப்பை எழுதினார். திருமுருகாற்றுப்படை திறன்-1972 என்னும் நூல் திரு.வி.க அவர்களுக்கு காணிக்கையாக உருவாக்கப்பட்டது. ஈரடி இருநூறு-1961 என்னும் நூல் இருநூறு குறள் வெண்பாக்களால் ஆகியது. இந்த நூலுக்கு அருட்டிரு அழகரடிகள் உரை எழுதினார். இந்த நூல் மாம்பாக்கம் குருகுலத்திற்க்கு அன்பளிப்பாக நூலாசிரியரால் உரிமையாக்கப்பட்டது. குருகுலத்தினர் இந்த நூலினின்று கிட்டும் வருவாயை கொண்டு “கோதண்டபாணியார் தமிழ் பரிசு” என்னும் பெயரில் ஒரு பரிசு திட்டம் வகுத்து குருகுலத்தில் பயில்வோருள் தமிழில் முதன்மை பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வந்தனர். 1925 முதல் 1979 வரை இவர் தமிழ் இலக்கிய படைப்புகளை உருவாக்கினார். இவரின் கடைசி படைப்பானது 1979 இல் இவர் இயற்றிய “கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு” (சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு) ஆகும்.[1]

திரு கோதண்டபாணி பிள்ளை அவர்களுக்கு ஆயிரம் பிறைக்குமேல் ஆயுள்வளர் விழா

தமிழ் இலக்கிய இதழான செந்தமிழ்செல்வியில் இவரின் பல கட்டுரைகள் வெளிவந்தன. கோதண்டபாணி பிள்ளையின் படைப்புகளான கதைமணிக்கோவை-1932-Stories from Tolstoy 20 ஆண்டு காலம் தமிழ் பள்ளிகளில் பாடநூலாக இருந்துள்ளது. அதே போல் இவரின் நாடகங்களான மங்கையர்க்கரசியார்-1934 மற்றும் பங்கயச்செல்வி-1936 மெட்ராஸ் பல்கலைகழகத்தில் பாடநூலாக இருந்துள்ளது. நெடுநல்வாடை பொருள்நலன் 1946, நெடுநல்வாடை பாநலன்-1947, கம்பரும் மெய்ப்பாட்டியலும்-1971, திருமுருகாற்றுப்படை திறன்-1972 போன்றவை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருக்கின்றன. இசையைப்பற்றி வெளிவந்த பழந்தமிழ் இசை-1959 நூல் இன்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் இசை பயிலும் மாணவர்களுக்கு பாடநூலாக இருந்துவருகிறது.

1960இல் ராஜாஜி மண்டபத்தில் நடந்த எட்டாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இவருக்கு கேடயம் வழங்கப்பட்டது. ம. பொ. சிவஞானம் அவர்களும் ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களும் திரு கோதண்டபாணி பிள்ளை அவர்களை வாழ்த்தி சிறைப்புரை ஆற்றினர்.

இராவ் சகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களுக்கு 1973இல் நடந்த ஆயிரம் பிறைக்குமேல் ஆயுள் வளர் விழாவில் அவரின் தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டாக உயர்திரு ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் ஆயிரம் பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கினார்.

நூல்கள் நாட்டுடமையாக்கல்[தொகு]

6, ஏப்ரல், 2023 அன்று கு கோதண்டபாணி பிள்ளையின் தமிழ் இலக்கிய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, அவரது மரபுரிமையாளர்களுக்கு ரூ பத்து இலட்சம் அளிக்கபட்டது.[2]

இறப்பு[தொகு]

ஆங்கில அரசாங்கத்தால்,'இராவ் சாகிப்' எனும் பட்டம் பெற்ற இவர் 9, சனவரி 1979 அன்று மறைந்தார்.

தமிழ் இலக்கிய படைப்புகள்[தொகு]

மொழிபெயர்ப்பு[தொகு]

பட்டினப்பாலை in English (1918, 1947)
கதைமணிக்கோவை (Stories from Tolstoy) (1932, 1933, 1934)
Stories from Tolstoy (1948, 1950)
கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு (1970-பகுதி 1)
கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு

(1979-பகுதி 2)

திறனாய்வு ஆராய்ச்சி[தொகு]

நெடுநல்வாடை திறன் ஆய்ந்து தெளிதல் (1943, 1946, 1957)
முதற்குறள் உவமை (1956)
முல்லைப்பண் ஆராய்ச்சி (1958)
பழந்தமிழ் இசை (1959)
திருமுருகாற்றுப்படை திறன் (1972)

உரை நூல்[தொகு]

திருக்குறள் காமத்துப்பால் (1962)
Saiva Siddhanta and Modern Science (1963-64)
Ancient Tamilians Philosophy of Life (1968)
கம்பரும் மெய்ப்பாட்டியலும் (1971)

நாடகம்[தொகு]

மங்கையர்க்கரசியார் (1934)
பங்கயச்செல்வி (1936)

கவிதை பாடல்[தொகு]

கும்பகோணம் சோலையப்ப முதலியார் அக்கிரஹாரத்தில்

நடந்த பிர்மகுல மோசடி திருட்டுக் கல்யாணச் சிந்து

(1925)
தமிழ்த்தாய் வாழ்த்து (1977)

கட்டுரை[தொகு]

ஈரடி இருநூறு (1953, 1954)
Tamil Culture – Ancient Tamil Music (1958)
Tamil Culture – Ancient Tamil Music (1959)
Tamil Culture – Vada Venkatam (1961)
அறத்தாறு எது? (1961)
An Ancient Philosophy of Life (1964)
பலதுறைகளில் அரசர் (1965)
இசைக்கு வழிகாட்டி (1967)
தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும் (1969)
ஆய்தப்புள்ளி ஓர் ஆய்வுரை (1969)
பழந்தமிழிசை (1970)
பெரியபுராணம் சைவ பெருங்காவியம் (1970)
Padmasri Subbiah Pillai- A Life Sketch (1973)
துணிந்து செயலாற்றும் தூய தமிழ் தொண்டர் (1973)
யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் திறன் (1973)
முல்லை பண்ணின் தொன்மையும் சிறப்பும் (1974)

மொழிபெயர்ப்பு[தொகு]

மேநாட்டுத் தத்துவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ஆங்கில நூலை இவர்,மேலை நாட்டுத் தத்துவ வரலாறு எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. A, Jayashree (2023-04-07). "பரிவுத்தொகை அறிவிக்கப்பட்ட 5 தமிழ் எழுத்தாளார்கள் யார்.. யார்? - அவர்களின் படைப்புகள் என்னென்ன? - முழுவிபரம்". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
  2. "Works of five Tamil scholars will be nationalised: Thangam". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._கோதண்டபாணி_பிள்ளை&oldid=3724170" இலிருந்து மீள்விக்கப்பட்டது