செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டத்தில் செட்டிகுளம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக ஏகாம்பரேசுவரர் உள்ளார். இறைவி காமாட்சி அம்மன் ஆவார். பிரம்ம தீர்த்தம் கோயிலின் தீர்த்தமாக உள்ளது. கோயிலின் மரம் வில்வம் ஆகும்.[1]

அமைப்பு[தொகு]

மூலவர் மீது பங்குனி 19,20, 21 ஆகிய நாள்களில் சூரிய ஒளி விழுகிறது. மூலவரின் இடப்புறம் இறைவி சன்னதி உள்ளது. இறைவி சன்னதியின் கோஷ்டத்தில் லட்சுமி, சரசுவதி உள்ளனர். உள் திருச்சுற்று மண்டபத்தில் இசையினை எழுப்பும் வெவ்வேறான இசையை எழுப்புகின்ற 10 தூண்கள் உள்ளன. ஸ்தபன மண்டபத்தில் வலப்புறம் காணப்படுகின்ற துவாரபாலகரின் அருகே உள்ள ஒரு சிற்பம் யானையும், காளையும் ஒரே தலையைக் கொண்டு எதிர் எதிராக இணைந்து காட்சி தரும் நிலையில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. உள் திருச்சுற்று மண்டபத்தில் கன்னி மூலையில் வரகுண கணபதி அருகே நாகர் உள்ளார். மேற்குத் திருச்சுற்றில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. அருகே குபேரன் மீன் மீது அமர்ந்த நிலையில் உள்ளார். இந்த சிற்பம் கோயிலின் பிற இடங்களிலும் காணப்படுகின்றன. இக்கோயிலின் அருகிலுள்ள குன்றில் முருகன், ஏகாம்பரேசுவரை நோக்கிய நிலையில் காணப்படுகிறார். திருச்சுற்றில் அறுபத்துமூன்று நாயன்மார்கள், கன்னிமூல கணபதி, காசி விசுவநாதர், நவக்கிரகம், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.[1]

திருவிழாக்கள்[தொகு]

தைப்பூசம் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும் திருவிழாவாகும். ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சூரசம்காரம், கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட பிற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]