பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள்
ஒத்தசொற்கள்குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தாய்க்கு வரும் நோய்த்தொற்று
ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பையோஜென்கள்
பிரசவத்தின் பின்னரான தீவிரமான காய்ச்சலின் பல வகைகளுக்கு ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பையோஜென்கள் (Streptococcus pyogenes) (சிவப்புச் சாயமேற்றம் பெறும் கோளங்கள்) காரணமாக உள்ளது. (900x உருப்பெருக்கம்)
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்காய்ச்சல், கீழ் வயிற்று வலி, யோனியிலிருந்து வெளியேறும் திரவத்தின் துர்நாற்றம்[1]
காரணங்கள்பல்வேறுபட்ட பாக்டீரியாக்கள்[1]
சூழிடர் காரணிகள்அறுவைச் சிகிச்சையில் மூலம் குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே மென்சவ்வுகள் கிழிந்துபோதல், மிக நீண்ட (24 மணித்தியாலங்களுக்கு மேலான) குழந்தைபிறப்புக் காலம்[1][2]
சிகிச்சைநுண்ணுயிர் எதிர்ப்பிகள்[1]

பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் அல்லது பிரசவத்தின் விளைவான காய்ச்சல் அல்லது குழந்தைப்பிறப்பின் பின்னரான நோய்த்தொற்றுக்கள் எனப்படுவது குழந்தைப்பிறப்பு அல்லது கருச்சிதைவைத் தொடர்ந்து பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில், எந்த ஒரு நுண்ணுயிரியினாலும் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று ஆகும்[1]. அறிகுறி்கள் மற்றும் நோய்க்குறிகளில் வழக்கமாக 38.0 °C (100.4 °F) -ஐ விட அதிகமான ஒரு காய்ச்சல், குளிர்நடுக்கங்கள், அடி வயிற்றில் வலி, யோனியிலிருந்து வெளியேறும் பொருளின் ஏற்படக்கூடிய துர்நாற்றம் ஆகியவை அடங்கும்.[1] பிரசவத்தைத் தொடர்ந்து வழக்கமாக முதல் 24 மணிநேரத்துக்குப் பிறகு அடுத்து வரும் முதல் பத்து நாட்களுக்குள் ஏற்படக்கூடிய தொற்றுக்களே பிரசவத்துக்குப் பிந்தையத் தொற்றுகள் எனப்படுகின்றன.[3]

பிரசவத்தைத் தொடர்ந்து, பெண் இனப்பெருக்கத் தொகுதியின் பகுதிகள் வெறுமையாகி விடுவதனால், அது தொற்றுக்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றது. இந்த வகை நோய்த்தொற்றானது கருப்பையின் குழி மற்றும் சுவர்களுடன் நின்று விடலாம். குழந்தை பிறப்புக்கான நேரம் மிக நீண்டதாக இருந்தாலோ, அல்லது அளவுக்கதிகமான தீவிர குருதிப்பெருக்கு இருந்தாலோ, தொற்றானது வேறு இடங்களுக்கும் பரவி, குருதி நச்சேற்றம் (Sepsis - blood poisoning]] அல்லது வேறு நோய் நிலைகள் தோன்றலாம்.

பிரசவத்துக்குப் பிந்தைய தொற்றுக்களுக்கான நோய்க்காரணியாக, குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களே முக்கியமாகக் காணப்படுகின்றன.[1] பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படும் காய்ச்சலுக்கான வேறு காரணங்கள்: மார்பகத்தில் பால் கட்டிக்கொண்டு வீக்கம் ஏற்படுதல், சிறுநீர்ப்பாதைத் தொற்றுகள், வயிற்றில் அறுவை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தொற்றுகள், பெண்ணுறுப்பின் வெட்டுத் திறப்பு (en:Episiotomy, நுரையீரல் விரியாமை (en:Atelectasis) ஆகியவை. ஆகும்[1]

நோய்க்காரணிகளும், அறிகுறிகளும்[தொகு]

கருப்பை மற்றும் அதைச் சூழ்ந்திருக்கும் இழையங்களில் ஏற்படும் தொற்றே மிகப் பொதுவானதாக இருக்கும். இது பிரசவத்துக்குப் பிந்தையச் சீழ்ப்பிடித்தல் அல்லது பிரசவத்துக்குப் பிந்தையக் கருப்பையழற்சி என்று அறியப்படுகிறது.[1] இத்தொற்று ஏற்படுவதற்கான காரணங்களாக அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பிறப்பு, யோனியில் பிரிவு B ஐச் சேர்ந்த ஸ்ட்ரெப்டோகோக்கஸ் (Streptococcus) போன்ற குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் இருத்தல், குழந்தை பிறப்பிற்கு முன்னதாகவே மென்சவ்வுகள் கிழிந்துபோதல், மிக நீண்ட (24 மணித்தியாலங்களுக்கு மேலான) குழந்தைபிறப்புக் காலம், சூல்வித்தகம் செயற்கை முறையில் அகற்றப்படல், யோனிச் சோதிப்பு பல தடவைகள் மேற்கொண்டிருத்தல் என்பன சில காரணங்களாக இருக்கின்றன.[1] [2]

பல்வேறு வகையான நுண்ணுயிரிகளால் இந்தத் தொற்றுகள் ஏற்படுகின்றன[1]. ஆய்வகத்தில், யோனியிலிருந்து பெறப்படும் திரவத்திலிருந்து நுண்ணுயிர்களை வளரவிட்டு பரிசோதிப்பதோ அல்லது குருதியை எடுத்து ஆய்வு செய்வதோ, நோயறிதலில் அரிதாகவே உதவியாக உள்ளது[1]. முன்னேற்றம் இல்லாவிடின் மருத்துவப் படிமவியல் தேவைப்படலாம்[1].

தடுப்பு முறைகளும், சிகிச்சையும்[தொகு]

சில நாடுகளில், சிசேரியன் அறுவையைத் தொடர்ந்து ஏற்படும் அபாயங்களின் காரணமாக, அறுவைச் சிகிச்சைக் காலத்தை ஒட்டி அனைத்துப் பெண்களும் ஆம்பிசில்லின் (ampicillin) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பி ஒன்றை நோய்த்தொற்றுத் தடுப்பிற்காகப் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நிலைகொண்டுவிட்ட தொற்றுகளுக்கான சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பியினால் வழங்கப்படும். பொதுவான பெண்களில் 2 அல்லது 3 நாட்களில் நோய்நிலையிலிருந்து முன்னேற்றம் காணப்படும். மிதமான நோயைக் கொண்டிருப்பவர்களுக்கு வாய்வழி நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படலாம், இல்லாவிட்டால் சிரைவழி நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. யோனி வாயிலான பிரசவத்தைத் தொடர்ந்து ஆம்பிசில்லின் (ampicillin) மற்றும் ஜென்டாமைஸின் (gentamicin) மருந்துகளின் கூட்டு அல்லது சிசேரியன் அறுவையைத் தொடர்ந்து கிளின்டாமைஸின் (clindamycin) மற்றும் ஜென்டாமைஸின் (gentamicin) மருந்துகளின் கூட்டு பொதுவான நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகளில் அடங்கும்.. பொருத்தமான சிகிச்சையின் மூலமாக முன்னேற்றம் காணப்படாதவர்களுக்கு சீழ்ப்பிடித்த கட்டி போன்ற பிற சிக்கல்கள் உள்ளனவா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும்.[1]

வரலாறும், நோய்ப்பரவலியலும்[தொகு]

முன்னேறிய உலக நாடுகளில் சுமார் ஒன்று முதல் இரண்டு சதவீதம் பேருக்குப் யோனியூடான பிரசவத்தைத் தொடர்ந்து கருப்பைத் தொற்றுகள் ஏற்படுகின்றன. மேலும் அதிகமான சிரமத்துடன் நிகழ்ந்த பிரசவங்களைக் கொண்டிருந்தவர்களில், ஐந்து முதல் பதின்மூன்று சதவீதமாகவும், சிசேரியன் அறுவை செய்துகொண்டவர்களில் ஐம்பது சதவீதமாகவும் இது அதிகரிக்கிறது.[1] 1990 -இல் ஏற்பட்ட 34,000 மரணங்களில் இருந்து, குறைந்து 2013 -இல் இந்தத் தொற்றுகள் 24,000 மரணங்களை விளைவித்தன.[4] இந்த நிலைமையைக் குறித்த முதல் அறியப்பட்ட விவரிப்புகள் பொது வரலாற்றுக் காலப் பகுதிக்கு முன் (BCE) குறைந்தது 5வது நூற்றாண்டில் ஹிப்போகிரேட்ஸ் எழுதிய குறிப்புகளில் காணப்படுகின்றன.[5] குறைந்தது 18வது நூற்றாண்டில் தொடங்கி நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்ட 1930கள் வரை, குழந்தைப்பிறப்புக் காலத்தை ஒட்டி நிகழும் மரணத்துக்கு மிகவும் பொதுவான ஒரு காரணமாக இந்தத் தொற்றுகள் இருந்தன.[6] 1847 -இல், ஆஸ்திரியாவில், குளோரினைக் கொண்டு கைகளைக் கழுவுதல் பயன்பாட்டின் மூலமாக இக்னாஸ் செம்மெல்வெய்ஸ் (Ignaz Semmelweiss) நோய் மூலமான மரணத்தை சுமார் இருபது சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாகக் குறைத்தார். [7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 "37". Williams obstetrics (24th ). McGraw-Hill Professional. 2014. பக். Chapter 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780071798938. https://archive.org/details/williamsobstetri0024unse. 
  2. 2.0 2.1 WHO recommendations for prevention and treatment of maternal peripartum infections. World Health Organization. 2015. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241549363. http://apps.who.int/iris/bitstream/10665/186171/1/9789241549363_eng.pdf. 
  3. Hiralal Konar (2014). DC Dutta's Textbook of Obstetrics. JP Medical Ltd. பக். 432. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351520672. https://books.google.ca/books?id=LU2VAwAAQBAJ&pg=PA432. 
  4. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
  5. Walvekar, Vandana (2005). Manual of perinatal infections. New Delhi: Jaypee Bros.. பக். 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180614729. https://books.google.ca/books?id=DIOmY2ROeVAC&pg=PA152. 
  6. Magner, Lois N. (1992). A history of medicine. New York: Dekker. பக். 257-258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780824786731. https://books.google.ca/books?id=qtUzscI9_VIC&pg=PA258. 
  7. Anderson, BL (April 2014). "Puerperal group A streptococcal infection: beyond Semmelweis.". Obstetrics and gynecology 123 (4): 874-82. பப்மெட்:24785617. 
  8. Ataman, AD; Vatanoglu-Lutz, EE; Yildirim, G (2013). "Medicine in stamps-Ignaz Semmelweis and Puerperal Fever.". Journal of the Turkish German Gynecological Association 14 (1): 35-9. பப்மெட்:24592068. 

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்