பி. என். பகவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. என். பகவதி (Prafullachandra Natwarlal Bhagwati 21 திசம்பர் 1921 - 15 சூன் 2017) என்பவர் இந்திய உச்சநீதி மன்ற 17 ஆவது முதன்மை நீதிபதியாகப் பதவி வகித்தவர். 1985 ஆம் ஆண்டு சூலை முதல் 1986 திசம்பர் வரை அப்பதவியில் பணி புரிந்தார். [1] சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு தலைவராக நீதிபதி பகவதி இருந்தார்.

இளமைக்காலம்[தொகு]

பி. என். பகவதி குசராத்தில் பிறந்தார். இவருடைய தந்தை நட்வர்லால் பகவதி என்பாரும் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர். பொருளியல் அறிஞர் ஜெகதீஸ் பகவதி என்பவரும் அறுவை மருத்துவர் எஸ்.என்.பகவதியும் இவருடைய உடன்பிறப்பிப்பினர் ஆவர். இவர் மும்பையில் கல்வி பயின்றார். 1941 இல் மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கில் பட்டம் பெற்றார். 1942 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு நான்கு மாதங்கள் தலைமறைவில் இருந்தார். சிறைக்கும் சென்றார். மும்பை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துப் பட்டம் பெற்றார்.

பதவி உயர்வுகள்[தொகு]

மும்பை உயர் நிதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1960 சூலை மாதத்தில் குசராத்து உயர்நீதி மன்றத்தில் நீதிபதி ஆனார். 1967 செப்டம்பரில் குசராத்து உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆனார். சூலை 1973 இல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். சூலை 1985 இல் உச்ச நீதி.மன்ற முதன்மை நீதிபதி ஆனார் 1986 திசம்பர் 20 இல் ஒய்வு பெற்றார். [2]

நீதித் துறையில் பணிகள்[தொகு]

சட்டத்துக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையிலும், அரசியல் சமூகத் தளங்களிலும் வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கும் கோட்பாட்டு முறை இவர் முன்னெடுப்பில் ஏற்பட்டது.

அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும் வென்றெடுக்கவும் தகுதி நிபந்தனைகள் இல்லாமல் எவர் வேண்டுமானாலும் நீதி மன்றங்களை அணுகி நிதி கோரலாம் என்று இவர் தீர்ப்புக் கூறினார்.

நீதித்துறையில் முழுப் பொறுப்பு என்னும் கருத்தியலும் இவர் முயற்சியால் நடை முறைக்கு வந்தது .

1978 இல் மேனகா காந்தியின் கடவுப் புத்தகம் முடக்கப்பட்டபோது கடவுப் புத்தகம் கொண்டிருப்பது தனி ஆளுடைய முழு உரிமை ஆகும். ஒரு தனி நபருடைய இயக்கத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று நீதிபதி பகவதி தீர்ப்பு கூறினார்.

இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது நெருக்கடிச் சட்டம் நிலவியபோது ஆள் கொணர்வு வழக்கு ஒன்றில், ஒரு நபரை சிறையில் சட்டத்திற்கு முரணாகச் சிறையில் வைத்திருந்தாலும் அதைத் தடுக்கும் உரிமை ஒருவருக்கு இல்லை என்று தீர்ப்புக் கூறிய நீதிபதிகளில் பி. என் பகவதியும் ஒருவர். இந்தத் தீர்ப்பு தவறானது எனப் பிற்காலத்தில் நீதிபதி பகவதி வருத்தம் தெரிவித்தார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

இந்திய நடுவண் அரசு நீதிபதி பகவதி ஆற்றிய நீதித்துறைப் பணிகளைப் பாராட்டி 2007 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது. சிறி சத்ய சாய் உயர் கற்றல் மீறுவனத்தின் வேந்தராக 2011 மே மாதம் 6 இல் அமர்த்தப்பட்டார். அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் மன்றத்தின் மதிப்புறு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._பகவதி&oldid=3285650" இலிருந்து மீள்விக்கப்பட்டது