பேரரசர் முசுகுந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரிநாத்தில் தவமிருந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு விஷ்ணு காட்சி அளித்தல்

பேரரசர் முசுகுந்தன் (Muchukunda) பரத கண்டத்தின் இச்வாகு குல மன்னர் மாந்தாதாவின் மகனும், அம்பரீசனின் சகோதரும் ஆவார்.[1]

முசுகுந்தன் கேட்ட வரம்[தொகு]

ஒரு முறை தேவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், பேரரசர் முசுகுந்தன், தேவர்களுக்கு ஆதரவாக, அசுரர்களுக்கு எதிரான போரில் பல்லாண்டுகள் போராடி தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.[2] அசுரர்களுடனானப் போரில் மிகவும் களைத்திருந்த முசுகுந்தன், தனக்கு நீண்ட ஓய்வு தேவை எனக் கருதியால், இந்திரனிடம் தனக்கு நீண்ட கால உறக்கத்தையும், தனது உறக்கத்தை கலைப்பவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என வரத்தையும் கேட்டுப் பெற்றான்.

கிர்நார் மலைக் குகையில் உறங்குதல்[தொகு]

வரத்தைப் பெற்ற முசுகுந்தன் தற்கால குசராத்து மாநிலத்தின் கிர்நார் மலையின் குகையில் படுத்து உறங்கினான்.

காலயவனனின் மரணம்[தொகு]

எவ்வித ஆயுதங்களால் கொல்லப்படாத வரம் பெற்றவனும், கொடூரக் குணம் படைத்தவனுமான காலயவனன் என்பவன், கிருஷ்ணரைக் கொல்ல துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். போரின் ஒரு கட்டத்தில் காலயவனன் பார்க்கும் படி, கிருஷ்ணர் தனது தேரைப் போர்க்களத்திலிருந்து, கிர்நார் மலையை நோக்கிச் செலுத்தினார். காலயவனனும் கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து விரட்டினான்.

கிருஷ்ணர், முசுகுந்தன் படுத்திருந்த கிர்நார் மலைக் குகையினுள் நுழைந்து ஒளிந்து கொண்டார். கிருஷ்ணரைத் தேடி வந்த காலயவனன், முசுகுந்தன் படுத்திருந்த இருட்டுக் குகையில் நுழைந்து தேடும் போது, அங்கே படுத்திருந்த முசுந்தனை, கிருஷ்ணன் என நினைத்து, முசுகுந்தன் மேல் பாய்ந்தான். உறக்கத்திலிருந்து விழித்த முசுகுந்தன், காலயவனனைப் பார்த்தவுடன், காலயவனன் சாம்பலாகி இறந்து போனான்.

வீடுபேறு[தொகு]

இந்து தொன்மவியலின் படி, இராமனின் முன்னோரான முசுகுந்த சக்கரவர்த்தி, திரேதா யுகத்தில் பிறந்தவர். ஆனால் கிருஷ்ணர் துவாபர யுகம் முடியும் காலத்தில் வாழ்பவர். ஏறக்குறைய ஒரு யுக காலம் குகையில் உறக்கத்தில் இருந்த முசுகுந்த சக்கரவர்த்தி, குகையில் கிருஷ்ணரைக் கண்டு நடந்தவற்றை அறிந்தார். பின்னர் கிருஷ்ணரின் அறிவுரைப் படி, இமயமலையில் உள்ள பத்ரிநாத்திற்குச் சென்று தவமிருந்து வீடுபேறு அடைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.urday.com/muchukunda.html
  2. http://www.mythfolklore.net/india/encyclopedia/muchukunda.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-09-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசர்_முசுகுந்தன்&oldid=3590348" இலிருந்து மீள்விக்கப்பட்டது