காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யா/காட்டுப்புலம் அ.த.க பாடசாலை (காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) இலங்கையில் யாழ் மாவட்டத்தில் சுழிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை.


அமைவும் தோற்றமும்[தொகு]

ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வலயத்தினுள் வலி மேற்கு பிரதேச சபையின் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் என்னும் அழகிய கிராமத்தில் இப் பாடசாலை அமைந்துள்ளது. திரு.அ.சுப்பிரமணியம் என்பவரால் 1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையினை சுற்றி வயல்கள் அமைந்துள்ளது.


பாடசாலையின் வரலாறு[தொகு]

காட்டுப்புலம், திருவடிநிலை, வறுத்தோலை, பற்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியில் பின் தங்கிய நிலையில் காணப்பட்ட வேளை சுகாதார அபிவிருத்திக் கழகம் கல்வி அமைச்சுக்கு சிபார்சு செய்ததன் காரணமாக 23.10.1985ம் ஆண்டு விஜயதசமி நாளன்று அ.சுப்பிரமணியம் அவர்களை முதல் அதிபராகக் கொண்டு இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

A.T.M School

இத் தினத்தன்று ஒரு நாளும் பாடசாலை செல்லத 11 ஆண் பிள்ளைகளும் 10 பெண் பிள்ளைகளும் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். அன்றைய தினம் வட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி அதிகாரி திரு.இரா.சுந்தரலிங்கம் அவர்களால் இப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.[1]

பாடசாலைக்கு என திரு.சீ.வைரமுத்து என்பவர் 6 பரப்புக் காணியும், திரு.ந.சோமசுந்தரம் என்பவர் ஒரு பரப்புக் காணியும் தந்து உதவினார்கள். ஆரம்பத்தில் '20x40' கொண்ட கட்டடமே பாடசாலையாக இயங்கியது. 21 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை படிப்படியாக மாணவர் தொகையில் வளர்ச்சி கண்டது. ஆரம்பத்தில் காலையில் பாடசாலையாகவும் மாலையில் வளர்ந்தோர் கல்வி கற்கும் இடமாகவும் இப் பாடசாலை காணப்பட்டது.

முதல் அதிபரது விடாமுயற்சியால் சிறப்பாக இயங்கய பாடசாலை போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களையும் பெற்றுக் கொண்டது. நாட்டுப் பிரச்சினை காரணமாக 01.01.1993 தொடக்கம் சுழிபுரம் மேற்கு ஐயனார் கோவிலடி திருமதி புவனேஸ்வரி என்பவரது வீட்டிலும், 12.05.1995 தொடக்கம் கல்லைவேம்படி திரு பொன்னம்பலம் வீட்டிலும், 01.01.1997 தொடக்கம் சுழிபுரம் கம்பனை அம்மன் கோவிலடியில் உள்ள திரு சேதுகாவலர் வீட்டிலும் பின்னர் சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையிலும் நடைபெற்று 04.01.1999 தொடக்கம் பாடசாலை நிரந்தர வளவில் இயங்கத் தொடங்கியது.

29.11.1999 உடன் முதல் அதிபர் ஓய்வுபெற 01.01.2000 தொடக்கம் திரு.நா.தனபாலசிங்கம் அதிபரக கடமையாற்றினார். இவரது காலத்தில் பாடசாலை மேலும் வளர்ச்சி அடைந்தது. நலன்விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலருடன் தொடர்பு கொண்டு பாடசலையை புனரமைத்ததோடு மாணவருக்குத் தேவையான பல வளங்களையும் பெற்றுக் கொடுத்தார். இவரது காலத்தில் மாணவர்கள் உடற்பயிற்சிப் போட்டி, சிறுவர் நாடகம், தொண்டுபடு செயன்முறைப் போட்டி என பல போட்டிகளில் பங்குபற்றி கோட்டமட்டத்தில் முதல் இடங்களைப் பெற்றனர். இவர் 12.05.2005ம் ஆண்டுடன் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

01.09.2005ம் ஆண்டில் மூன்றாவது அதிபராக திரு.அ.ஸ்ரீஸ்பரலிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவரது காலத்திலும் தாச்சிப் போட்டியில் கோட்டமட்ட சம்பியனாகவும் அடுத்த வருடம் இரண்டாம் இடத்தையும் மாணவர் பெற்றனர். அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் 100ற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றனர்.

11.02.2010 உடன் அதிபர் ஓய்வு பெற்றதை அடுத்து திரு.பா.பாலகுமார் அவர்கள் புதிய அதிபராக கடமையேற்று குறுகிய காலத்தில் பௌதீக வளத்தில் அபிவிருத்தி ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் WFP அனுசரனையுடன் '10x20' அளவுடைய புதிய சமையற் கூடமும், தண்ணிர்த் தேவையை தீர்க்குமுகமாக குழாய் நீர் வசதியும், மலசலகூட புனருத்தாணம் என்பவற்றை Unicef அனுசரணையுடன் செய்துள்ளார்.

இவர் மாற்றமாகி சென்றதை தொடர்ந்து 10.10.2014ம் ஆண்டு முதல் பாடசாலையின் புதிய அதிபராக திரு.ந.செல்வராசா அவர்கள் கடமையேற்றதுடன் பாடசாலையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் வகையில் பல்வேறு போட்டிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி கோட்டம், வலயம் வரை அழைத்துச் சென்று வெற்றியீட்ட வைத்துள்ளார். விளையாட்டுப் போட்டி, ஏனைய நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தியதுடன் பாடசாலைக்கென புதிய பான்ட வாத்திய கருவி, பல அலுமாரிகள் அத்துடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பவற்றையும் பெற்று சிறப்பாக பாடசாலையினை வழிப்படுத்தி வந்தார்.

02.01.2017ம் ஆண்டு திரு.ந.செல்வராசா அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதை அடுத்து தற்பொழுது புதிய அதிபராக திரு.ந.சிவானந்தராஜா அவர்கள் கடமையேற்றதுடன் பாடசாலையை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் வகையிலும் மாணவரின் கலவியை மேலும் வளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பல்வேறு செயற்பாட்டில் ஈடுபட்டு பாடசாலையினை சிறப்பாக வழிப்படுத்தி வருகின்றார்.

பாடசாலை மகுடவாசகம்[தொகு]

“வாழக் கல்மின்”


தூரநோக்கு[தொகு]

மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கு தரமான கல்வியை வழங்குதல்.


இலக்கு[தொகு]

தேசிய கல்விக் கொள்கைக்கூடாக சமூகம் ஏற்றுக் கொள்கின்ற,ஒழுக்கமுள்ள சுயமாக தொழிற்படக்கூடிய தேர்ச்சிகளை வழங்கி,சிறந்த மாணவர்களை உருவாக்கல்.


அதிபர்கள்[தொகு]

யா/காட்டுப்புலம் அ.த.க பாடசாலையின் அதிபர்களாக இருந்தவர்கள்

  • திரு.அ.சுப்பிரமணியம் (1985-1999)
  • திரு.நா.தனபாலசிங்கம் (2000-2005)
  • திரு.அ.ஸ்ரீஸ்பரலிங்கம் (2005-2010)
  • திரு.பா.பாலகுமார் (2010-2014)
  • திரு.ந.செல்வராசா (2014-2017)
  • திரு.ந.சிவானந்தராஜா (2017 தொடக்கம்)


மாணவர்கள்[தொகு]

இக் கல்லூரியில் மாணவர் அனுமதியானது தரம் 1 - தரம் 5 ஆகிய வகுப்புகளுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. இக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் கூடுதலானோர் இக் கல்லூரியிலே கல்வி கற்று வருகின்றார்கள். 2017 ஆம் ஆண்டில் மாணவர்களினது மொத்த எண்ணிக்கை 86 ஆகும். இக் கல்லூரியில் குறைந்தளவான மாணவர்கள் இருந்தாலும் தற்பொழுது விளையாட்டில் மட்டுமன்றி கல்வியிலும் மிகவும் திறமையுடையவர்களாக முன்னேறி வருகின்றார்கள்.

மன்றச் செயற்பாடுகள்[தொகு]

இப் பாடசாலை மாணவா்களின் இலைமறைகாயாக மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரவும், ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை வளா்க்கவும் மொழி ஆற்றலை சிறப்பிக்கவும் சமூகப்பொருத்தப்பாடுடையவா்களாகவும், பாடசாலையில் பல மன்றங்கள் அமைக்கப்பட்டு, மாதமொருமுறை கூட்டபடுகின்றன. அத்துடன் விழாக்கள், விசேடதினங்கள், அறிஞா்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், போட்டிகள் என்பனவற்றையும் நடாத்தி வருகின்றது.

இப் பாடசாலை மாணவா்களின் 2017 ஆம் ஆண்டு மன்றங்கள் பின்வருமாறு,

  • சுகாதார மன்றம்
  • தமிழ் மன்றம்
  • கணித மன்றம்
  • சுற்றாடல் மன்றம்
  • மாணவர் மன்றம்
  • ஆசிரியர் கழகம்
  • இந்துமா மன்றம்

போட்டிகள்[தொகு]

இப் பாடசாலை மாணவா்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சில போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

  • தமிழ்த்தினப் போட்டிகள்
  • ஆங்கிலத்தினப் போட்டிகள்
  • கணிதப் போட்டிகள்
  • செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகள்
  • பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டி
  • பண்ணிசை மனனப் போட்டி
  • திருக்குறள் மனனப் போட்டி

கல்லூரிக் கீதம்[தொகு]

கல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.


வாழ்க நம் கல்விக் கழகமிது என்றும்
வாழிய வாழியவே.
வானம் அளாவ வன்புகளோங்கி
வளர்க கலாலயமே.

சித்தில் எனும் பெருமையுள்ள இங்கு
சிந்தை மகிழ்ந்தையன் கோயில் கொண்டார்.
முந்தை வினையற மூசிக வாகனன்
முருகனடி தினம் எண்ணுவமே.

காராளர் சீராளர் கண்டு களித்திட
காட்டுப்புலக் கல்வி கூடமிதில்,
கண்ணும் கருத்துமாய் கல்வி பயின்றிடக்
கற்பகமே எனமக் கண்பாரும்.

எண்ணும் எழுத்தம் இசைவாக இன்னும்
பண்ணும் பரதமும் நாம் பயில்வோம்.
அன்னையர் தந்தையர் பார்த்து மகிழ்ந்திட
ஆற்றும் கடமைகள் நாம் அறிவோம்.

வாழ்க நம் கல்விக் கழகமிது என்றும்
வாழிய வாழியவே.
வானம் அளாவ வன்புகளோங்கி
வளர்க கலாலயமே.


உசாத்துணைகள்[தொகு]

  1. “A.T.M School Magazine – May 2000”