பாரத தங்கச் சுரங்கங்கள் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் என்னும் பாரத தங்கச் சுரங்கங்கள் லிமிடெட் (கோலார் தங்கச் சுரங்கம்) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

அறிமுகம்[தொகு]

பாரத் தங்க சுரங்கங்கள் லிமிடெட் நிறுவனம் இந்திய சுரங்க அமைச்சரக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். தற்போது இந்தச் சுரங்க நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மைசூர் அரசிடமிருந்து மத்திய அரசால் 1972 இல் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசின்கீழ் கோலார் தங்கச் சுரங்கம் செயல்படத் துவங்கியது. இந்த நிறுவனம் தங்கத்தை முதன்மையாக கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்கவயலில் பகுதியில் சுரங்கம் அமைத்து அகழ்ந்தது ஆனால் பகுதி அளவு சுரங்கங்கள் ஆந்திர பிரதேசத்தின் பகுதிகளிலும் இருந்தன. இந்தத் தங்க சுரங்கங்கள் கர்நாடக அரசுக்கு சொந்தமானவையாக இருந்த காலத்தில், உலகத் தரமான சரியான தங்க சுரங்கமாக அங்கீகரிக்கப்படவில்லை. இச்சுரங்கம் செல்வாக்கு செலுத்தியக் காலத்தில், கோலார் தங்கச் சுரங்கம் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக கருதப்பட்டது. மேலும் உலகின் பெரிய தங்கச்சுரங்கமாகவும், உலகின் பெரிய தங்க உற்பத்தி மையமாகவும் அறியப்பட்டது ( தூரக்கிழக்கில் தாது மற்றும் கைத்தொழில் - எச் ஃபாஸ்டர் பெயின், நியூயார்க் டைம்ஸ் விமர்சனம், 1927)

கோலார் தங்கச் சுரங்கங்கம் 150 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தங்கத்தை அகழ்ந்து பிரித்தெடுத்ததினால் தங்க இரும்பு வேண்டிய அளவு இல்லாமல் போனதாக கூறி 2001 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. அதற்கு தோதாக இந்திய புவியியல் ஆய்வகம் (ஜி.எஸ்.ஐ) மற்றும் கனிப்பொருள் காணல் கழக லிமிடெட் (MECL) ஆகியவை மீதமுள்ள அற்ப தங்க வளங்கள் சுரங்க தொழில் செய்ய பொருளாதார அடிப்படையில் இலாபகரமானவை அல்ல என்று அறிவித்தன. சுரங்கம் மூடிய நேரத்தில் நிறுவனம் ₹ 900 கோடி இழப்புடன் நடந்து வந்தது. இந்த சுரங்கங்களில் கடந்த 136 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் தங்கம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 26 பகுதிகளில் 8 இடங்களில் மட்டுமே இதுவரை தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

கோலாரில் முறையான தங்கச் சுரங்கப் பணிகள் 1880 ஆம் ஆண்டில் துவங்கியது என்ற போதிலும், உண்மையில் இங்கு தங்க தாது எடுத்த வரலாறு அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் செல்வதாக கூறுகின்றனர். சோழர் காலக் குறிப்புகளில் இப்பகுதியில் சிறு சுரங்க குழிகள் இயங்கி உள்ளன என அறியப்படுகிறது மேலும் கோலார் விசயநகர ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் இதே காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்து இருந்ததாக சில குறிப்புகள் உள்ளன. ஐதர் அலி மறுறும் திப்பு சுல்தான் ஆகியோர் பிரஞ்சு புவியியலாளர்கள் உதவியுடன் கோலார் குழிகளில் இருந்து தங்கம் எடுக்க முயற்சித்ததாக கிழக்கு இந்திய கம்பெனியின் பதிவுகள் கூறுகின்றன. 1799 இல் திப்பு சுல்தானின் தோல்விக்குப் பின்னர், கோலாரில் தங்கம் 1802 இல் இருப்பதை கேப்டன் ஜான் வாரன் "கண்டுபிடித்தார்" , அங்கு மைக்கேல் லாவல்ல என்பவர் நிலங்களை வாங்கி திரை மறைவில் தங்கத்தை எடுத்து வந்தார் இது 1850 அவர் இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்லும்வரை நீடித்தது, இதனபிறகு லவல்லா மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களது நிலங்களை இங்கிலாந்தின் ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமான பிரிட்டிஷ் ஜான் டெய்லர் & கம்பெனிக்கு விற்கப்பட்டது. இந்த நிறுவனம் அங்கு சுரங்கங்கள் அமைக்க மைசூர் அரசிடம் முறையாக 1873 இல் உரிமம் கோரி விண்ணப்பித்தது.

தற்போதைய சுரங்கங்களுக்கு, சுமார் 130 ஆண்டுகளுக்கு அதிகாரபூர்வ வரலாறு கொண்டன, 1880 இல் ஜான் டெய்லர் & கம்பெனியால் உரிமம் பெற்று முதல் சுரங்கம் ஜான் டெய்லர் & கம்பெனியால் தொடங்கப்பட்டது. சுரங்கங்க வேலையானது பலத்த பாதுகாப்புக்கு இடையிலான மற்றும் ஆபத்தான வேலை என்பதன் காரணமாக அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் தொழிலாளர்கள் (முதன்மையாக தலித்துகள்) அடுத்தடுத்த தலைமுறைகளாக சுரங்கங்களில் தொழிலாளர்களாக வேலை செய்தனர். சுரங்க விரிவாக்க நடவடிக்கைகளால் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் தொழிலாளராயினர். இதன் காரணமாக கோலார் தங்க வயல் என்னும் சிறு நகரம் உருவானது. நகரத்தின் வெளிச்சுற்றில் முதன்மையாக தமிழர்கள் மற்றும் சில நூறு கன்னடத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும், நகரின் மையப் பகுதியில் 100 லிருந்து 200 ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பிரித்தானிய குடியிருப்பு இருந்தது இன்று கூட கோலார் தங்கவயல் தமிழ்-கன்னட கலாச்சாரத்தின் ஒரு மையமாக உள்ளது..

கைமாற்றங்கள்[தொகு]

கோலார் தங்க சுரங்கம் 1880 இல் இருந்து ஜான் டெய்லர் & சன்ஸ் நிறுவனம் திட்டமிட்ட முறையில் தங்கத்தை அகழ்ந்தனர். செல்லப்பட்டனர். அடுத்த 60 ஆண்டுகள் இந்தியாவில் "கோலார்" என்ற சொல் தங்கத்தின் இன்னொரு பெயர்போல அதன் சுரங்கத்தால், புகழ் பெற்று விளங்கியது. 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு, சுரங்கங்களை தேசியமயமாக்க முடிவு செய்யப்பட்டது. 1956 இல் ஜான் டெய்லர் & கோ நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு மைசூர் மாநில அரசுக்கு சொந்தமாக்கப்பட்டது. 1960 இல் தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மத்திய அரசின் நிதி அமைச்சகம் கொண்டுவந்த்து, அதன்பிறகு, நடுவனரசு சுரங்கங்களை எடுத்துக்கொண்டது. 1972 ஆம் ஆண்டு மத்திய அரசின், சுரங்க அமைச்சகத்தின் கீழ் பாரத தங்க சுரங்கங்கள் லிமிடெட் (BGML) என்னும் ஒரு பொதுத்துறை நிறுவனம் நிறுவப்பட்டது.

அந்த நேரத்தில் கோலாரில் மீதமுள்ள மூன்று சுரங்கங்கள் இருந்தன. மைசூர், சாம்பியன், நந்திதுர்கம் என்ற பெயரிலான சுரங்கங்கள் அவற்றின் வழியில் அகழப்பட்டன. அடுத்த 20 ஆண்டுகளில் சுரங்கத்தில் மீதமுள்ள தங்கத்தை எடுக்க ஆழமாக செல்ல வேண்டியிருந்தது. இதனால் சுரங்கத்தின் ஆழம் 3000 மீட்டர் என ஆகி கோலார் சுரங்கம் உலகின் இரண்டாவது ஆழமான சுரங்கம் என்று அறியப்பட்டது. தங்கத் தாதுவின் தரம் 1992 இல் ஒருமுறை அற்புதமாக 14 கிராம் / டன் என் கிடைத்தது, பின்னர் <4கிராம் / டன் என குறையத் துவங்கி தங்கம் முழுமையாக அரித்துத் தள்ளப்பட்டது. 1998 இல் தங்க இருப்பு குறையும் காலம் நெருங்கியது அப்போது கிடைக்கும் தங்கத்தைவிட அதை எடுத்து பிரிக்க ஆகும் செலவானது பத்து மடங்காக உயர்ந்தது.

தங்கமான நாட்கள்[தொகு]

கோலார் தங்கச் சுரங்கம், மூன்று சுரங்கங்களைக் கொண்டிருந்தன, அவை சாம்பியன், மைசூர், நந்திதுர்கம் என்ற பெயர்களை உடையவை. கோலார் தங்கச் சுரங்கம் உலகின் பெரிய மற்றும் ஆழமான தங்க சுரங்கங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தங்கச் சுரங்மாக இருந்தது. 1894 இல் கோலார், பெங்களூர் இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை போடப்பட்டது. 1900 ஆம் ஆண்டில் காவிரி மின் திட்டம் துவக்கப்பட்டது இதைத் தொடர்ந்து சிவசமுத்திரம் அணையில் இருந்து நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து கோலார் 1902 இல் தென் இந்தியாவில் நீர்மின்சாரம் பெறும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றது. 1903 ஆம் ஆண்டில் பெத்தமங்கலா ஏரியில் இருந்து கோலார் நகருக்கு குடிநீர் வசதிசெய்யப்பட்டது. மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 1942 இல் கோலார் நகருக்கு வந்தார்.

மூடல்[தொகு]

2001 ஆண்டு சுரங்கங்கள் மூடப்பட்டன என்றாலும் சுரங்கங்களை மூடுவதற்கான முயற்சிகள் 1992-93 காலகட்டத்தில் எடுக்கப்பட்டன அதைத்தொடர்ந்து இந்திய அரசு நியமித்த சாரி குழு அறிக்கையின் அடிப்படையில் மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்தியாவின் தங்க வயல்!". கட்டுரை. தி இந்து. 22 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]