டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சார்பில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்தின்போது ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், அவர்கள் சத்தான உணவுகளை உண்ண வழிவகை செய்யவும், பேறுகாலத்துக்கு முன் இரு மாதங்கள் மற்றும் பின் இரு மாதங்களுக்கு என மொத்தம் 4 மாதங்களுக்கு தலா ரூ.50 வீதம் மொத்தம் ரூ.200 வழங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால், கடந்த 02-05-1989 அன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டம். அதன்படி கடந்த 13-04-1989 அன்று, தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர் நலம், சத்துணவுத் திட்டம் மற்றும் சமூக நலத்துறையின் சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு (அரசாணை (நிலை) எண்: 369) பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிறகு, 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, இந்த நிதியுதவி 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், 2006-2007 நிதியாண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்தத் தொகை 12,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, 01.04.2018 முதல் 18,000 ரூபாயாக மீண்டும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

Dr-.Muthulakshmi Reddy Memorial Maternity Grant Scheme TNGovt Notification 1989

நிதியுதவி[தொகு]

இத்திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி தொகை ருபாய் 6 ஆயிரத்திலிருந்து , ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 3000/- குழந்தை பிறந்த பின்பும் , பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ. 4 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நிபந்தனைகள்[தொகு]

  • இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பயனாளி வறுமைக் கோட்டிற்குகீழ், அதற்கான தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
  • அரசு மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
  • இந்த நிதிஉதவி இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும்

தகுதிகள்[தொகு]

இந்த நிதியுதவியைப் பெற கீழ்காணும் ஏதாவது ஒரு நிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் உள்ளவர்கள்.
  • தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திட்ட உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள்.
  • குடிசை வீடு, சிறிய ஓட்டு வீடு மற்றும் சிறிய வாடகை வீட்டில் வறிய நிலையில் வசிப்பவர்கள்.
  • தொகுப்பு வீடுகள், சுனாமி அழிவினால் கட்டித்தரப்பட்ட வீடுகள் மற்றும் அரசு இலவசமாக வழங்கப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள்.
  • விவசாயக் கூலி வேலை, சலவைத் தொழில், ஆட்டோ முதலான வாகனங்களை தினக்கூலிக்கு ஓட்டுபவர்கள்.
  • கல்குவாரி, சுண்ணாம்பு காளவாய், செங்கல் சூளை போன்றவற்றில் தினக்கூலிக்கு வேலை செய்பவர்கள்.
  • சொந்த வீடு இருந்தும் கூலி வேலை செய்பவர்கள்.
  • நிலமற்ற ஏழைகள்.
  • குடும்பத் தலைவர் பருவ காலத்திற்கு ஏற்றவாறு வெளியூர் சென்று கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவர்கள்
  • பெண்கள் குடும்பத்தலைமைப் பொறுப்பேற்ற குடும்பங்கள்.
  • வேலைக்குச் செல்ல இயலாதவர்கள்.

தேவையான சான்றுகள்[தொகு]

  • தாய்சேய் நல அட்டையின் நகல்
  • இலங்கைத் தமிழர் எனில் புலம் பெயர்ந்தோர் சான்றிதழ் நகல்.
  • உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினராயின் அதற்கான அட்டையின் நகல்.
  • வறுமைக் கோட்டிற்குட்பட்டவராக இருப்பதற்கான சான்றிதழ்.

உசாத்துணை[தொகு]

http://www.assembly.tn.gov.in/archive/9th_1989/09_01_02.pdf