தாமசு ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் தாமசு ரோ
பிறப்புc. 1581
வான்சுடெடின் அருகில் கீழ் லெய்டன், எசெக்சு
இறப்பு6 நவம்பர் 1644
பெற்றோர்சர் இராபர்ட் ரோ
எலினோர் ஜெர்மி
வாழ்க்கைத்
துணை
சீமாட்டி எலெனோர் பீசுடன்

சர் தாமசு ரோ (Sir Thomas Roe, c. 1581 – 6 நவம்பர் 1644) முதலாம் ஜேம்சு, எலிசபெத் காலத்து ஆங்கில நல்லுறவு பேராளர் ஆவார். 1614க்கும் 1644க்கும் இடையே பல முறை இங்கிலாந்தின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த கல்வியாளராகவும் அறிஞராகவும் விளங்கினார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

தாமசு ரோவின் ஜஹாங்கீர் அரசவைப் பயணம் குறித்த டச்சு ஓவியங்கள்

ரோ எசெக்சு கவுன்ட்டியில் வான்சுடெட் அருகிலுள்ள கீழ் லெய்டனின் சர் இராபர்ட் ரோ, எலினோர் ஜெர்மி இணையருக்குப் பிறந்தார். தனது 12வது அகவையிலேயே, சூலை 6, 1593இல் ஆக்சுபோர்டின் மக்டலென் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக நுழைவிற்குத் தேர்வானார். 1597இல் இங்கிலாந்தின் சீர்மிக்க வழக்கறிஞர் குழாமான மிடில் டெம்பிளில் உறுப்பினரானார்.[1] இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தின் அவையில் சீமான் (எஸ்குயர்) ஆனார். சூலை 23, 1604இல் முதலாம் ஜேம்சு இவரை நைட் எனப்படும் ஆண்தகை ஆக்கினார். 1610இல் இளவரசர் என்றி இவரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார்.

1615 முதல் 1618 வரை ஆக்ராவில் இங்கிலாந்தின் தூதராக இருந்த சர் தாமசு ரோ முன்னிலையில் ஜகாங்கீர் கொடையளித்தல்.

1614இல், இங்கிலாந்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1615 முதல் 1618 வரை இந்தியாவின் ஆக்ராவில் மொகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் அவையில் இங்கிலாந்து அரசரின் தூதராக விளங்கினார். இவரது முதன்மை நோக்கம் சூரத்திலிருந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆலைகளுக்கு பாதுகாப்புக் கோருவதாகும். அரசவையில் விரைவிலேயே ஜகாங்கீரின் நட்பை வென்று இருவரும் இணைந்து மதுவருந்தும் பங்காளி ஆனார். அப்போது இவர் எழுதிய நாட்குறிப்பு ஜகாங்கீர் ஆட்சிக்கான மதிப்புமிக்க மூலமாக விளங்குகின்றது.

1621இல், மீண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] உதுமானியப் பேரரசுக்கான இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்டார். தமது பணிக்காலத்தில் இங்கிலாந்து வணிகர்களுக்கு பல உரிமைகளை நீட்டித்தார். 1624இல் அல்சியர்சுடன் உடன்பாடு கண்டு பல நூறு ஆங்கில போர்கைதிகளை விடுவித்தார்.

1629இல் ரோ சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையேயான அமைதி காணும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டார். இதன்மூலம் சுவீடனின் அரசர் குசுதவுசு அடோல்பசு முப்பதாண்டுப் போரில் ஈடுபட முடிந்தது. ரோ மேலும் தான்சிக்கிற்கும் டென்மார்க்கிற்கும் இடையே உடன்பாடு காண உதவினார். 1630இல் தாயகம் திரும்பினார். 1631இல், லூக் பாக்சின் ஆர்க்டிக் தேடுதலுக்கு நிதியாதரவு வழங்கினார்; கனடாவிலுள்ள நீரிணை ரோசு வெல்கம் சவுண்டு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

மேற்சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாமசு ரோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 W R Williams Parliamentary History of the County of Gloucester
  2. "JSTOR: The History of American Ornithology before Audubon". பார்க்கப்பட்ட நாள் 2008-04-09. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ரோ&oldid=3858042" இலிருந்து மீள்விக்கப்பட்டது