க. செ. நடராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. செ. நடராசா
பிறப்புக. செ. நடராசா
(1919-06-30)30 சூன் 1919
நாவற்குழி, யாழ்ப்பாணம்
இறப்பு17 பெப்ரவரி 1994(1994-02-17) (அகவை 74)
ஸ்கார்பரோ, கனடா
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்நாவற்குழியூர் நடராசன்
கல்விகலாநிதி (கொழும்புப் பல்கலைக்கழகம்]])
பணிவானொலிப் பணிப்பாளர்
அறியப்படுவதுகவிஞர், தமிழறிஞர்
சமயம்சைவம்
பெற்றோர்கனகசபை செல்லப்பா, அன்னம்மா
வாழ்க்கைத்
துணை
தங்கராணி நவரத்தினம்
பிள்ளைகள்2

நாவற்குழியூர் நடராஜன் (30 சூன் 1919 – 17 பெப்ரவரி 1994) எனப்படும் கலாநிதி க. செ. நடராசா இலங்கைத் தமிழ் அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார்.[1] இவர் இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கனகசபை செல்லப்பா நடராசா யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழி என்ற ஊரில் செல்லப்பா, அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் யாழ்ப்பாண சரித்திரத்தைக் கூறும் வையாபாடல் என்னும் செய்யுள் நூலை ஆராய்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலாநிதி பட்டமும் பெற்றார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். முதுபெரும் எழுத்தாளர் வரதருடன் இணைந்து மறுமலர்ச்சி சங்கத்தை நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

நடராசன் கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அவரது நண்பர் சானாவின் வெண்டுகோளின் பேரில் 1951 இல் இலங்கை வானொலியில் பேச்சுப் பகுதியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். 1953 இல் அப்பகுதியின் பொறுப்பாளராகப் பணியுயர்வு பெற்றார். அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1960 சிலம்பொலி என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். இவரது கவிதைகள் பல இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களாக ஒலிபரப்பாயின.[2]

இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக இருந்து 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1980 வரை இருந்து சேவையாற்றினார்.[2] தனது ஆய்வுக் கட்டுரைகள அடங்கிய ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 18ஆம் நூற்றாண்டு வரை என்னும் நூல் 1982 இல் வெளியிடப்பட்டது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தை தனது பிள்ளைகளுடன் கனடாவில் கழித்து 1994 இல் கனடாவில் காலமானார்.[2] கனடாவில் வசித்த போது இவர் அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். இந்நூல் இவர் இறந்த பின்னர் வெளிவந்தது.[1]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • வையாபாடல் (தொகுப்பு நூல், 1980, கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1982, கொழும்புத் தமிழ்ச் சங்கம்)
  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1987, சென்னை காந்தளகம் பதிப்பகம்)
  • கவிக்கற்பரசி (சென்னை காந்தளகம்)
  • உள்ளதான ஓவியம் (கவிதைத் தொகுப்பு, 1998, கனடா எழுத்தாளர் இணையம்)

விருதுகள்[தொகு]

  • ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசு, பதக்கம், பொன்வண்ணச் சின்னம் (1991)
  • முத்தமிழ் வித்தகர் பட்டம் (இலங்கை அரசு)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 வி. கந்தவனம். "கனடாவில் மரபுக் கவிதை வளர்ச்சி". TamilAuthors.com. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "இலங்கை வானொலியின் பவள விழா சிறப்பு மலர் 2000". இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._செ._நடராசா&oldid=3928429" இலிருந்து மீள்விக்கப்பட்டது