கூழ் ஊற்றுதல் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூழ் ஊற்றுதல் விழா என்பது ஊர் மக்கள் குடங்களில் கூழுடன் கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு கூழ் படைப்பது ஆகும். இதனை கூல் வார்த்தல் விழா என்றும் அழைப்பர்.[1]

கோடைக் காலத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இவ்விழா வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக நடைபெறுகிறது. சித்திரை மாதத்திலும்[2] ஆடி மாதத்திலும் [3] கூழ் ஊற்றும் விழா மாரியம்மன் கோவிலில் நடத்தப்படுகிறது.

விழா முன்னேற்பாடு[தொகு]

விழாவுக்கு முதல்நாள் காலையில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டினரும் அவரவர் தேவைக்கேற்ப கேழ்வரகு (அ) கம்பு மாவு எடுத்துக்கொண்டு நீரிட்டுக் கரைத்து புளிக்க வைப்பர். அன்று மாலை புதுப்பானையில் முக்கால் பாகம் நீரிட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு கேழ்வரகு மாவு அல்லது கம்பு மாவை ஊற்றி துழவி கூழாக்குவர். கூழ் வெந்தபின் கூழினை நன்கு ஆறவிடுவர்.

பூசைப்பொருட்கள்[தொகு]

வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பத்தி,நல்லெண்ணெய், மாவிளக்கு மாவு, தேங்காய்.

பூசைக்குடம்[தொகு]

மண் (அ) பித்தளை குடத்தை நன்கு கழுவி திருநீறு பட்டையும் குங்குமப் பொட்டும் இடுவர். குடத்தின் கழுத்தில் வேப்ப மாலை கட்டுவர்.

பூசைசெய்தல்[தொகு]

விழா நாளன்று காலை ஆறிய கூழினை நீர்விட்டுக் கரைத்து பூசைக்குடத்தில் நிரப்புவர். அதில் நறுக்கிய வெங்காயத்தையம் தயிரையும் கலப்பர். அக்கூழினை நடுவீட்டில் படையலிட்டு மாவிளக்கு ஏற்றியபின் பத்தி-சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்தை பூசைசெய்வர். அப்படையலை வீட்டினர் அனைவரும் உண்டு மகிழ்வர்.

ஊர்வலம்[தொகு]

விழா அன்று நண்பகல் ஒரு மணி அளவில் அக்கினி சட்டி ஊர்வலத்துடன் பறை அடித்துக்கொண்டு கோயிலிலிருந்து புறப்பட்டு வலமிருந்து இடமாக ஊரைச்சுற்றி வருவர். அவருடன் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டினரும் கூழ்குடத்தை தலையில் சுமந்துகொண்டு மாரி மற்றும் கங்கை அம்மன் கோயிலுக்கு வந்து சேர்வர். அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலின் கீழ் இறக்கி வைப்பர்.

கூழ் ஊற்றுதல்[தொகு]

பம்பை, உடுக்கை அடித்து அம்மனை வணங்கி கூழுடன் சூடமேற்றி தேங்காய் உடைத்து வழிபடுவர். வழிபாடு முடிந்தவுடன் படைத்த கூழினை ஊர்த் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுத்து, பின் மற்றவர்களுக்கும் அளித்து "சமபந்தி உணவு" நடத்துவர்.

உசாத்துணை[தொகு]

  • துணை நுால்:பெண்ணிய நோக்கில் செஞ்சி நாட்டுபடபுற அம்மன் தெய்வங்கள், ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2008.
  • பார்வை நுால்:துளசி.இராமசாமி,நெல்லை மாவட்ட நாட்டுப்புறத்தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1985

ஆதாரங்கள்[தொகு]

  1. "கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை". Dinamalar. 31 மே, 2023. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "கோவில்களில் கஞ்சி, கூழ் ஊற்றுவதற்குஅனுமதி கோரி இந்து முன்னணி மனு". Dinamalar.
  3. https://m.dinamalar.com/detail.php?id=1822615
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழ்_ஊற்றுதல்_விழா&oldid=3929166" இலிருந்து மீள்விக்கப்பட்டது