ரமாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமாபாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டிதை ராமாபாய்
பண்டிதை ராமாபாய்
பிறப்பு23 ஏப்ரல் 1858
கங்கமூலா, கர்நாடகா
இறப்பு05 ஏப்ரல் 1922
மகாராஷ்டிரா, இந்தியா

பண்டிதை ரமாபாய் (23 ஏப்ரல் 1858 - 05 ஏப்ரல் 1922) என்பவர் ஒரு போராளியாகவும் சமூக விளங்கிய பெண்மணி ஆவார். பிராமணக் குடும்பத்தில் பிறந்து பின்னர் கிறித்தவ மதத்துக்கு மாறிய சமூக சீர்திருத்தவாதி ஆவார். குழந்தைத் திருமணங்களை எதிர்த்துப் பரப்புரை செய்தவர். விதவை மறுமணம் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். ஒரு பால்ய விதவை. தமது 22 ஆம் வயதில் ஒரு திருமணம் செய்து இரண்டு ஆண்டில் மீண்டும். பின் இங்கிலாந்து சென்று கிறித்துவ மதத்திற்கு மாறினார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று ஏராளமான குழுக்களை ஆரம்பித்தார். அங்கு பணம் திரட்டி இந்தியாவில் பால்ய பள்ளி தொடங்குவது அவரது நோக்கமாக இருந்தது. விதவைகள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் வாழ்வு பல அமைப்புகளை உருவாக்கியவர்.

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

பண்டித ரமாபாய் கருநாடக மாநில கங்காமுல் என்னும் ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பெண்கள் கல்வி பெற முடியாத சூழ்நிலை அக்காலத்தில் நிலவியது. இவருடைய தந்தை ஆனந்த சாசுத்திரி டோங்கர் முற்போக்குக் கருத்தும் தாராள எண்ணமும் கொண்டவர். எனவே கல்வி அறிவற்ற தம் மனைவியையும் படிக்க வைத்தார். மகள் ராமபாயையும் படிக்கச் செய்தார். இதன் காரணமாக உற்றார் உறவினர்கள் ரமாபாய் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தார்கள். ரமாபாய் சமற்கிருத மொழியைப் படித்தார். பழம் புராணப் பாடல்களை நெட்டுரு செய்தார்.

பொதுப்பணி[தொகு]

தந்தையுடன் வெளியே பயணம் செய்யும்பொழுது பெண்கள் படும் கொடுமைகளையும் துன்பங்களையும் நேரில் கண்ணுற்றார். அதனால் மனம் வருத்தமுற்றார். தனது பதினாறாம் வயதில் தம் பெற்றோரை இழந்தார். தனிமையில் விடப்பட்ட ரமாபாய் புராணக் கதைகளைப் பரப்பும் பொருட்டு இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் ஏராளமான குழந்தை விதவைகளைக் கண்டார். இதற்குக் காரணமான குழந்தை மண முறையை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

இல்லற வாழ்வு[தொகு]

1880 ஆம் ஆண்டில் தம்மினும் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பிபின் பிகாரி தாஸ் மெதவி என்பவரைத் திருமணம் புரிந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மனோரமா என்று பெயரிட்டனர். 18 மாதங்கள் சென்றதும் ரமாபாயின் கணவர் காலரா நோயினால் மாண்டார்.

பெண்கள் தொண்டு[தொகு]

கல்கத்தாவிலிருந்து பூனாவுக்குச் சென்றார். அங்கு ஆரிய மகிளா சமாஜ் என்னும் அமைப்பைத் தொடங்கினார். பெண் கல்வி பரவவும் குழந்தைத் திருமணம் ஒழியவும் அவ்வமைப்பு பாடுபட்டது. ஆங்கில மொழியையும் ஆங்கில இலக்கியங்களையும் கற்றுக் கொண்டார். பின்னர் 1883 இல் இங்கிலாந்துக்குச் சென்றார். இந்து மதத்தின் மீது வெறுப்பு ஏற்பட்ட காரணத்தால் கிறித்தவ மதத்தைத் தழுவினார். 1886 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் பயணம் செய்தார். அங்கு இந்து மத விதவைகள் பற்றிய ஆங்கில நூல் ஒன்றையும் அமெரிக்காவில் உள்ள நிலைமை மற்றும் பயணம் பற்றிய ஒரு நூலையும் எழுதினார். 1889 இல் இந்தியா திரும்பியதும் விதவைகளுக்காக 'சாரதா சதன்' என்னும் அமைப்பை மும்பையில் உருவாக்கினார். கிறித்தவ மதப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டார். இதனால் ரமாபாய்க்கு எதிர்ப்புக் கிளம்பியது. விவிலியத்தை மராத்தி மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

1896-97 ஆண்டுகளிலும் 1900-01 ஆண்டுகளிலும் மத்திய பிரதேசத்திலும் குசராத்திலும் கடும் பஞ்சம் நிலவியது. பசியால் வாடிய 2000 பெண்களையும் குழந்தைகளையும் ஒரு பண்ணையில் தங்க வைத்துக் காப்பாற்றினார். 'முக்தி சதன்' 'பிரீதி சதன்' ' சாந்தி சதன்' ஆகியன ரமா பாய் உருவாக்கிய பெண்களுக்கான தொண்டு நிறுவனங்கள் ஆகும். ஒன்பது முழம் புடைவைகளை விட ஐந்து முழம் புடைவைகள் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று கூறி ஐந்து முழப் புடைவைகளை உடுத்திக்கொள்ள பெண்களிடம் அறிவுரை வழங்கினார்.

விமர்சனங்கள்[தொகு]

நோக்கம் உயர்வாக இருந்த அளவு வழிமுறை மேல்நாடுகளில் இந்தியாவின் உயர்வைப் பேசி இந்தியாவில் தமது பணிகளுக்காக நிதி திரட்ட முயன்ற சுவாமி விவேகானந்தரின் முறைக்கு மாறானதாக ஏற்கத்தக்கதாக இல்லை[1] இந்தியாவில் பெண்களும் விதவைகளும் நடத்தப்படும் விதத்தை மிகவும் மோசமாகச் சித்தரித்தும், பெண்கள் தங்களைத் தேர்ச் சக்கரத்தில் இட்டு உயிரை மாய்ப்பது, பெண் குழந்தைகளைக் கங்கையில் முதலைக்குப் பலியாக்குவது போன்ற ஏராளமான உண்மை சம்பவங்களை கூறியும் பணம் திரட்டினார்[1].

பின்னாளில், இத்தகையப் பிரச்சாரம் பெண்களுக்கான பள்ளி துவங்க இந்தியப் பெண்களைப் பற்றி உயர்வாகக் கூறி நிதி திரட்ட முயன்ற சகோதரி நிவேதிதைக்கு மாறுபாடாக, அவரது முயற்சியில் அவருக்கு சிரமத்தைத் தருவதாக அமைந்தன. தமது கடிதத்தில் இதனை வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றார் சகோதரி நிவேதிதை[2].

போஸ்டனில் சுவாமி விவேகானந்தர் முதன்முதலாக ரமாபாய் வட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப்பிரச்சினை நீண்டகாலத்திற்கு சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்கு ஒரு தடங்கலாகவே இருந்தது.[1]

ராமாபாய் வட்டத்தினர் பற்றி தனது கடிதத்தில் சுவாமி விவேகானந்தர் "ரமாபாய் கூட்டத்தினர் என்னைப் பற்றி கிளப்பியிருக்கின்ற வதந்திகளைக் கேட்டுத் திகைப்பாக உள்ளது. ஒருவன் எப்படி நடந்துகொண்டாலும் சரி, அவனைப்பற்றி பச்சைப் பொய்களைக் கட்டிவிடுகின்ற மக்கள் இருக்கவே செய்வார்கள். சிகாகோவில் இது எனக்குத் தினசரி அனுபவமாக இருந்தது. இந்தப்பெண்கள் கிறிஸ்தவர்களுள் மகா கிறிஸ்தவர்கள்தான்!" என்று எழுதுகிறார்[3].

விருதுகள்[தொகு]

கெய்சர் இ இந்த் என்னும் விருது பிரிட்டிசு அரசு வழங்கியது (1919). ரமா பாயின் பெண்கள் சேவையைப் போற்றி அவர் நினைவாக அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.( 26-10-1989)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 . சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 536
  2. http://www.vivekananda.net/LettersOfNivedita.html
  3. சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 630

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமாபாய்&oldid=3905033" இலிருந்து மீள்விக்கப்பட்டது