புந்தேல்கண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புந்தேல்கண்ட்
बुन्देलखण्ड
புவியியல் பகுதி
ஜஹாங்கீர் அரண்மனை, ஓர்ச்சா
ஜஹாங்கீர் அரண்மனை, ஓர்ச்சா
இந்தியாவில் புந்தேல்கண்ட்
இந்தியாவில் புந்தேல்கண்ட்
நாடு இந்தியா
இனங்கள்புந்தேல்கண்டி
மொழிகள்
 • முக்கிய மொழிகள்புந்தேலி மொழி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
 • கோடை (பசேநே)+05:30 (ஒசநே)
அரச குலங்கள்இராஜபுத்திர சந்தேலர்கள்
தலைநகரங்கள்கஜுராஹோ
கலிஞ்சர்
மகோபா
ஓர்ச்சா
கர்குந்தர்
முடியாட்சிகள்ஜுஜௌதி (1446)
ஓர்ச்சா (1501), ததியா
பன்னா (1732), அஜய்கர் (1765), பெஜவார் (1765), சர்க்காரி
சம்தார்
சரிலா

புந்தேல்கண்ட் அல்லது பந்தேல்கண்ட் (Bundelkhand) மத்திய இந்தியாவின் புவியியல் பகுதிகளில் ஒன்றாகும். மலைத்தொடர்களால் சூழ்ந்த புந்தேல்கண்ட் பகுதிகள் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களை பிரிக்கிறது. புந்தேல்கண்ட் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற கஜுராஹோ கோயில்கள் இப்பகுதியில் உள்ளது.

புந்தேல் கண்ட் பகுதி வறண்ட வானிலை கொண்ட, நீர் ஆதாரம் குறைந்த மலைப்பாங்கான காடுகளுடன் கூடிய மேட்டு நிலங்களாகும். சந்தேலர்கள் போன்ற பழங்குடி மக்கள் நிறைந்த புந்தேல்கண்ட் பகுதியினை மேம்படுத்தப்பட்ட புந்தேல்கண்ட் தனி மாநிலமாக பிரிக்க புந்தேல் கண்ட் பகுதியில் வாழும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புந்தேல் கண்ட் பகுதிகளில் புந்தேலி மற்றும் இந்தி மொழி பேசுகின்றனர்.

சந்தேலர்கள் இப்பகுதியை கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை புந்தேல்கண்ட் பகுதியை ஆண்டனர்.

புந்தேல்கண்ட் பகுதிகள்[தொகு]

புந்தேல் கண்ட் பகுதியில் உத்தரப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களும்; மத்தியப் பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களும் உள்ளது.

உத்தரப் பிரதேசம்[தொகு]

புந்தேல் கண்ட் பகுதியில் உள்ள் உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா.

மத்தியப் பிரதேசம்[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் மாவட்டங்கள் புந்தேல் கண்ட் பகுதியில் உள்ளது.

சிறப்புகள்[தொகு]

கஜுராஹோ கோயில்கள்

உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான தொல்லியல் சிறப்பு மிக்க பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய சிற்பங்கள் நிறைந்த கஜுராஹோ கோயில்கள், இராமாயணம் எனும் இதிகாசத்தில் சுட்டப்படும் சித்திரகூடம், மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கலிஞ்சர் கோட்டை புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது.

பன்னா மாவட்டத்தில் நவரத்தின கற்கள் நிறைந்த சுரங்கங்கள் உள்ளது.

புவியியல்[தொகு]

புந்தேல் கண்ட் நிலப்பகுதியின் வடக்கில் கங்கைச் சமவெளியும், தெற்கில் விந்திய மலைத்தொடர்களும் அமைந்துள்ளது. இப்பகுதி வறண்ட வானிலை கொண்ட, நீர் ஆதாரம் குறைந்த மலைப்பாங்கான அடர்ந்த காடுகளுடன் கூடிய மேட்டு நிலங்களாகும்.

புந்தேல் கண்ட் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து அதிக பட்சம் 600 மீட்டர் உயரத்தில் அமைந்த விந்திய மலைத்தொடர்கள் கிழக்கிலிருந்து மேற்காக ஊடுவுருவிச் செல்கிறது. விந்திய மலைத்தொடர்களில் உற்பத்தியாகும் முக்கிய ஆறுகளான காளி சிந்து ஆறு, பேட்வா ஆறு, கென் ஆறு, ஷாசத் ஆறு, பகாகின் ஆறு, தோன்ஸ் ஆறு, பகுஜ் ஆறு, தாசன் ஆறு மற்றும் சம்பல் ஆறுகள், இறுதியாக அலகாபாத் நகரத்தில் பாயும் யமுனை ஆற்றில் கலக்கிறது.

சூழலியல்[தொகு]

வழக்கமாக புந்தேல்கண்ட் பகுதியில் ஆண்டிற்கு குறைந்தது 52 நாட்கள் மழை பொழிகிறது. சுரங்கங்கள் தோண்ட, நகரங்கள் பெருகிட, தொழிற்சாலைகள் அமைக்க காடுகள் அழிக்கப்படுவதால் இப்பகுதியில் தற்போது மழை வளம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே 2007-ஆம் ஆண்டில் புந்தேல் கண்ட் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டது.

புந்தேல்கண்ட் பகுதியில் ஆண்டு சராசரி மழை பொழிவு 800–900 மி மீட்டராகும். இறுதி ஆறு ஆண்டுகளாக இப்பகுதியின் மழை பொழிவு 400 - 450 மி மீட்டராக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் வேளாண்மைத் தொழில் மிகவும் பாதிப்படைந்து, உணவு தாணிய உற்பத்தி மிகவும் குறைந்தது. மேலும் இப்பகுதியில் மீன் பிடித்தல், காய்கறிகள் பயிரிடுதல், வெற்றிலை கொடி பயிரிடுதல் போன்ற துணைத் தொழில்களும் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.

பொருளாதாரம்[தொகு]

வறண்ட வானிலை கொண்ட புந்தேல் கண்ட் பகுதியில் உள்ள உத்திரப் பிரதேசத்தின் ஜான்சி, லலித்பூர், சித்திரக்கூட மாவட்டம், பந்தா முதலிய நான்கு மாவட்டங்களும் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ததியா, சாகர், தமோ, பன்னா, டிக்கம்கர், அசோக்நகர், சத்தர்பூர் முதலிய ஏழு மாவட்டங்களும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1]

வரலாறு[தொகு]

மத்திய காலப் பகுதி & மராத்திய ஆட்சி[தொகு]

கன்னோசி நாட்டின் பிரதிகாரப் பேரரசர்கள் குவாலியர் கோட்டையை கைப்பற்றி, கலிஞ்சர் கோட்டையை மையமாக்க் கொண்டு கி. பி 650 முதல் 1036 முடிய புந்தேல் கண்ட் பகுதியை கைப்பற்றி ஆண்டனர். பின்னர் சந்தேல இராஜபுத்திர குல மன்னர்கள் புந்தேல் கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.

வித்தியாதரண் எனும் சந்தேல இராஜபுத்திர மன்னன் (1017–29) வடக்கே சம்பல் ஆறு முதல் தெற்கே நர்மதை ஆறு வரை புந்தேலி கண்ட் அரசை விரிவு செய்தார்.

சந்தேல குல இராஜபுத்திர மன்னர் வித்தியாதரன் ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் மன்னர் கஜினி முகமது புந்தேல்கண்ட் பகுதியின் தலைநகராக விளங்கிய கலிஞ்சர் கோட்டை தாக்கப்பட்டது. சந்தேல இராஜபுத்திர குல ஆட்சியில் புந்தேல் கண்ட் பகுதியில் சமண சமயம் வளர்ந்தது. பத்தாம் நூற்றாண்டு முதல் பதினோறாம் நூற்றாண்டு காலத்தில் கஜுராஹோ பகுதியில் சமணர் கோயில்கள் மற்றும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டது.

12-ஆம் நூற்றாண்டில் ஆஜ்மீரை ஆண்ட சௌகான் குல இராஜபுத்திர மன்னர் புந்தேல்கண்ட் பகுதியின் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பதினாறாம் நூற்றாண்டில் ஓர்ச்சா நகரத்தை தலைநகராகக் கொண்டு இராஜா ருத்திர பிரதாப சிங் 1531 முடிய புந்தேல்கண்ட் பகுதியை ஆண்டார். 22 மே 1545 அன்று சேர் சா சூரி புந்தேல் கண்ட் பகுதியின் கலிஞ்சர் கோட்டையை தாக்கும் போது புந்தேலி இராஜபுத்திரர்களால் கொல்லப்பட்டார்.

பாபர் முதல் அவுரங்கசீப் வரை புந்தேல்கண்ட் பகுதி பெயரளவில் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை மொகலாயப் பேரரசில் இருந்தது.

மராத்தியப் பேரரசின் பேஷ்வாவாவின் பேரன், உத்தரப் பிரதேசத்தின் தற்போதைய பந்தா மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு புந்தேல் கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.

பிரித்தானிய ஆட்சி, 1802–1947[தொகு]

இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரின் முடிவில் மராத்திய கூட்டணிப் படைகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிடம் தோற்ற காரணத்தினால் டிசம்பர் 1803-இல் மராத்திய அரசர் இரண்டாம் பாஜிராவுக்கும் - ஆங்கிலேயே கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வசாய் உடன்படிக்கையின் படி மராத்தியர் வசமிருந்த புந்தேல்கண்ட் பகுதிகள் ஆங்கிலேயர் கையில் சென்றது.

1817 – 1818-இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேயே மராத்தியப் போரின் முடிவில் மராத்தியப் பேரரசு வீழ்ச்சியுற்ற காரணத்தினால், புந்தேல்கண்ட் பகுதிகளை ஆண்ட மராத்திய குறுநில மன்னர்கள் மராத்தியப் பேரரசிலிருந்து விடுபட்டு, ஆங்கிலேயர்களுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்திக் கொண்டு சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர்.

1857 சிப்பாய் கிளர்ச்சிக்கு பின்னர், 1947-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்திய அரசின் கீழ் புந்தேல்கண்ட் பகுதியில் இந்தூர், ஓர்ச்சா, பன்னா, சம்தார், சர்க்காரி, சத்தர்பூர், ததியா, பிஜவார், அஜய்கர் என ஒன்பது சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆட்சி செய்தனர். மேலும் 13 ஜமீந்தாரிகளும் சிறு பகுதிகளை ஆண்டனர்.

இந்திய விடுதலைக்குப் பின்[தொகு]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1950-ஆம் ஆண்டில் புந்தேல் கண்ட் பகுதிகளில் இருந்த இந்திய மன்னராட்சி நாடுகளை ஒன்று சேர்த்து விந்தியப் பிரதேசம் எனும் தனி மாகாணம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956-இல் விந்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

புகழ் பெற்ற சம்பல் கொள்ளையர்களான பூரான் சிங் என்ற புஜா பப்பா, மூரத் சிங் மற்றும் பூலான் தேவியின் கொள்ளைக் கூட்டத்தின் கட்டுக்குள் புந்தேல்கண்ட் பகுதி விளங்கியது.

புந்தேல்கண்ட் மாநில வரைவோலை அறிக்கை[தொகு]

2011-ஆம் ஆண்டில் புந்தேல் கண்ட் விடுதலை இயக்கம் (Bundelkhand Mukti Morcha) உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள புந்தேல் கண்ட் பகுதியில் உள்ள மாவட்டங்களை உள்ளடக்கி புந்தேல் கண்ட் மாநிலம் என்ற தனி மாநில கோரிக்கையை அப்போதைய உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி ஏற்றுக் கொண்டார். [2] பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் ஆன உமா பாரதி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் புந்தேல் கண்ட் தனி மாநில கோரிக்கையை 2014-இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது ஏற்றுக் கொண்டது. [3] [4]

உத்தேச புந்தேல் கண்ட் மாநிலத்தின் மாவட்டங்கள்;

உத்தரப் பிரதேச மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதிகள் (இள நீல நிறத்தில்)
மத்தியப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ஏழு மாவட்டங்கள்;

மத்திய பிரதேசத்தின் கீழ்கண்ட சில மாவட்டங்களும் புந்தேல் கண்ட் பகுதிகளாக கருதப்படுகிறது.

கலாச்சாரம்[தொகு]

இந்தி மொழி எழுத்துக்களுடன் கூடிய புந்தேலி மொழி இப்பகுதியில் பேசப்படுகிறது. புந்தேலி மொழி ஏழு வட்டார வழக்கு பேச்சுகளுடன் கூடியது. புந்தேலி பகுதியில் இந்து மற்றும் சமண சமயங்கள் பெரும்பாலன மக்களால் பின்பற்றப்படுகிறது. இப்பகுதியில் பல சமணக் கோயில்கள் உள்ளது.

புகழ் பெற்ற புந்தேல் கண்ட் மக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Mayawati-kind-of-Bundelkhand not acceptable: Bundela". Highbeam.com. Archived from the original on 2015-03-29. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  3. "Uma Bharti promises separate Bundelkhand to voters in Jhansi". Indianexpress.com. 2014-04-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.
  4. "LS polls: Pradeep Jain Aditya, Uma Bharti promise separate Bundelkhand state". News18.com. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தேல்கண்ட்&oldid=3792828" இலிருந்து மீள்விக்கப்பட்டது