நாலுகெட்டு வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சியில் ஒரு நாலுகெட்டு வீடு

நாலுகெட்டு வீடு ஓலிப்பு (நாலுகட்டு வீடு) என்பது கேரளத்தில் உள்ள மரபுவழி வீடுகளாகும். இத்தகைய வீடுகளை கேரளத்தின் திருச்சூர், ஆலப்புழா, தலசேரி போன்ற இடங்களில் மிகுதியாக பார்க்கலாம். தாய்வழிச் சமூகத்தில் பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடாகும். நாலுகெட்டு வீடு, நான்குபுறமும் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளியான முற்றம் கொண்டு நான்கு அறைகள் கொண்ட செவ்வக வடிவ வீடாகும். நடுமுற்றத்தில் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வீட்டின் சிறப்பு ஆகும். முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த வீட்டிற்கு நான்கு புறமும் வாசல் அமைப்பதும் உண்டு. இந்த நான்கு சதுர பகுதிகளும் வடக்கினி, தெக்கினி, கிழக்கினி, படிஞ்ஞாற்றினி (மேற்குத் தொகுதி) என அழைக்கப்படுகின்றன.[1] நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூசை அறை அமைக்கப்பட்டிருக்கும். பூசை அறையில் சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும்.[2] இவ்வகை வீடுகள் பெரியக் கூட்டுக் குடும்பங்களுக்காக மருமக்கதாய முறையில் ஒரே கூரையின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் வாழப் பாரம்பரியமாக கட்டப்பட்டவை. வீட்டைச் சுற்றி வராந்தா இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும். இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இவ்வாறான சாருபடி மரவேலைப்பாடு வீட்டை சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்துக்கு போவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.[3]

இந்த வீடுகளைக் கட்டுவதில் தச்சு சாஸ்திரமும் பாரம்பரிய வாஸ்து முறையும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு வளர்ந்து பாரம்பரியக் கட்டடக் கலையில் நான்கு கிளைகளாக உருவாயின. இந்த நான்கு கிளைகள் தந்திரசமுச்சயா, வாஸ்துவித்யா, மனுஷ்யாலயா-சந்திரிகா, சில்பரத்னா என்ற பெயர்களின் கீழ் அறியப்படுகிறன.

இந்த வீடுகளின் அமைப்பு எளியதாகவும், மிகுதியான எண்ணிக்கையில் வாழும் குடும்பத்தினருக்கு இடமளிக்கும் வகையில் உள்ளவை ஆகும். இதே அமைப்பைக் கொண்டு குடும்பத்தின் தேவைக்கேற்ப எட்டுகெட்டு (எட்டு கூடங்களுடனும் இரண்டு முற்றங்களுடனும்), பதினாறுகெட்டு (பதினாறு கூடங்களும் நான்கு முற்றங்களுடனும்) என கட்டப்பட்டவை உண்டு. இந்த வகை வீடுகளில் சில வீடுகள் ஒவ்வொரு பகுதியும் சூரிய ஒளியைப் பெறும்வகையில் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளன. இவை சிறந்த காற்றோட்டமுடையவை, கோடைக் காலத்தில் வீட்டினுள் குறைந்த வெப்ப நிலையே இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. விபின் (29 மே 2018). "வீட்டை வரையலாம்: நடுமுற்றம் வீடு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2018.
  2. விபின் (18 பெப்ரவரி 2017). "கேரளக் கட்டிடக் கலைகளின் தனித்துவம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "நாலுகெட்டு வீடு". கட்டுரை. தி இந்து. 10 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலுகெட்டு_வீடு&oldid=3577636" இலிருந்து மீள்விக்கப்பட்டது