முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் ஆங்கிலேய-பர்மியப் போர்

ரங்கூன் கோட்டையை ஆங்கிலேயர்கள் தாக்குதல், 8 சூலை 1824
நாள் 5 மார்ச் 1824 – 24 பிப்ரவரி 1826
(1 ஆண்டு, 11 மாதங்கள் மற்றும் 19 நாள்)
இடம்
பர்மா, கிழக்கு வங்காளம், அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், கச்சார் மற்றும் ஜெயந்தியா
ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
பர்மிய அரசு அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், அரக்கான், கச்சர் மற்றும் ஜெயிந்தியா மலைப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்ததுடன், ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் போர் இழப்பு தொகை செலுத்தியது.
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு

இரத்தனகோசின் இராச்சியம் (சியாம்)

கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சர் ஆர்ச்சிபால்டு காம்பெல்
ஜோசப் வாண்டன் மோரிசன்
மகா பந்துலா 
மகா நீ மியோ  
மிங்க்யா செயா துரா
பலம்
50,000 40,000
இழப்புகள்
15,000 அறியப்படவில்லை எனினும் ஆங்கிலேயரை விட பர்மியரகளுக்கு உயரிழப்பு கூடுதல்.

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் (First Anglo-Burmese War) (5 மார்ச் 1824 – 24 பிப்ரவரி 1826), பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே 1824 -26-களில் நடைபெற்ற முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் ஆகும். இப்போர் 1 ஆண்டு, 11 மாதங்கள் மற்றும் 19 நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் வென்றதால், யாந்தபு உடன்படிக்கையின் படி, பர்மிய அரசு, அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம், அரக்கான், கச்சர் மற்றும் ஜெயந்தியா இராச்சியத்தின் மலைப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிற்கு விட்டுக் கொடுத்ததுடன், போர் ஈட்டுத் தொகையாக ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு செலுத்தியது.[1][2]

தற்கால வடகிழக்கு இந்தியப் பகுதிகளை, ஆங்கிலேயர்கள் கைப்பற்ற பர்மிய அரசுடன் இப்போர் நடைபெற்றது.

முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில் பதினைந்தாயிரம் ஐரோப்பிய மற்றும் பர்மியப் படைவீரர்கள் உயிர் இழந்தனர். போரின் நடுவில் சிக்கிய பர்மியக் குடிமக்கள் பலர் இறந்தனர். இப்போரினால் பிரித்தானியப் பேரரசுக்கு 5 முதல் 13 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.[3] இப்பெருந்தொகை இழப்பினால், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி நிலை சீர் கெட்டது.[4]

இப்போர் பர்மிய இராச்சியத்தின் தோல்வியுடன் முடிந்ததால், பர்மாவின் தன்னாட்சி உரிமையின் முடிவிற்கு வித்திட்டது. இப்போரின் முடிவால், சிறிது காலத்திற்கு பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில், பர்மியப் பேரரசின் அச்சுறுத்தல்கள் அகன்றது.[3] முதலாம் ஆங்கிலேய - பர்மியப் போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்களுக்கு, பர்மியப் பேரரசு பெரும் போர் ஈட்டுத் தொகை வழங்கியதால், பர்மாவின் பொருளாதாரம் சீர் கெட்டது.[2] முதல் ஆங்கிலேய - பர்மியப் போரைத் தொடர்ந்து, ஆங்கிலேயர்கள், 1852 - 1853 மற்றும் 1885 - 1886 ஆண்டுகளில் இரு முறை நடைபெற்ற பர்மியர்களுக்கு எதிரான போர்களில் வெற்றி பெற்றதால், 1886ல் பர்மாவில் பிரித்தானிய ஆட்சி மலர்ந்தது.

போருக்கான காரணங்கள்[தொகு]

பர்மியப் பேரரசர் வங்காளத்தை கைப்பற்ற ஆணையிடல், 1823

கிபி 1822ல் பர்மியப் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் மகா பந்துலா, பிரித்தானிய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளான மணிப்பூர், அசாம் பகுதிகளை கைப்பற்றி, பிரித்தானிய இந்தியாவுடன் நெடும் எல்லையை உருவாக்கினார். பர்மிய ஆக்கிரமிப்புக்கு பயந்த, இந்தியாவின் வடகிழக்கில் இருந்த கச்சார் மற்றும் ஜெயந்தியா பகுதியின் மன்னர்கள், கிழக்கிந்தியக் கம்பெனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கம்பெனி ஆட்சியினர், கச்சார் மற்றும் ஜெயந்தியாப் பகுதிகளை பர்மியர்களிடமிருந்து காக்க, தங்களது படைவீரர்களை அனுப்பி வைத்தனர்.[5]

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள் உரிமை கோரும் சிட்டகாங் பகுதியின் சல்புரி தீவுப் பகுதியை, 1823ல் பர்மியப் படைகள் கைப்பற்றியது.[6]

பர்மியப் பேரரசுக்கு எதிராக, 1824ல் சச்சார் மற்றும் ஜெயந்தியாப் பகுதிகளில், குரல் எழுப்பிய கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, பர்மியப் பேரரசு, படைத்தலைவர் மகா உசானா தலைமையில் பெரும் படைகளை அனுப்பியது. பர்மியப் படைகளை ஒடுக்க பிரித்தானியப் பேரரசும் சச்சார் மற்றும் ஜெயந்தியா மலைப் பகுதிகளுக்கு படைகளை அனுப்பியது. அரக்கான் மலைப்பகுதிகளில் இரு படைக்களுக்கு இடையே 5 மார்ச் 1824ல் பெரும் போர் வெடித்தது.

பிரித்தானியர்கள், வங்காள மாகாணத்தை விரிவு படுத்தவும், பிரித்தானிய உற்பத்தி பொருட்களுக்கு புதிய சந்தைகளை திறந்து விடவும் இப்போரை வாய்ப்பாக கருதினர்.[7][8]

மேலும் பர்மிய துறைமுகங்களை பிரான்சு நாட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வதையும், பிரான்சு - பர்மிய நட்புறவைக் கண்டு பொறாமை கொண்ட கம்பெனி ஆட்சியினர் பர்மியர்களுக்கு எதிராக இப்போரை நடத்த முக்கிய காரணமாயிற்று.[9]

போர்[தொகு]

அரக்கான் காட்டுப் பகுதியில் ஊடுருவும் பிரித்தானியப் படைகள்

பர்மாவின் மேற்கு பகுதியில்[தொகு]

பர்மாவின் அரக்கான் பகுதியின் பர்மியப் படைத்தலைவர் மகா பந்துலா தலைமையிலான 10,000 தரைப்படை வீரர்கள் மற்றும் 5,00 குதிரைப் படைவீரர்கள், ஆங்கிலேய கம்பெனி படைகளை, சிட்டகாங் மற்றும் சில்ஹெட் என இரண்டு முனைகளில் எதிர் கொண்டனர். [5]

மலைப் பகுதிகளில் போரிட நன்கு பயிற்சி பெற்ற பர்மியப் படைகள், பிரித்தானியப் படைகளை எளிதாக வெற்றி கொண்டு புறந்தள்ள முடியும் என்ற நிலை இருந்தது.[1] முன்னரே சனவரி 1824ல் பர்மியப் படைத்தலைவர் உசானா, சச்சார் மற்றும் ஜெயந்தியா மலைக் குன்றுகளில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர். மய்யாவதி மிங்யி உ சா என்ற பர்மியப் படைத்தலைவர் தலைமையிலான நான்காயிரம் பர்மியப் படைகள்,[10] போரிட்டுக் கொண்டே பிரித்தானியர்களின் வங்காளப் பகுதிகளில் புகுந்து, 17 மே 1824ல் காக்ஸ் பஜார் நகரத்திற்கு வெளியே பத்து மைல் தொலைவில் இருந்த ஆங்கிலேயப் படைகளை வென்றார் [11]

பின்னர் படைத்தலைவர் மய்யாவதி மிங்யி உ சா படைகள், பர்மியத் தலைமைப் படைத்தலைவர் பந்துலாவின் படைகளுடன் இணைந்து, காக்ஸ் பஜார் நகரத்தை கைப்பற்றினார்கள்.[12]ஆனால் பர்மியர்கள் சிட்டகாங் மற்றும் கொல்கத்தா நகரங்களை சூறையாடினர்.[13] இதனால் பயந்த ஆங்கிலேய அரசு, தோற்ற படையினருக்கு உதவ, கொல்கத்தா துறைமுகத்தில் படைகளை குவித்தனர்.[14]

பர்மாவிற்குள்[தொகு]

மே 1824ல் ரங்கூன் துறைமுகத்தில் ஆங்கிலேயக் கப்பல் படைகள் நுழைதல்
The Storming of the Lesser Stockade at Kemmendine near Rangoon on 10 June 1824

ரங்கூன் போர் (மே – டிசம்பர் 1824)[தொகு]

பர்மியர்களுடன் மலைப்பாங்கானப் பகுதிகளில் போரிடுவதை தவிர்த்து, பர்மாவின் சமவெளிப் பகுதிகளில் போரிட ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். ஆங்கிலேயப் படைத்தலைவர் ஆர்ச்சி போல்டு காம்பெல் தலைமையிலான 10,00 போர் வீரர்கள் (ஐயாயிரம் ஆங்கிலேயர்கள், ஐயாயிரம் இந்தியர்கள்), ஆங்கிலேயக் கப்பற்படை துணையுடன், 11 மே 1824ல் பர்மாவின் துறைமுக நகரமான ரங்கூனைக் கைப்பற்றினர்.[15][16] பர்மியர்கள் ரங்கூன் நகரத்தை கைவிட்டு, நகரத்திற்கு வெளியே பத்து மைல் தொலைவில், ஆங்கிலேயர்களை தாக்குவதற்கு நிலை கொண்டனர். ஆங்கிலேயர்கள் ரங்கூனில் உள்ள சவேடகன் பௌத்தக் கோயிலை அரணாகக் கொண்டு பர்மியப் படைகளைத் தாக்கினர்.

இதனால் வங்காளம் மற்றும் அசாம் பகுதியில் பந்துலா மற்றும் உசான தலைமையிலான பர்மியப் படைகள், ரங்கூனுக்கு திரும்பியது. காக்க வந்தது.[17]

நவம்பரில் பர்மியப் படைத்தலைவர் பந்துலா தலைமையிலான 30,000 பர்மியப் படைவீரர்கள், 10, 000 வீரர்கள் கொண்ட ஆங்கிலேயப் படைகளை எதிர்கொண்டார். பர்மிய பீரங்கிகள் தீக்குண்டுகளை மட்டும் வீசியது. ஆனால் ஆங்கிலேயப் படைகள், வெடித்து சிதறும் பீரங்கி குண்டுகளை வீசியது.[15] ஆங்கிலேயப் படைகள் ராக்கெட் ஏவுகனைகளயுன் போரிட்டனர்.[17][18]

நவம்பர் 30ம் நாளன்று, பந்துலாவின் கட்டளையின் படி, பர்மியப்படைகள், பிரித்தானியப் படைகளைத் தாக்கினர். டிசம்பர் 7 அன்று, பிரித்தானியப் படைகள், நவீன ராக்கெட் ஏவுகனை போன்ற போர்க்கருவிகளின் துணையுடன், பர்மியப் படைகளை எதிர்கொண்டது.

டிசம்பர் 15 அன்று, பர்மியப் படைகள், கோகின் பகுதியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.[18] போரின் துவக்கத்தில் 30,000 ஆக இருந்த பர்மியப் படைகள், போரில் முடிவில் 7,000 ஆக குறைந்தது.[15]

தானுப்யு போர் (மார்ச் – ஏப்ரல் 1825)[தொகு]

காவல் கோபுரத்தில் நான்கு துப்பாக்கிகளுடன் பர்மிய படைத்தலைவர் பந்துலா

மார்ச், 1825ல் நான்காயிரம் பிரித்தானிய கப்பற்படையினர் தானுப்யு துறைமுகப் பகுதியை தாக்கினர். பர்மியப் படைத்தலைவர் பந்துலா தலைமையிலான தரைப்படை வீரர்கள், குதிரைப்படை வீரரகள் மற்றும் 17 போர் யானைகளுடன், ஆர்ச்சி போல்டு தலைமையிலான பிரித்தானியப் படைகளை தாக்கி வெற்றி கொண்டார். ஏப்ரல் ஒன்றாம் நாளன்று, பர்மியப் படைத்தலைவர் பந்துலா, பிரித்தானியப் படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார். இதனால் பிரித்தானியப் படைகள் தானுப்யு நகரை எளிதில் வென்றனர்.[18]

அரக்கான் போர் (பிப்ரவரி – ஏப்ரல் 1825)[தொகு]

அரக்கான் பகுதியின் படைத்தலைவர் உசானா தலைமையிலான பர்மியப் படைகளை, பிரித்தானியப் படைகள் 29 மார்ச் 1825 அன்று மரௌக் - உ எனுமிடத்தில் எதிர்கொண்டது. சில நாள் போருக்குப் பின்னர், 1 ஏப்ரல் 1825 அன்று மரௌக் - உ நகரத்தை பிரித்தானியர்கள் கைப்பற்றினர். உசானாவின் பர்மியப் படைகள் அரக்கான் பகுதியை விட்டுச் சென்றதால், அரக்கானை பிரித்தானியர்கள் வசமாயினர்.[10]

புரோம் போர் (நவம்பர் – டிசம்பர் 1825)[தொகு]

1 டிசம்பர் 1825 அன்று பிரித்தானியப் படைத்தலைவர் ஆர்ச்சி போல்டு காம்பெல் தலைமையிலான 4,000 கடற்படை வீரர்கள் கொண்ட பிரித்தானியப் படைகள் புரோம் நகரை தாக்கினர். டிசம்பர், இரண்டாம் நாள் போரில் பர்மியப் படைத்தலைவர் மகா நி மியோ பிரித்தானியப் படைகளின் குண்டு வீச்சில் இறந்தார். டிசம்பர் ஐந்தில் புரோம் நகரம் பிரித்தானியர்கள் கைப்பற்றினர்.[19]

26 டிசம்பர் 1825 அன்று பர்மியர்கள், பிரித்தானியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்தனர். இதன் படி, 24 பிப்ரவரி 1826ல் யாந்தபு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

யாந்தபு உடன்படிக்கை[தொகு]

24 பிப்ரவரி 1826ல் பிரித்தானியர்களுக்கும், பர்மியர்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட யாந்தபு ஒப்பந்தப் படி,[1][2]

  • அசாம், மணிப்பூர் இராச்சியம், அரக்கான், சல்வீன் ஆற்றின் தெற்கில் உள்ள தானிந்தாயி மற்றும் டெனஸ்செரம் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத் தரப்பட்டது.
  • சச்சார் மற்றும் ஜெயந்தியாவில் பர்மிய அரசின் குறுக்கீடுகள் நிறுத்தப்பட்டது.
  • போர் இழப்புத் தொகையான ஒரு மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள், நான்கு தவணையில் செலுத்த வேண்டும்.
  • வருங்காலத்தில் வணிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
  • இரண்டாவது தவணை போர் இழப்பீட்டுத் தொகை பர்மிய அரசு செலுத்தும் வரை, பிரித்தானியப்படைகள் ரங்கூனை விட்டு வெளியேறவில்லை.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Phayre, Lt. Gen. Sir Arthur P. (1967). History of Burma (2 ). London: Sunil Gupta. பக். 236–237. 
  2. 2.0 2.1 2.2 2.3 Maung Htin Aung (1967). A History of Burma. New York and London: Cambridge University Press. பக். 212, 214–215. https://archive.org/details/historyofburma00htin. 
  3. 3.0 3.1 Thant Myint-U (2006). The River of Lost Footsteps--Histories of Burma. Farrar, Straus and Giroux. பக். 113, 125–127. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-374-16342-6. https://archive.org/details/riveroflostfoots0000than_j1o0. 
  4. Webster, Anthony (1998). Gentlemen Capitalists: British Imperialism in South East Asia, 1770-1890. I.B.Tauris. பக். 142–145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-171-8. 
  5. 5.0 5.1 Thant Myint-U, The Making of Modern Burma, pp. 18–19
  6. "The Somerset Light Infantry: A History". Archived from the original on 2016-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
  7. Stanley Wolpert (2009). A New History of India (8th ). New York, NY: Oxford UP. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-533756-3. https://archive.org/details/newhistoryofindi0000wolp_i0v9. 
  8. Michael Symes (1795). An Account of an Embassy to the Kingdom of Ava. http://www.burmalibrary.org/docs09/4.1Symes-red.pdf. 
  9. D.G.E.Hall (1960). Burma. Hutchinson University Library. பக். 96–97,78–85,104 இம் மூலத்தில் இருந்து 2011-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110930184841/http://missions.itu.int/~myanmar/Burma/bur_history.pdf. பார்த்த நாள்: 2017-11-30. 
  10. 10.0 10.1 Lt. Gen. Sir Arthur P. Phayre (1967). History of Burma (2 ). London: Susil Gupta. பக். 236–247. 
  11. GE Harvey (1925). "Notes: Fire-Arms". History of Burma. London: Frank Cass & Co. Ltd.. பக். 341. 
  12. "Myawaddy Mingyi U Sa". Yangon: Working People's Daily. 1988-05-16. http://www.burmalibrary.org/docs3/BPS88-05.pdf. 
  13. Htin Aung (1967). A History of Burma. New York and London: Cambridge University Press. https://archive.org/details/historyofburma00htin. 
  14. India Intelligence Branch Subject (1911). Frontier And Overseas Expeditions From India. India Intelligence Branch. பக். 13. 
  15. 15.0 15.1 15.2 Htin Aung, pp. 212–214
  16. Phayre, pp. 236–237
  17. 17.0 17.1 Perrett, pp. 176–177
  18. 18.0 18.1 18.2 Myint-U, River of Lost Footsteps, pp. 118-122
  19. Lt. Gen. Sir Arthur P. Phayre (1967). History of Burma (2 ). London: Sunil Gupta. பக். 252–254. 

வெளி இணைப்புகள்[தொகு]