குருநகர் புனித யாகப்பர் ஆலயம்

ஆள்கூறுகள்: 9°23′0″N 79°31′0″E / 9.38333°N 79.51667°E / 9.38333; 79.51667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருநகர் புனித யாகப்பர் ஆலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை குருநகர், யாழ்ப்பாணம்
புவியியல் ஆள்கூறுகள்9°23′0″N 79°31′0″E / 9.38333°N 79.51667°E / 9.38333; 79.51667
சமயம்கிறிஸ்தவம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
நிலையாழ் மறைமாவட்டத்தின் கீழ்

புனித யாகப்பர் ஆலயம் யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கக் கோவிலாகும்.

புனித சந்தியோகுமையோர் ஆலயம்[தொகு]

'வாளேந்திய கடவுள்' என மக்களால் புகழ்ந்து அழைக்கப்பட்ட போர்த்துக்கேய தளபதி பிலிப் டீ ஒலிவேறா மாதாவின் தீவிர பக்தி கொண்டவன். அத்துடன் போர்த்துக்கேயர் தமது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலெல்லாம் பெரும்பாலும் மரியாள் பக்தியை முதன்மைப்படுத்தியே ஆலயங்களை உருவாக்க ஊக்குவித்துள்ளனர். அவ்வாறிருக்கும்போது இம்மக்கள் யாகப்பர் அப்போஸ்தலர் பெயரில் கோவிலை உருவாக்க காரணம் எழவில்லை அவர் மீது தீவிர பக்தி கொள்ள இரண்டு காரணங்கைள முன்வைத்தனர்.

  1. ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் முதல் கிளம்பிய கத்தோலிக்கிய இலக்கியமான சந்தியோகுமையோர் அம்மானை போர்த்துக்கீசர் காலத்தையதாகும். தெல்லிப்பழை பேதுருப்புலவரால் கிளாலியில் கோவில் கொண்ட தூய சந்தியோகுமையோரைப் பாடுபொருளாகக் கொண்டதாக அம்மானை அமைந்தது. '1647ம் ஆண்டு அம்மானை எழுதப்பட்டது. 1620ல் கிளாலியில் சந்தியோகுமையோர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்தது. இதே காலகட்டத்தில்தான் ஊர்காவற்றுறையிலும் சந்தியோகுமையோர் ஆலயம் உருவாக்கப்பட்டது. ஊர்காவற்றறையும்-கிளாலியும்- அலுப்பாந்தியும் துறைமுக நகரங்களாகையால் இந்நகரங்களுக்கிடையே நிலவிய போக்குவரத்து வர்த்தக தொடர்புகள் காரணமாக புனித சந்தியோகுமையோர் பேரில் ஏற்பட்ட நம்பிக்கை, பக்தியினால் குருநகரில் சிற்றாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
  2. கடற்றொழிலைத் தங்கள் சீவியத்துக்கு உயிருட்டும் தொழிலாகக் கைக்கொண்டனர். எனவே இத்தொழிலுக்கும் தமக்குப் பாதுகாவலராக யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரும், மீன்பிடித் தொழிலைச் செய்தவருமான சந்தியோகுமையோர், யாக்கோ படையாளி என்று அழைக்கப்படும் அர்ச். பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர். எனவே தமது பாதுகாவலராகத் தெரிந்து கொண்ட புனிதரின் பெயரில் சிற்றாலயத்தை உருவாக்கியுள்ளனர். புனித யாகப்பரின் பாதுகாவலைக் கொண்ட மக்கள் ஆழ் கடலில் மட்டுமன்றித் தரையிலும் இன்னலின்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். என்றும் அவரது துணை தமக்கு அவசியம் எனக்கருதினார்கள். அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது.

புதிய ஆலயத்தின் கட்டுமானப்பணி[தொகு]

கரையூரில் அர்ச். சந்தியோகுமையோரின் அப்போஸ்தலர் சிற்றாலயம் அமைக்கப்பட்டிருந்தபோதும், அங்கு அவ்வப்போது 'வழி மீசாம்' முறையில் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், பெருகி வந்த மக்கள தொகைக்கேற்ப அவர்களுக்கு வழிபாட்டு வசதி மேலதிகமாகத் தேவைப்பட்டது. 'வழி மீசாம்' இல்லாமல் குருவானவர் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த தேவைகளின் நிமித்தம் ஏற்கனவே மேல்மாடியுடன் கூடியதாக அமைக்கப்பட்டதும், விசாலமற்று இருந்ததுமான சிற்றாலயம் பெரிய ஆலயமாக மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உணரப்பட்டதும், சிற்றாலயச் சுற்றாடலில் வாழ்ந்த மக்கள் 39 குடும்பங்களின் உறுப்பினர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களின் தளராத முயற்சிக்கு உதவ முன்வந்தார் வண.லெயோ மொறுவா அடிகளார்.

1850 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வந்திறங்கிய வண. லெயோ மொறுவா அடிகளார் 1858–1868 காலப்பகுதியில் யாழ். மேற்றிராசனக் கோவிலில் கட்டளைக் குருவாகவும் பின்னர் குருமுதல்வராகவும் பணியாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் சந்தியோகுமையோர் அப்போஸ்தலர் சிற்றாலயத்தில் வழிமீசாகவும் கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணத்திலேயே சிறப்பானதெனக் கருதப்பட்டதும், பல கலையம்சங்களை உள்ளடங்கியதுமான இப்போதுள்ள ஆலயத்திற்குரிய வரைபடத்தை வரைந்து, 1861ல் ஆடி 25ல் (சந்தியோகுமையோர் திருநாளன்று) ஆலயத்திற்கான அத்தியாரக்கல்லை நாட்டி ஆலயக் கட்டுமானப் பணியை ஆரம்பித்து வைத்தவர் இவரேயாவார். இவரது சேவையை நினைவுகூர்ந்து 1898 இல் ஆலயத்தின் உட்பக்கம் தூரிகை கொண்டு அழகாக வரையப்பட்ட இவரது உருவப்படம் திரைநீக்கம் செய்யப்பட்டது. ஆலயத்திருத்த வேலையின் பின்னர் அப்படம் குருமனையில் வைக்கப்பட்டது. படத்தின் பின்புறம் குருகுல மக்களின் கொடியான மகரக் கொடியும் வரையப்பட்டிருந்தது.

வண. லெயோ மொறுவா அடிகளாரின் நேரடிக் கண்காணிப்பில், குருநகர் பங்கைச் சேர்ந்த மேஸ்திரியும், ரோமானிய கட்டடக் கலையை நன்கு அறிந்திருந்த சிற்பாசிரியருமான குருநகர் 'சந்தியோகு' அவர்களின் தலைமையில் பல கரையூர் மேஸ்திரிகள் இணைந்து ஆற்றிய வேலைத் திறமையினாலும், மக்களின் பேராதரவினாலும் மிகச் சிறந்த முறையில் ரோமானிய கட்டக்கலை வடிவமைப்பில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு துரித துரித வளர்ச்சி கண்டது.

புனித யாகப்பர் ஆலயப் பங்கு[தொகு]

புனித யாகப்பர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 17. சூலை 1892 தனிப்பங்காக இயங்கத் தொடங்கும் வரை அனைத்துப் பணிகளும் யாழ். புரி கொஞ்சேஞ்சி மாதா கோவிலிலேயே ( மேற்றிராசனக் கோவில்) இடம் பெற்றுள்ளன. புனித யாகப்பர் ஆலயப் பங்கை போன்று யாழ். மாவட்டத்திலிருந்து ஆறு பங்குகள் இணைந்து ஒரு நிர்வாகப் பிரிவாக பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் அப்போது இருந்துள்ளது. இதனால் புனித யாகப்பர் ஆலயப் பங்கில் வாழ்ந்த மக்களின் திருச்சபை சார்ந்த அத்தியவசியப் பதிவுகளான ஞானஸ்தானம், முதன்நன்மை, உறுதிப்பூசுதல், திருமணம், இறப்பு போன்றவை மேற்றிராசனக் கோவிலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவற்றுக்குரிய நிகழ்வுகளும் அங்கேயே நிகழ்ந்துள்ளன. பரி.கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருவிழாவில் 10ஆம், 11ஆம் நோவனைகளையும், பாஸ்கு காலத்தின் புனித வாரத்தில் நடைபெற்ற 'உடக்குப்பாஸ'; காண்பித்தலின் போது 8ம் பிரசங்கம் வாசிப்பதையும் இவர்களே பொறுப்பேற்று செய்துவந்துள்ளார்கள். கோவில் நிர்வாகத்திலும் இணைந்து செயற்பட்டதுடன் பொறுப்பான பதவிகளையும் வகித்துள்ளார்கள்.

'இக் கோவில் தொடங்கிய அக் காலத்திலே இத் தேவாலயத்துக்கு இப்போது சேர்த்திருக்கும் அவ்வளவு விஸ்தாரமான நிலம் இருந்திருக்கவில்லை. இக்கோயில் கட்டுவதற்கான நிலத்தை சிலர் நன்கொடையாகக் கொடுத்தவர்கள் இக் கோவிற் திருநாளாகிய ஆவணித் திருநாளின் 10ம் 11ம் நோவனைகளைத் தற்காலம் நடத்திவருபவர்களின் முன்னோராகிய தொம்மைப்பிள்ளை அந்தோணிப்பிள்ளையும்இ அரசு நிலையிட்ட முதலியார் பெண் மரியைப்பிள்ளையும் சுவாம்பிள்ளை சூசைப்பிள்ளையாரும், பிலிப்பர் நீக்கிலாப்பிள்ளையும் நல்லதம்பி முதலியவர்களுமாம்'. இவை மட்டுமன்று. ஆலயத்தின் தேவைகளுக்கேற்ப பல அன்பளிப்புக்களையும் செய்துள்ளார்கள். '1883 ஆம் ஆண்டு எம். எம். எதிர்மன்னசிங்கம் என்பவர் அடுத்த வருட பாஸ்குத் திருநாள் பாவனைக்காக ஒரு பெரிய சிலுவையைச் செய்வித்துக் கொடுத்தார்' மற்றும் 1908 ஆம் ஆண்டு எம்.பி. எதிர்மன்னசிங்கி என்பவர் ஆசந்தி அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கு அடையாளமாக ஆசந்தியில் 'M.P. Edirmanasinche 4. சூன் 1908 எனக் குறிப்புக் காணப்படுகின்றது.

மேற்றிராசனக் கோவிலில் ஒன்றித்த நிர்வாகத்திற்கு மேற்குறித்தவை போன்று பலவகையிலும் உறுதுணை வழங்கிவந்துள்ளார்கள். புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ். அடைக்கல அன்னை ஆலயத்தையும்இ குருநகர் புதுமை மாதா ஆலயத்தையும் இணைத்து ஒரே நிர்வாக அலகாக உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டு ஆலயங்களினதும் பணிகள், பதிவுகள், நிகழ்வுகள் யாவும் புனித யாகப்பர் ஆலயத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. Mandate of the Delegate Apostolic, dated 30 Oct 1895 அறிக்கையின்படி 30. அக்டோபர் 1895 இல் இம் மூன்று ஆலயங்களிலும் 2045 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள். இந்தத் தொகை அன்றைய மேற்றிராசனக் கோவில் கத்தோலிக்கர் தொகையில் சரிபாதியாகும். 28. சூலை 1909 யாழ். அடைக்கல அன்னை ஆலயம் புனித யாகப்பர் பங்கில் இருந்து பிரிந்து தனிப்பங்கு ஆனது. இதன் பின்னர் 1917 இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பரி. புதுமைமாதா ஆலய மக்களையும் சேர்த்து புனித யாகப்பர் ஆலயப் பங்கில் 1764 கத்தோலிக்க மக்கள் இருந்துள்ளார்கள்.

இன்றுவரை குருநகர் புனித யாகப்பர் பங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள குருநகர் பரி. புதுமை மாதா ஆலயமானது முன்னர் களிமண்ணால் அமைக்கப்பட்ட சிற்றாலயமாக இருந்தாகப் பாரம்பரியம் உள்ளபோதும், 1850 ஆம் ஆண்டளவில் பரி. கொஞ்சேஞ்சி மாதா கோவில் திருத்தம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட தூண் மரங்களைக் கொண்டு 28. ஆகத்து 1887 இல் இவ் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதாகும்.

ஆலயத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்[தொகு]

1624 இல் ஞானஸ்நானம் பெற்ற குருநகர் மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அதே ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக அறியப்படும் அர்ச். சந்தியோகுமையோர் சிற்றாலயத்தில் 1. நவம்பர் 1783 இல் வண. பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்களின் ஆன்மீகத் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப ஆலயத்தில் செய்யப்பட்ட தூர நோக்க சிந்தனையுடனான திருத்தங்களில் ஒன்றாக, மேல்மாடியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் வரலாற்றுப் பெருமைக்கு சான்றாக விளங்கியது. இந்த ஆலயம் 1850 இல் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்களின் பெருக்கத்திற்கேற்ப எதிர்கால இடர்களைக் களையும் முகமாக, வரலாற்றில் இடம்பெற்ற பெரு வளர்ச்சியாக பலராலும் புகழ்ந்து பேசப்படும் அழகிய தூபிமாடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய ஆலயம் வரை காணப்பட்ட வியத்தகு வளர்ச்சியை கால அடிப்படையில் பட்டியலிடுவதே சாலச் சிறந்தது என்பதால் அத்திபாரமிடப்பட்ட 25. சூலை 1861 இன்றுவரை தொடராக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின், சில திகதிகள் ஆலயத்தின் திகதிகள் ஆலயத்தின் வெளிப்பக்க கதவு, யன்னல் நிலைகளுக்கு மேலே பொறிக்கப்பட்டுள்ளன.

  • 25. சூலை 1861: பிரமாண்டமான புதிய சந்தியோகுமையோர் ஆலயத்திற்கான அத்திபாரக்கல் வண. லெயோ மொறுவா அடிகளாரில் நாட்டப்பட்டது.
  • 1864: கரையூர் குடியிருப்பிலிருந்த மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆலய வளவில் 18 அடி விட்டத்தையும் 35 அடி ஆழத்தையுடைய கிணறு தோண்டி கட்டப்பட்டது.
  • 1880: ஆலயத்தின் தேவைக்காக உள்ளுரில் வார்க்கப்பட்ட மணி 398,44 இற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
  • 1889: பழைய ஆலயம் இருந்த இடத்தில் குருக்களின் இருப்பிடத்திற்கான குருமனை கட்டுவதற்கு அத்திவாரம் இடப்பட்டது.
  • 17. சூலை 1892: மேற்றிராசனக் கோவிலிலிருந்து தனி பங்காக பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1896: ஆலய கட்டுமானப் பணிக்கு பெரும் பங்காற்றிய வண. லெயோ மொறுவா அடிகளாரின் இறப்பு.
  • 1898: பிரதான பீடத்தில் திரு இருதய ஆண்டவரின் பெரிய சுரூபம் ஏற்றிவைக்கப்பட்டது.
  • 1901: 650 ரூபா செலவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆலயத்திற்கென பெரியதொரு மணி அளிக்கப்பட்டது.
  • 1909: 17. சூலை 1892 முதல் புனித யாகப்பர் பங்குடன் இணைக்கப்பட்டிருந்த யாழ். பரி. அடைக்கல அன்னை லயம் தனிப் பங்காக பிரிக்கப்பட்டது.
  • 1913: புதிய மணிக்கோபுரத்திற்கு அதி மேற்றாணியார் மகா வந். டாக்டர் ஏ. டொன்டன்வில் O.M.I அவர்களால் அத்திபாரக்கல் நாட்டப்பட்டது.
  • 1917: கோவில் வளவில் 1900.00 ரூபா செலவில் ஆண்கள் பாடசாலைக்காக கட்டட நீடிப்பு வேலைகளும் திருத்த வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.
  • 1922;: கோவிலின் உள் சுவர்களில் தத்ரூபமான சிலுவைப்பாதைச் சிற்பங்கள் தொங்கவிடப்பட்டன.
  • 1932: இக்கோவல் பங்கைச் சேர்ந்த அன்ரனைனஸ் மற்றும் அ. ஞானபிரகாசம் ஆகியோர் குருப்பட்டம் பெற்று குருநகர் பங்கின் முதல் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். இவர்களின் திருநிலைப்படுத்தல் நிகழ்வு இவ்வாலயத்திலேயே இடம்பெற்றது.
  • 1935: இவ்வாலயத்தைச் சேர்ந்த மேரி லொயோலா திருக்குடும்ப கன்னியர் சபையில் முதல் துறவியாக நித்திய வாக்கு கொடுத்தார்.
  • 1942: உடக்குப் பாஸ் முதல் முதலாக இவ்வாலயத்திலேயே காண்பிக்கப்ட்டது.
  • 1961: வண. பிதா. ஏமில் பொம்க்கோ அவர்களின் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத மக்கள 3 மாதங்களாக ஆலயம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
  • 1961: நூற்றாண்டு நிறைவு விழா மிக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு நிறைவு மலர் வெளியிடப்பட்டது
  • 1965: 'சந்தியோகுமையோர் ஆலயம்' என்ற பழைய பெயர் 'புனித யாகப்பர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1968: 24ம் திகதி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய நத்தார் திருப்பலியில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு 12.00 மணிக்கு முடிந்த பின்னர் யாழ். போலிஸ் அதிகாரி திரு. டுயஸ் அவர்களின் தலமையில் வந்த பொலிஸாரினால், வழிபாட்டில் இருந்த மக்கள்து கடுமையாகத் தாக்கப்பட்டனர. இரத்தம் சிந்தி காட்சி அளிக்கப்பட்ட ஆலயம் மூன்று நாட்களின் பின்னர் துப்பரவு செய்யப்பட்டு ஆயர் ஐே. எமலியானுஸ் அவர்களினால் அபிஸேகம் செய்யப்பட்டது..
  • 1986: 10. சூன் 1986 அன்று மண்டைதீவு முனை கடற் பகுதியில் படுகெலை செய்யப்பட்ட குருநகரைச் சேர்ந்த 31 தொழிலாளர்களின் மரண ஊர்வலத்தின் போது ஆலயத்தில் பகிரங்க வழிபாடு நடைபெற்றது. வரலாறு காணாத நிகழ்வாக இது நடைபெற்றது.
  • 1986: 25. சூலை 1987 125 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • 1990: இலங்கை இராணுவத்தினர் தமிழ் விடுதலைப் புலிகளின் மோதல் காரணமாக குருநகர் மக்களின் ஒட்டுமொத்தமாக இடப்பெயர்வினால் ஆலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.
  • 1993: 13. நவம்பர் 1993 இவ்வாலயம் 'சுப்பர்சோனிக்' விமானம் வீசிய குண்டுகளால் தகர்க்கப்பட்டது. அவ்வேளை ஆலயத்தினுள் செபம் சொல்லிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பது பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயமடைந்தார்கள்.
  • 1993: 5. திசம்பர் 1993 ஆலயத்தை இலக்குவைத்து இரண்டாவது தlti 'பொம்பர்' விமானத்தால் வீசப்பட்ட குண்டு வீசப்பட்டு ஆலயத்தின் புனித அருளப்பர் சுருபம் நொறுங்கி விழுந்தது.
  • 1998: ஆலய வழபாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்க வண. ப.பி. பொணிபஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் குருநகர் பங்கு மக்கள் 15 வலையங்களாகப் பிரிக்கப்பட்டனர.;.
  • 2002: பங்குத்தந்தை அ.பி. ஐெயசேகரம் அடிகளாரின் ஏற்பாட்டில், தவக்கால வழிபாட்டுடன் இணைந்ததாக தவக்காலத்தின் 5ம் வாரத்தில் நாட்டின் சமாதானம் வேண்டி, சிலுவைகளைத் தமது தோள்மீது தாங்கி சிறுவர்இ வயோதிபர்இ இளைஞர்கள் இணைந்து, சாட்டி சிந்தாத்துரை மாதா கோவிலை நோக்கி பாத யாத்திரையாகச் சென்றார்கள்.
  • 2003: விமானக் குண்டுவீச்சினால் நிகழந்த ஆலயத் தகர்ப்பின் 10வது ஆண்டை நினைவு கூரும் முகமாக, முதலாவது குண்டு விழுந்து கட்டத்தின் கிழக்குப் பக்க பகுதி நொறுங்கி, ஒன்பது பேர் பலியான இடத்தில் அருள்கலாநிதி அ.பி.ஐெயசேகரம் அடிகளாரால் நினைவுக்கல் பதிக்கப்பட்டது. அந்த நினைவு கல்லில் 'இறந்தவர்களுக்கு வணக்கம், இருப்பவர்களுக்கு எச்சரிக்கை' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
  • 2006: தொடர்ச்சியாக 40 நாட்கள் மகா ஞானவொடுக்கம் நடைபெற்றது.
  • 2008: 35 அன்பியக் குழுக்கள் உருவாக்கப்பட்டது.

ஆலயத்தின் அமைப்பு[தொகு]

வடக்கே பிரதான வீதியினாலும்இ கிழக்கே 6ம் குறுக்குத் தெருவினாலும் தெற்கே பாங்ஷால் வீதியினாலும், மேற்கே சென் Nஐம்ஸ் மேற்கு வீதியினாலும் சூழப்பட்டுள்ள ஆலயம், பிரதான வீதியை நோக்கிய வண்ணம் (வடக்கு நோக்கி) அமைந்துள்ளது.

ஆலயத்தின் நீளம் 232 அடி (முன் மண்டபம் நீங்கலாக), அகலம் 82 அடி, தூபிமாடத்தின் (டோம்) உயரம் 81 அடி, முகப்பின் உயரம் 58 அடியாகும். ஆலயத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட ஆறு படிகளில் இரண்டு மண்ணில் அமிழ்ந்துள்ளன. ஆலயத்தின் முகப்பில் அழகான முன் மண்டபமும் இருபருங்கிலும் சிறிய தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்களும் அமைக்கப்படடுப் பேரழகுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

ஆலயத்தின் உயர்ந்த தூபமாடம் றோமாபுரியிலுள்ள புனித பேதுருவானவர் தேவாலயத்தைப் போன்ற தோற்றத்தை உடையதாக இருக்கின்றது. ஆலயத்தின் உள்ளும் புறமும் பல சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கின்றன. தூபிமாடத்தின் தெற்கு, கிழக்கு, மேற்குப் பக்கமுள்ள முக்கோணங்களில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் மூன்று சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கண்ணுக்கு விருந்தான உயர்ந்த தூபிமாடங்களைக் கொண்ட மணிக்கோபுரங்கள் இரண்டும் தமக்கு இடையிலுள்ள முன் மண்டபத்தைத் தாங்கியிருக்க, முன்னால் இரண்டு தூண்கள் மு:டு கொடுப்பது போலவும் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் உள்ளே பெருந்தொகையான மக்கள் குழுமியிருந்து தேவாராதனைகளில் பங்கு பற்றக்கூடிய வண்ணம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.