மௌனகுரு அருளம்பல சுவாமிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சுவாமிகளின் வரலாற்றுச் சரித சுருக்கம்[தொகு]

மௌனகுரு அருளம்பல சுவாமிகள்
(யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்)

அருளம்பல சுவாமிகள் வேலுப்பிள்ளை, இலட்சுமி அம்மாள் ஆகியோரின் புதல்வராவார். இவர் இலங்கையிலே யாழ்ப்பாணத்திலுள்ள வியாபாரிமூலை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரே பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் என அழைக்கப்படுகின்றார். சுவாமிகளுடைய தாயார் வதிரி எனும் கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமி அம்மாள், தந்தையார் வியாபாரிமூலையைச் சேர்ந்த சின்னையா ஆவார்கள். சுவாமிக்கு பொன்னாச்சி எனும் பெயருடைய உடன் பிறந்த சகோதரியும் உண்டு. சுவாமியின் சிறுவயதிலேயே தந்தையார் காலமாகிவிட்டார். சுவாமியின் தாயார் மறுமணம் புரிந்து சின்னப்பிள்ளை, அன்னப்பிள்ளை ஆகியோர்களைப் பெற்றெடுத்தார். இவர்கள் இருவரும் சுவாமிகளது உடன்பிறவாச் சகோதரிகள் ஆவர்.

சுவாமிகளின் பிறந்த தினம் இதுதான் என திட்டவட்டமாக சுட்டிக்காட்டக் கூடிய சான்றுகள் இல்லாவிடினும் வியாபாரிமூலையிலுள்ள மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கிடைக்கப்பெற்ற அக்காலத்து சேர்வுடாப்பின் படியும், சுவாமிகளது கையெழுத்துப் பிரதியின் படியும் சுவாமிகள் ஏறத்தாழ 07.05.1880ல் பிறந்ததாக கொள்ள முடிகின்றது. (தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார்)

வியாபாரிமூலையில் அமையப்பெற்றுள்ள மௌனகுரு அருளம்பல சுவாமிகள் அவர்களின் சமாதி

வீட்டு சூழ்நிலை காரணமாக இளம் பருவத்திலிருந்தே பாட்டியார் காளியம்மையின் ஆதரவில் வியாபாரிமூலையிலேயே வளர்ந்தார். இவர் 23.10.1894 வரை மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். சதாவதானி கதிரவேற்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இளமையிலே விவசாயம் செய்த சுவாமிகள் பின்பு திரு.த.பரமுப்பிள்ளை அவர்களின் கம்பளைக் கடையில் அவருக்கு உதவியாளராக இருந்தார். பின்பு மட்டக்களப்பில் வியாபாரம் செய்து நட்மடைந்தார். திருவருள் கூடவே நிஷ்டை கற்க சிதம்பரம் சென்றவர் நாகபட்டணத்து நாகை நீலலோசனி அம்பாள் ஆலயத்தில் தங்கினார். நீலலோசனி அம்பாளின் தரிசனப்பிரகாரம் அம்பாள் முன்பாக நான்கு ஆண்டுகள் நிஷ்டையில் இருந்தார். நிஷ்டை கைகூடியதனால் சித்தரானார்.

சுவாமிகள் நாகையில் “நாகப்பட்டணம் சுவாமி, நாகை மௌன சுவாமி, மௌனகுரு, யாழ்ப்பாணத்துச் சுவாமி, பூந்தோட்டத்து ஐயா” எனப்பலராலும் அழைக்கப்பட்டார். இவர் தலயாத்திரையின் பொருட்டு வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயவரம், பாண்டிச்சேரி(புதுவை) ஆகிய இடங்களுக்குச் சென்றார். புதுவையில் தங்கினார்.

1908 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டுவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் புதுவையில் வாசஞ்செய்தார். குவளைக்கண்ணன் சுவாமிகளுடனும் நட்புப்பூண்டிருந்தார். புதுவையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை குவளைக்கண்ணன் சுவாமிகள் பாரதியாரிடம் அழைத்துச் சென்றார். பாரதியார் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் மௌன நிலையில் ஈர்க்கப்பட்டார்.

பாரதியார் 1918ம் ஆண்டு புதுவைவிட்டு நீங்கி மனைவியின் ஊரான கடயத்திற்குச் சென்றார். 1921ம் ஆண்டு செப்ரம்பர் 12 இல் பாரதியார் அமரத்துவம் எய்தினார்.

மௌனகுரு அருளம்பல சுவாமிகளின் சமாதியின் பெயர்ப்பலகை

1924ம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் “அருளம்பலம் சந்தேக நிவர்த்தி” எனும் தமது நூலினை புதுவை ஜெகநாதம் அச்சுக்கூடத்திலும், 1926ம் ஆண்டு “கற்புநிலை” என்ற தமது மற்றுமொரு நூலை புதுவை கலாநிதி அச்சுக்கூடத்தில் பதிப்பித்துள்ளார். மேலும் இவர் 1927ம் ஆண்டு “அருவாச தேவ ஆரம்”, “சீவதரிசி” எனும் இரு நூல்களையும் புதுவை கலாநிதி அச்சுக்கூடத்திலேயே பதிப்பித்துள்ளார். இவற்றில் இருந்து 1914 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரையும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் இருந்தார்கள் என்பது தெளிவு. மற்றும் 1928ம் ஆண்டு சுவாமிகள் நாகை நீலலோசனி அம்மன் பேரில் “தோத்திரம்”, “ஊஞ்சல்” எனும் இரு நூல்களையும் ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்திலும், 1929ம் ஆண்டு “கற்புநிலைச் சுருக்கம்” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்தில் பதிப்பித்துள்ளார்.

சுவாமிகள் 1929ம் ஆண்டு நாகபட்டணத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிவந்து வியாபாரிமூலையிலும், வதிரியிலும் தங்கினார். சுவாமிகள் மீண்டும் 1930ம் ஆண்டு நாகபட்டணம் சென்றார். அவரிற்கு வியாபாரிமூலையின் செல்வந்தரான வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் நாகபட்டணத்தில் காணி வாங்கி மடம் கட்டி சுவாமிகள் தங்க வசதி செய்து கொடுத்தார்.

யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் மீண்டும் 1931ம் ஆண்டு “பழை வேற்பாட்டுடன் படிக்கை” எனும் நூலினை நாகபட்டணத்திலுள்ள ஜனனோபகார அச்சுக்கூடத்திலும், 1935ம் ஆண்டு “ஆதிபுராணம்” எனும் நூலினை கண்டியிலுள்ள காமினி அச்சுக்கூடத்திலும் பதிப்பித்துள்ளார். 1939ம் ஆண்டு யாழ்ப்பாணம் புலோலி மேற்கு திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை நாகபட்டணம் சென்று சந்தித்தார்கள். இதிலிருந்து திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் உத்தம சிஷ்யனானார். மீண்டும் 1940ம் ஆண்டு சுவாமிகள் “ஆதி நீதி” எனும் நூலை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணத்தில் பதிப்பித்தார்.

1942ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமிகள் முன்குறித்த வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்களுடன் யாழ்ப்பாணம் வந்து அல்வாய் வடக்கு "திருமகள் வாசம்" எனும் அவரது இல்லத்தில் தங்கினார். 1942ம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் திகதி அத்த நட்சத்திரத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அவரது முதல் சிஷ்யரான திரு.வெ.க.சிவப்பிரகாசபிள்ளை அவர்கள் இல்லத்தில் மகா சமாதி அடைந்தார். அவ்வாண்டிலேயே மார்கழி மாதம் 5 ஆம் திகதி வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி வைக்கப்பட்டு செப்பனிடப்பட்ட வைரக்கற்களால் திருமந்திரத்தின் படி கோவில் கட்டப்பட்டது. திரு.ச.கணபதிப்பிள்ளை ஆகிய வேற்சாமியார் 1942 இல் இருந்து நித்திய பூசைகளைப் பொறுப்பேற்று தமது இறுதிக்காலம் வரை செய்தார்கள். தொடர்ந்து நித்திய பூசைகளும், குரு பூசைகளும் நடைபெற்று வருகின்றன.

மௌனகுரு அருளம்பல சுவாமிகளின் சமாதியின் வெளிவாயில்

1943ம் ஆண்டு நாகபட்டணம் அக்கரைகுள ரோட்டில் ஸ்ரீலஸ்ரீ மௌன சுவாமிகள் மடாலயத்தில் சித்திரபானு வருஷம் தை மீ.3உ (16.01.43) இல் நடந்தேறிய குருபூசையன்று ஸ்ரீலஸ்ரீ அருளம்பல சுவாமிகள் பேரில் ஆனந்தக்களிப்பு பாடி அளிக்கப்பட்டது.

1961ம் ஆண்டு திரு.அ.ந.கந்தசாமி என்பார் ஸ்ரீலங்கா ஆகஸ்ட் இதழில் “ஞானம் வளர்த்த புதவை” எனும் கட்டுரையில் பாரதி கூறும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் யார்? என்னும் வினாவினை எழுப்பினாரே தவிர யார் என எவரையும் இனங்காணவில்லை. இதற்கு 1962ம் ஆண்டு யாழ்ப்பாணத்து சுவாமிகளது அன்பரான திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா 04.1962 இல் எழுதிய கட்டுரையில் யாழப்பாணத்து சுவாமிகளே அருளம்பல சுவாமிகள் எனக் கூறியிருந்தார்.

07.05.1963 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் “அருளம்பல சுவாமிகளே பாரதியாராற் போற்றப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி” எனக் கொண்டு எடுக்கப்பட்ட விழாவில் சமாதி ஆலயத் தருகில் பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நினைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவியது எனும் வாசகம் பொறித்த நடுகல் நாட்டினர். இவ் விழாவினை முன்னிட்டு அன்றைய தினகரன் பத்திரிகையில் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் கட்டுரைகளும், யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் புதுவையில் வெளியிட்ட “காற்றை நிறுத்தக் காணுவன் விடையை” எனும் துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டன.

09.05.1963 இல் ஈழநாடு தனது பத்திரிகை ஆசிரியர் தலையங்கத்தில் “பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளே” என செய்தி வெளியிட்டிருந்தது. 15.05.1963 இல் வெளியான ஆத்ம ஜோதி மாத சஞ்சிகையின் அட்டையில் அருளம்பல சுவாமிகளின் படம் பிரசுரிக்கப்பட்டு “பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்” என வெளிவந்தது. ஆதன் ஆசிரியரான க.இராமச்சந்திரன் அவர்கள் அருளம்பல சுவாமிகளே யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

1979ம் ஆண்டு திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் “புற்றளைக்கரசே” என்னும் அவரது நூலில் அருளம்பல சுவாமிகள் மீது பாடிய மூன்று பாடற் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மெய்கண்டார் ஆதீன முதல்வர் ஸ்ரீமத் ஞானப்பிரகாச தம்பிரான் சுவாமிகள் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயச் சூழல்களில் கவரப்பட்டு பஜனையும் வேதாந்த வகுப்புக்களும் தமது இறுதி பரியந்தம் வரை நடாத்தி வந்தார்கள். 1981ம் ஆண்டு திரு.சி.மு.தம்பிராசா அவர்கள் “பாரதி வர்ணித்த ஜகத்தினிலோர் உவமையில்லா யாழ்ப்பாணத்துச் சுவாமி அருளம்பல சுவாமிகளே” என 22.11.1981 இல் வீரகேசரியில் அருளம்பல சுவாமிகள் குருபூசையை முன்னிட்டு எழுதி வெளியிட்டுள்ளார். திரு.சி.நா.சொக்கநாதபிள்ளை அவர்கள் சிவஞானப்பிரகாச சபைக்கூடாக யாழ்ப்பாணம் மேலைப்புலொலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகளது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினார்கள்.

திரு.ஆ.சபாரத்தினம் அவர்கள் 31.01.1982 இல் தினகரன் வாரமஞ்சரியில் ‘தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதிக்கு முன்னும் பின்னும்’ என்னும் கட்டுரையில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் அருளம்பல சுவாமிகளே எனக் குறிப்பிட்டிருந்தார். திரு.க.அம்பிகைபாகன் அவர்கள் 07.02.1982 இல் வீரகேசரியில் ‘பாரதி பாடிய யாழ்ப்பாணத்துச் சுவாமியே அருளம்பல சுவாமிகள்’ என யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் நிஷ்டையில் இருந்து எழுந்தவுடன் எடுத்த படத்துடன் வெளியிட்டிருந்தார்.

1990ம் ஆண்டு இந்து கலைக்களஞ்சியத்தில் திரு.பொ.பூலோகசிங்கம் அவர்கள் பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் வியாபாரிமூலையைச் சேர்ந்த அருளம்பல சுவாமிகளே என ஆதாரங்களுடன் நிலைநாட்டியுள்ளார்.

மௌனகுரு அருளம்பல சுவாமிகளின் சமாதியின் வெளிப்புற மண்டபத் தோற்றம்

1992ம் ஆண்டு வியாபாரிமூலையில் டாக்டர் மு.க.முருகானந்தன் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை அமைக்கப்பட்டு கலாநிதி நா.ஞானகுமாரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியற்றுறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.) அவர்கள் ‘பாரதி போற்றிய யாழப்பாணத்துச் சுவாமிகள்’ வியாபாரிமூலை, அல்வாய் வடக்கு அருளம்பல சுவாமிகளே என தகுந்த ஆதாரங்களுடன் “பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்” எனும் ஆய்வு நூலினை வெளியிட்டுள்ளார்கள்.

06.09.1998 இல் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் இலங்கை கிளையின் தலைவர் சுவாமி ஆத்மகணானந்தா அவர்கள் தலைமையில் ஸ்ரீ இராமகிருஷ்ணமிசன் சுவாமிகளும் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் ஆலயத்திற்கு வருகைதந்தனர்.

2000ம் ஆண்டு யாழ்ப்பாணத்துச் சுவாமிகளான சி.வே.அருளம்பலசுவாமிகள் அருளிச்செய்த “மண் விண் வினாவிடை” எனும் நூல் பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் இந்து சமயப்பேரவையால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சபை (அல்வாய் வடக்கு, சி.வே.அருளம்பல சுவாமிகள், வதிரி, வியாபாரிமூலை) இலங்கை இந்து சமய, இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 18.12.2001 HA/4/J/197 ஆம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

வியாபாரிமூலை யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சமாதி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சுவாமி அருளானந்தா அவர்கள் தலைமையில் 25.11.2004 இல் குடமுழுக்கு செய்யப்பட்டது. அன்று சுவாமி அருளானந்தா எமுதிய “யாழ்ப்பாணத்து மௌன குருவின் சரித சுருக்கம் – மீண்டும் அருள்தர வந்தேன்” என்னும் நூலும் வெளியிடப்பட்டது. திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் குலத்தோன்றல்களான டாக்டர் சதானந்தன், திருவாளர்கள் சி.முத்துக்கிருஷ்ணன், சா.நவரத்தினராசா போன்றவர்கள் சமாதி ஆலயப் புனருத்தாரணப் பணிக்கு பொருளுதவி புரிந்ததோடு நித்திய பூசைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

2007ம் ஆண்டு பேராசிரியர் நா.ஞானக்குமாரன் அவர்கள் “பாரதி போற்றிய யாழ்ப்பாணத்துச் சுவாமி யார்?” எனும் கட்டுரை எழுதி அதில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சி.வே.அருளம்பல சுவாமிகளே என ஆதாரங்கள் காட்டி தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம வெளியீடான 2007 ஐப்பசிஇ கார்த்திகை ஞானச்சுடர் மலரில் வெளியிட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்து சுவாமிகளின் அற்புதங்களும் சித்துக்களும்[தொகு]

1. சுவாமிகள் பொலிகண்டி கடல் நீர்ப்பரப்பில் பல்வேறு இடங்களிலும் நின்று காட்சி கொடுத்தார்கள்.

2. நாகை நீலலோசனி அம்மன் ஆலய வாசலில் நிஷ்டையின் பின் 41 நாட்கள் வாயூறு தண்ணீரில் இருந்தார்கள்.

3. தீயிற் காய்ச்சிய இரும்பினை இவரது பாதத்திற் சுட்டபோது சுவாமிகள் மௌனமாக இருந்தார்கள்.

4. பொலிசார் சுவாமிகளை அறையில் விட்டுப் பூட்டிவைத்தனர். சிறிது நேரத்தில் அவர் அறையில் இல்லாமல் கடற்கரையோரத்தில் நிஷ்டையில் இருந்தார்கள்.

சுவாமிகள் சித்தாடலை விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வரலாற்று ஆதாரங்கள்[தொகு]

பாரதியார் பாடல், பாரதி அறுபுத்தாறு எனும் பகுதியில்


1. குருக்கள் ஸ்துதி (குள்ளச்சாமி புகழ்)

ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்

நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்

மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி

முற்றிலும் நாம் அமர நிலை சூழ்ந்து விட்டோம்

தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்

சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்

வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்

வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி.


2.

அ. யாழ்ப்பாணத்துச் சுவாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்

குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்

தேவிபதம் மறவாத தீர ஞானி

சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்

பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோனி

பரமபத வாயிலெனும் பார்வை யாளன்

காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும்

கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.


ஆ.

தங்கத்தாற் பதுமை செய்தும் இதர லிங்கம்

சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்

துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்

தோழரே! ஏந்நாளும் எனக்குப் பார்மேல்

மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்

வானவர் கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்

சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு

சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி.


3. குவளைக்கண்ணன் புகழ்

அ.

யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொ ணர்ந்தான்

இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்

காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான் பார்மேல்

கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்

பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்

பறையரையும் மறவரையும் நிகராகக் கொண்டான்

தீர்ப்பான சுருதி வழி தன்னிற் சேர்ந்தான்

சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.

ஆ.

மகத்தான முனிவரெல்லாம் கண்ணன் தோழர்

வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்

மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்

வீரர்பிரான் கவளையூர்க் கண்ணன் என்பான்

ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்

சுவாமிதனை யிவனென்றான் மனைக்கொ ணர்ந்தான்

அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்

அன்றெய்ப் போதேவீ டதுவே வீடு.


இவ்வாறு பாரதியார் யாழ்ப்பாணத்துச் சுவாமியின் புகழ் பாடியுள்ளார்.

அருளம்பல சுவாமிகளது நூல் விபரங்கள்[தொகு]

இல. நூலின் பெயா் பிரசுாித்த இடம் ஆண்டு பக்கங்கள்
1 அருளம்பலம் சந்தேக நிவா்த்தி புதுவை ஜெகநாதம் அச்சுக்கூடம் 1924 64
2 கற்பு நிலை புதுவை கலாநிதி அச்சுக்கூடம் 1926 128
3 அநாதி பேதம் கைவசமில்லை - -
4 சங்க வினாவிடை கைவசமில்லை - -
5 சைவ வினாவிடை கைவசமில்லை - -
6 தா்க்க சாஸ்திரம் கைவசமில்லை - -
7 அருவாச தேவ ஆரம் புதுவை கலாநிதி அச்சுக்கூடம் 1927 40
8 சீவதாிசி புதுவை கலாநிதி அச்சுக்கூடம் 1927 20
9 நாகை நீலலோசனி அம்மன் தோத்திரம் ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணம் 1928 16
10 நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல் ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணம் 1928 16
11 கற்பு நிலைச் சுருக்கம் ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணம் 1929 68
12 பழைய வேற்பாட்டுடன் படிக்கை ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணம் 1931 42
13 ஆதிபுராணம் காமினி அச்சுக்கூடம் - கண்டி 1935 72
14 ஆதி நீதி ஜனனோபகார அச்சுக்கூடம் – நாகபட்டணம் 1941 15
15 மண் விண் வினாவிடை
1. கலியான அறிவிக்கை
2. நாச்சியார் பேரில் விண்ணப்பம்
3. முகிலமாதேவிக்குப் புலம்பல்
4. அருள் அம்பல ஆனந்த ஜோதி
நியூ கார்த்திகேயன் அச்சகம் - கொழுமு்பு 06 2001 51

உசாத்துணைகள்[தொகு]

  • மீண்டும் அருள்தர வந்தேன்

நூலாசிரியர் - சுவாமி அருளானந்தா