நாராயண் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாராயண் தேசாய்

நாராயண் தேசாய் (24 திசம்பர் 1924--15 மார்ச்சு 2015) காந்தியக் கொள்கையர், எழுத்தாளர், நூலாசிரியர் ஆவார். மகாத்மா காந்தியின் தனிச் செயலராகப் பணிபுரிந்த மகாதேவ தேசாய் என்பவரின் மகன் ஆவார். காந்தி நடத்திய ஆமதாபாத்து சபர்மதி ஆசிரமத்திலும் வார்தா சேவா கிராமிலும் தங்கி வளர்ந்தவர். காந்தியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். [1]

பணிகள்[தொகு]

  • சபர்மதி ஆசிரமத்தில் அடிப்படைக் கல்வி கற்றார். நூல் நூற்றல், காதி நெய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டார்.
  • வினோபா பாவே தொடங்கிய பூதான இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். குசராத்து மாநிலம்  முழுவதும் நடந்தே பயணம் செய்து நிலச் சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று நிலமில்லா ஏழைகளுக்கு அவற்றை வழங்கினார்.
  • பூதான இயக்க அதிகாரப் பூர்வ ஏடான பூமிபுத்ரா இதழின் ஆசிரியராக 1959 வரை இருந்தார்.
  • வினோபா பாவேயினால் தொடங்கப்பட்ட அனைத்திந்திய சாந்தி சேனா மண்டல என்ற அமைப்பில் சேர்ந்தார். பின்னர் அதன் பொதுச் செயலாளர் ஆனார்.
  • செயப்பிரகாசு நாராயணன் மறைவுக்குப் பின் சம்பூர்ண கிரந்தி வித்யாலயா என்ற ஒரு நிலையத்தைத் தொடங்கி காந்தியின் சத்தியாக்கிரகக் கொள்கைகள் காந்தியக் கருத்துகள், நெறிகள் ஆகியன குறித்த பயிற்சி அளித்தார்.
  • காந்தியின் வாழ்க்கை வரலாறு சிந்தனைகள் பற்றிய 4 தொகுதிகள் கொண்ட நூலை எழுதி வெளியிட்டார்.
  • இராமாயணச் சொற்பொழிவு, பகவத்கீதைச் சொற்பொழிவு  போன்று காந்திக் கதை என இசையுடன் கூடிய சொற்பொழிவுகள் செய்து காந்தியின் வரலாற்றையும் கொள்கைகளையும்  மக்களிடையே பரப்பினார். [2]
  • குசராத் வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்[தொகு]

மகாதேவ் தேசாயின் வாழ்க்கை வரலாறு எழுதியமைக்காக சாகித்ய அகாதெமி விருது--1993

காந்தியுடன் தம் இளமைக் கால நினைவுகளுக்கான நூல் எழுதியதற்காக சாகித்திய அகாதமி விருது

ஜம்னாலால் பஜாஜ் விருது (1999)

யுனெசுகோ மதன் ஜீத் விருது(1999)

ரஞ்சித் ராம் சுவர்ண சந்த்ராக் --இலக்கிய விருது(2001)

பாரதிய ஞானப் பீடம் வழங்கிய 18 ஆவது மூர்த்திதேவி விருது (2004)--

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்_தேசாய்&oldid=3742858" இலிருந்து மீள்விக்கப்பட்டது