ஸ்ரீசுப்பிரமணியத் தேசிகர் நெஞ்சுவிடு தூது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதல் உணர்வை வெளிப்படுத்த நிலைக்களமாக உள்ள இலக்கிய வகை தூது. ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது என்பது தூது மரபைக் கையாண்டு குருபக்தியை வெளிப்படுத்தும் விதமாகத் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய நூலாகும்.

நூல் வரலாறு[தொகு]

திருவாவடுதுறை ஆதீனத்து 16-ஆவது சந்நிதானமாக விளங்கியவர் சுப்பிரமணிய தேசிகர். இவர்பால் அன்பு கொண்டு வாழ்ந்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. அவர் தம் குருவாகிய சுவாமிகள் மீது தம் நெஞ்சத்தைத் தூது விடுப்பதாக எழுதப் பெற்ற நூல் இதுவாகும். இந்நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 311 கண்ணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு 1960-ஆம் ஆண்டு த. ச. மீனாட்சிசுந்தரம் குறிப்புரை ஒன்று எழுதி வெளியிட்டுள்ளார்.

நூலாசிரியர்[தொகு]

ஆதீனத்தில், மகாவித்வான் பட்டம் பெற்றவர். தலப் புராணங்கள் பல பாடியுள்ளார். சுப்பிரமணிய தேசிகர் மாலை எனும் நூலையும், 15-ஆவது பட்டத்து சுவாமிகள் மீது கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இரு நூல்களையும் இயற்றியுள்ளார்.

நூற் சிறப்புகள்[தொகு]

  • இறைவன் உயிர்களுக்கு அருளும் திறம்
  • இம்மண்ணில் பிறந்து துன்பப்படும் உயிர்களைப் புழுவால் அரிக்கப்படும் பயிருக்கு உவமையாகப் பாடியுள்ளார். (விரவுபுழு மென் பயிர் போல)
  • தேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடல் கடைந்தது,ஒரு காலத்தில் இந்திரன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகுகளை அரிந்தது, மைந்நாக மலை இந்திரனுக்குப் பயந்து கடலிடை ஒளிந்து கொண்டது, அகத்தியர் விந்தியமலையைப் பூமியில் அழுத்தியது முதலான புராணச் செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
  • 63 நாயன்மார்கள் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
  • ஆதீனத்து சந்நிதானங்களைத் தரிசிக்கும் முறைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.
  • இறுதியாக நெஞ்சத்தினை அவரிடம் அனுப்பி மாலையைப் பெற்று வருமாறுக் கூறி நூலை முடிக்கின்றார் ஆசிரியர்.

உசாத்துணை[தொகு]

திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய," ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் நெஞ்சுவிடு தூது"- திருவாவடுதுறை ஆதீனம்-2015.